ஒருவர் இறந்த பிறகு கைரேகை மற்றும் முக அடையாளத்தை வைத்து அவரது போனை திறக்க முடியுமா?

ஒருவர் இறந்த பிறகு அவருடைய ஸ்மார்ட்போனைத் திறக்க முடியுமா? தொழில்நுட்பமும் சட்டமும் என்ன சொல்கிறது?
smartphone with fingerprint
ஸ்மார்ட்போன் பாதுகாப்புImage credit: AI Image
Updated on

நவீன உலகில் ஸ்மார்ட்போன்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள், புகைப்படங்கள் என அனைத்தையும் நாம் அதில் சேமித்து வைத்துள்ளோம். ஒரு நபர் இறந்த பிறகு, அவருடைய கைரேகை (Fingerprint) அல்லது முக அடையாளத்தை (Face ID) பயன்படுத்தி, அவருடைய ஸ்மார்ட்போனைத் திறக்க முடியுமா? வாருங்கள் இது குறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

கைரேகை தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது?

ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் Fingerprint sensors பெரும்பாலும் 'கெபாசிட்டிவ்' (Capacitive) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.

இவை விரலின் நுனியில் உள்ள மின்சாரக் கடத்துத்திறனை உணர்ந்து செயல்படுகின்றன. உயிருள்ள மனிதர்களின் சருமத்தில் உள்ள ஈரப்பதம் மற்றும் மின்சாரத் தூண்டல்களை இந்த உணர்விகள் கண்டறியும்.

ஒரு நபர் இறந்த சில நிமிடங்களிலேயே, அவருடைய உடலில் உள்ள மின்சாரத் தூண்டல்கள் நின்று விடுகின்றன. இதனால், இறந்தவரின் விரலை வைத்து மொபைலைத் திறக்க முயற்சிக்கும்போது, சென்சார் அதை ஒரு உயிரற்ற பொருளாகக் கருதி, அங்கீகரிக்க மறுத்துவிடும். எனவே, தொழில்நுட்ப ரீதியாக இறந்தவரின் கைரேகையை வைத்து போனினைத் திறப்பது மிகவும் கடினம்.

முக அடையாளம் எப்படி வேலை செய்கிறது?

ஆப்பிள் நிறுவனத்தின் 'Face ID' போன்ற நவீன முக அடையாளத் தொழில்நுட்பங்கள் 'டெப்த் மேப்பிங்' (Depth mapping) எனும் முறையைப் பயன்படுத்துகின்றன. இவை முகத்தின் அமைப்பை முப்பரிமாணத்தில் (3D) ஸ்கேன் செய்கின்றன. மிக மேம்பட்ட சென்சார்கள், நம்முடைய கண்கள் விழித்திருக்கிறதா என்பதையும், நம்முடைய முகத்தில் உள்ள சிறிய அசைவுகளையும் கவனிக்கும். ஒரு நபர் இறந்த பிறகு, இமைகளின் அசைவு மற்றும் முகத் தசைகளின் இயக்கம் இல்லாததால், இந்த சென்சார்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக போனினைத் திறக்க அனுமதிப்பதில்லை.

இதையும் படியுங்கள்:
மொபைல் போன் முதல் போதை பழக்கம் வரை... அனைத்தையும் அடியோடு மாற்றும் புதிய தீர்வு!
smartphone with fingerprint

இருப்பினும், மிகவும் பழைய அல்லது மேம்படுத்தப்படாத முக அங்கீகாரத் தொழில்நுட்பங்கள், ஒருவரது புகைப்படத்தை வைத்தோ அல்லது அசைவற்ற முகத்தை வைத்தோ ஏமாற வாய்ப்புகள் உண்டு. ஆனால், நவீன ஸ்மார்ட்போன்கள் உயிருள்ள திசுக்களின் வெப்பம் மற்றும் அசைவுகளைக் கண்டறியும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதால், இதைச் செய்வது சாத்தியமற்றது.

சட்டப்பூர்வமான ஸ்மார்ட்போன் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விதிகள்:

தொழில்நுட்பத்தைத்தாண்டி, இதில் சட்ட ரீதியான சிக்கல்களும் உள்ளன. ஒருவரது தனிப்பட்ட உரிமைகள் அவர் இறந்த பிறகும் பாதுகாக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் கூட, சட்டப்பூர்வமான அனுமதியின்றி ஒருவருடைய தனிப்பட்ட தரவுகளை அணுகுவது தனியுரிமை மீறலாகக் கருதப்படுகிறது. பல நிறுவனங்கள், பயனரின் உயிலில் அல்லது டிஜிட்டல் மரண சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே, தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்குகின்றன.

எனவே, நாம் இறந்த பிறகு நமது தரவுகள் என்னவாக வேண்டும் என்பதைத் திட்டமிடுவது அவசியம். கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இப்போது 'Legacy Contact' அல்லது 'Digital Legacy' என்ற வசதியை வழங்குகின்றன. இதன் மூலம், நமக்கு நம்பிக்கையான ஒருவரைத் தேர்ந்தெடுத்து, நமது மறைவுக்குப் பிறகு அவர்கள் நமது கணக்கைத் திறக்க அனுமதி வழங்க முடியும். இதுபோன்ற முறையான வழிகளைப் பின்பற்றுவது, தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க உதவும்.

இதையும் படியுங்கள்:
செல்போன் நனைந்தால் என்ன செய்யக்கூடாது? ஆபத்தான பழக்கங்களை எச்சரிக்கும் வழிகாட்டி!
smartphone with fingerprint

இறுதியாக, அறிவியல்பூர்வமாக ஒரு நபரின் விரல் ரேகையோ அல்லது முகமோ அவர் இறந்த பிறகு அவரது போனினைத் திறக்கப் பயன்படாது. தொழில்நுட்பம் பாதுகாப்பை மையப்படுத்தியே வடிவமைக்கப் பட்டுள்ளது. எனவே, நமது டிஜிட்டல் தகவல்களைக் கையாள முறையான டிஜிட்டல் வாரிசுதாரர்களை நியமிப்பதே புத்திசாலித்தனமான செயலாகும்.

logo
Kalki Online
kalkionline.com