
இந்தியாவில் அரட்டை (Arattai) எனும் புதிய செயலி வாட்ஸ் அப்புக்கு போட்டியாக அறிமுகம் ஆகி உள்ளது. இது ஜோஹோ (Zoho) என்ற இந்திய நிறுவனம் உருவாக்கியது. இந்த செயலி மத்திய அரசின் ஆதரவுடன் உள்நாட்டு தொழில்நுட்ப தீர்வை தேடுபவர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய மாற்றாக உருவாகியுள்ளது. உலக அளவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியான Whatsapp-ற்கு போட்டியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த அரட்டை எனும் புதிய செயலி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
அரட்டை செயலி முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டதால் இது ஒரு 'சுதேசி' செயலியாக தேசப்பற்று மிக்க பயனர்களை அதிகம் ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்வாதிகள் திரையுலக பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இந்த செயலியை பயன்படுத்த தொடங்கினால் இதன் பயன்பாடு உச்சத்தை தொடும் என்று கருதப்படுகிறது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர்கள் இந்த செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் தற்போது பலர் இந்த செயலியை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த அரட்டை செயலியை ஆண்ட்ராய்டு, ஐபோன், டெஸ்க்டாப் மற்றும் டிவிக்களில் பயன்படுத்த முடியும். அரட்டை செயலி வாட்ஸ்அப்பைப் போலவே மெசேஜ் அனுப்புவது, ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், போட்டோக்கள், ஆவணங்கள் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை பகிரும் அம்சங்களை கொண்டு சிறப்பாக விளங்குகிறது. நெட்வொர்க் குறைவான பகுதிகளிலும் இந்த செயலியை பயன்படுத்த முடியும்.
இதன் எளிய மற்றும் நம்பகமான செயல்பாடும், தனியுரிமைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இதன் போக்கும் மக்களைக் கவர்ந்துள்ளது. பயனர்களின் தரவு தனிப்பட்டது என்றும், மூன்றாம் தரப்பினருடன் பகிரப்படாது என்று ஜோஹோ நிறுவனம் உறுதியளிக்கிறது. இருப்பிட தகவல்கள், தனிப்பட்ட விவரங்கள் உட்பட சில தரவுகளை சேகரித்தாலும், அவை என்க்ரிப்ட் (Encrypt) செய்யப்பட்டு, தேவைப்பட்டால் பயனர்கள் அவற்றை நீக்கவும் கோரலாம். அரட்டை செயலியின் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
கடந்த மூன்று நான்கு நாட்களில் அரட்டை செயலியின் தினசரி பதிவுகள் 3000திலிருந்து 3,50,000 ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் ஆதரவு, சமூக வலைதளங்களின் கவனம் மற்றும் தனி உரிமைக்கு முக்கியத்துவம் தரும் இதன் கொள்கைகள் ஆகியவை, உலகளாவிய செயலிகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக இதனை நிலைநிறுத்தி உள்ளது.
whatsapp தொடர்ந்து புதிய அம்சங்களான குழு உரையாடல்களில் ஆன்லைனில் யார் இருக்கிறார்கள் என்பதை அறியும் வசதி, நிகழ்வுகளை அமைக்கும் RSVP அம்சம், ஸ்டேட்டஸ் ஷார்ட்கட்கள் மற்றும் புதிய ஈமோஜிக்கள் போன்ற பல அம்சங்களை whatsappல் அறிமுகப்படுத்தியுள்ளது. இம்மாதிரியான புதிய அம்சங்கள் அரட்டை செயலியில் இன்னும் வரவில்லை.
இந்த செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்துவது எளிது. ஆண்ட்ராய்டை பொறுத்தவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலியை டவுன்லோட் செய்யலாம். இல்லாவிட்டால் அரட்டையின் அதிகாரப்பூர்வ இணையம் சென்று டவுன்லோட் செய்யலாம். ஐபோன் என்றால் ஆப்ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கும். டவுன்லோடு செய்யும் பொழுது அது ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலி தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.