

விண்வெளிப் பயணம் என்றாலே ஆச்சரியம்தான். அதிலும் நிலவு சம்பந்தமானது என்றால் ஒருவிதச் சுவாரசியத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது. சாதாரண மக்களுக்கு இதில் ஏதாவது பயன் இருக்கா?
சாமானிய மக்கள் மீதான தாக்கங்கள்:
இப்போது நடக்கும் விண்வெளிப் பயணங்கள் அல்லது எதிர்கால திட்டத்தில் உள்ள ஆர்டெமிஸ் (Artemis) விண்வெளிப் பயணங்கள் அதில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள், விஞ்ஞானிகளுக்கு மட்டும் பலன்களைத் தருபவை அல்ல. அவை மனித சமூகத்தில் பல ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
இந்தத் திட்டத்திற்காக செய்யப்பட்ட விண்வெளி ஆய்விலிருந்து கிடைக்கும் தொழில்நுட்ப விஷயங்கள் காலப்போக்கில் மக்களாகிய நம் அன்றாட வாழ்வில் இடம்பிடிக்கின்றன. விண்கலங்களுக்காக உருவாக்கப்பட்ட விஷயங்கள் காலப்போக்கில் நமக்கான நுகர்வோர் பொருட்களாகவும், மருத்துவத்துறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான பொருட்களாகவும் பயன்பட்டு, மனிதர்களுக்குத் தேவையான பல எரிசக்தி அமைப்புகளைக்கூட மேம்படுத்தக்கூடும்.
உளவியல் ரீதியாகப் பார்த்தால், ஆர்டெமிஸ் II-ன் பயணத்தைத் திரையில் காணும் லட்சக்கணக்கானோருக்கு, அது ஒரு பிரமிப்பூட்டும் உணர்வையும், கோள்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. இது விஞ்ஞானம் சார்ந்த ஒற்றுமையையும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் பலருக்குள் வளர்க்கிறது.
பொருளாதார ரீதியாக இந்த ஆர்டெமிஸ் திட்டம் விண்வெளி, பொறியியல், தரவு அறிவியல் (Data science) துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிறது. அதேநேரத்தில் அடுத்தத் தலைமுறையினரை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த தரமான கல்வியைத் தொடரவும் ஊக்குவிக்கிறது. ஆக சாமானிய மக்களுக்கு இது சிறந்த தொழில் வாய்ப்புகளையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது.
ஆர்டெமிஸ் விண்வெளி திட்டத்தில் உள்ள தனித்துவம்:
1972 வரை நிகழ்ந்த அப்போலோ திட்டங்கள் போலல்லாமல் ஆர்டெமிஸ் திட்டம் ஒரு நிலைத்தன்மைகாக, அனைத்து தரப்பையும் உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் நிலவை நோக்கிச் செல்லும் முதல் பயணமாக ஆர்டெமிஸ் II விளங்குகிறது.
இதன் ஓரியன் (Orion) விண்கலத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட 10 நாள் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
அதுவும் முற்றிலும் அமெரிக்கர்களால் சாத்தியமாக்கப்பட்ட அப்பல்லோவை போலில்லாமல்; இந்தத் திட்டம் பல நாடுகளின் கூட்டு சர்வதேச விண்வெளித் திட்டமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மற்றொரு தனித்துவமான அம்சம், இதுவரை நடந்த நிலவுப் பயணங்களில் நடக்காத ஒரு விஷயம். அதுதான் மனிதகுலத்தின் சமநிலையைக் குறிக்கும் வகையில், நிலவில் முதல் பெண்ணையும், முதல் கறுப்பின மனிதரையும் தரையிறக்க நாசா எடுத்த முயற்சி.
மேலும், இந்த ஆர்டெமிஸ் பயணங்கள் அப்பல்லோ போல் வெறும் நிலவைப் பார்வையிடுவதற்காக மட்டுமல்ல; அவை செவ்வாய் கிரக ஆய்விற்கான முதற்படியாகவும் பார்க்கப்படுகிறது.
வேற்றுக்கிரகத்தில் எப்படி உயிர் வாழலாம்? ஆழ்ந்த விண்வெளி சார்ந்த பயணங்களை எப்படி மேற்கொள்ளலாம்? மற்றும் நிலையான நிலவுக்கான ஒரு வாழ்விடம் (Sustainable lunar habitats) போன்றவைகள் அடுத்தடுத்த ஆர்டெமிஸ் திட்டங்களில் சோதித்துப் பார்க்கப்படும்.