

பூமியின் துணைக்கோள் தான் நிலா என்று அழைக்கப்படும் சந்திரன். சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று இரவு நேரத்தில் சந்திரன் பூமிக்கு வெளிச்சத்தை தருகிறது. பூமிக்கு பல்வேறு வகைகளில் பாதுகாப்பையும் பல நன்மைகளையும் சந்திரன் வழங்கி வருகிறது. பொதுவாக நாம் அதை அறியாவிட்டாலும் , சந்திரன் தான் பூமியை பாதுகாக்கும் ஒரு கவசமாக செயல்படுகிறது.
2010 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நிலவின் அழிவைப் பற்றி பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நிலா சிறிது சிறிதாக சுருங்கி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சுருங்குவதன் விளைவாக அது மெல்ல மெல்ல அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் நிலா இப்பொழுது முழுமையாக மறைந்து விடப் போவது இல்லை.
நிலா அழிந்தால் பூமி என்ன ஆபத்துகளை சந்திக்கும்?
அண்டவெளியில் பல விண்கற்கள் வேகமாக பூமியை மோத வரும்போது, பலமுறை நிலா தன் மேல் அந்த மோதலை தாங்கியுள்ளது. இது எதேச்சையாக நடைபெறும் சம்பவம் என்றாலும் , இதுவும் பூமிக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கிறது. பலமுறை விண்கற்கள் மோதியதால் தான் நிலவின் மேல் பகுதியில் ஏராளமான மேடு பள்ளங்களை கொண்டுள்ளது.
ஒருவேளை சந்திரன் மட்டும் இல்லாவிட்டால் அந்த விண்கற்கள் நேரடியாக பூமியை தாக்கக்கூடும். அதன் பேரழிவு நிச்சயமாக பல அணுகுண்டுகளின் வெடிப்புகளை விட பல ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும். நிலவின் ஈர்ப்பு விசை காரணமாக கடலில் அலைகள் தோன்றுகின்றன. தொடர்ச்சியான கடல் அலைகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனையும் அவற்றின் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் பங்கு வகிக்கின்றது.
நிலவின் ஈர்ப்பு விசையால் பூமி தனது அச்சில் சுமார் 23.5 டிகிரி சாய்ந்து சுழல்கிறது. இந்த பாகையில் சுற்றுவதால் தான் பூமி நிலையாக உள்ளது. நிலவின் ஈர்ப்பு விசை இல்லாவிட்டால் பூமியின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு, எந்த உயிரினங்களும் வாழ முடியாத அளவிற்கு மோசமான சுழற்சியை கொண்டிருக்கும். பூமியின் வேகமும் அதிகரித்து ஒரு நாள் என்பது 6 மணி நேரமாக சுருங்கி விடும்.
கால நிலையிலும் மாற்றம் ஏற்பட்டு அடிக்கடி மிகப்பெரிய சூறாவளிகள் ஏற்பட்டு பூமி பேரழிவை சந்திக்கும். மேலும் பல உயிரினங்களின் வாழ்வியல் முறைகளுக்கும், தாவரங்களையும் இனச்சேர்க்கைக்கும் சந்திரனின் ஒளி இன்றியமையாததாக உள்ளது. நிலா மறைந்து போவது பூமி அழிவதற்கான தொடக்கமாக இருக்கும்.
900 ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரன் மறைந்தது போன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றது. லைவ் சயின்ஸ் பத்திரிகையில் வெளியான தகவலின்படி, 1110 ஆம் ஆண்டில் பீட்டர்பரோ குரோனிக்கிள் என்ற கையெழுத்து பிரதியில் "மே மாதத்தின் 5 நாள் இரவில் சந்திரன் பிரகாசமாக இருந்தது . அதன் பின்னர் அதன் பிரகாசம் வெகுவாக குறைந்து போனது. நாடு முழுக்க கனமழை ஏற்பட்டு பயிர்கள் அழிந்துபோனது அதனால் பஞ்சம் ஏற்பட்டு பல அழிவுகள் நடந்தேறின.
அந்த காலகட்டத்தில் சந்திரன் மறைந்தே இருந்தது" என்று குறிப்பிட்டு இருந்தார். பின் வரும் காலங்களில் இதை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், எரிமலை, வெடிப்பினால் வளிமண்டலத்தின் மேல் உருவான கந்தகம் தூசி நிறைந்த ஒரு அடுக்கு சில நாட்கள் சந்திரனை மறைத்திருந்தன என்பதை கண்டுபிடித்தனர்.
சந்திரன் சிறிது சிறிதாக அதன் உள்ளே குளிர்ச்சி அடைவதால், அதன் மேற்பரப்பில் நிலத்தட்டு அமைப்புகள் நிலையில்லாமல் இருக்கின்றன. எதிர்காலத்தில் இவை மலைகள் போன்ற உயர்வாகவும் பள்ளங்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இது அதிகரிக்கும்போது மேலும் அழுத்தங்கள் அதிகரித்து நிலவு சுருங்கத்தொடங்கும். ஏற்கனவே நிலவு சுருங்கிக் கொண்டிருக்கும் செயல்பாட்டில்தான் உள்ளது. அதன் நீட்சியாக அது அழிந்து போகவும் வாய்ப்புள்ளது. ஆனால் , அது நடக்க இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம்.