

நள்ளிரவில் நாய் (Dog) குரைப்பதற்குப் பின்னால் ஏதோ இருக்கிறது என்று பல்வேறு கலாச்சார மக்கள் நம்பி வருகின்றனர். பல வீடுகளில், நள்ளிரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டால் பயம், பதற்றம் மற்றும் ஜன்னலுக்கு வெளியே பயத்துடன் பார்க்கும் பழக்கம் இன்றும் உள்ளது. நாட்டுப்புறக் கதைகளும், பாரம்பரிய நம்பிக்கைகளும் இரவு நேரத்தில் நாய் குறைப்பதைக் கெட்ட சகுனங்களுடன் தொடர்புபடுத்துகின்றன. அனால், அதற்குப் பின்னால் உள்ள அறிவியல் உண்மைகள் குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
பல பகுதிகள் மற்றும் கிராமப்புற சமூகங்களில், நள்ளிரவில் நாய்கள் குரைப்பது அல்லது ஊளையிடுவது வரவிருக்கும் ஆபத்து, மரணம் அல்லது அமானுஷ்ய சக்திகளின் வருகையைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. மனிதர்களுக்குப் புரியாத விசித்திரமான நிகழ்வுகளுக்குப் பின்னால் அறியப்படாத சக்திகள் இருப்பதாக அந்தக் காலத்தில் கருதப்பட்டது.
மனிதர்களை விட நாய்கள் அதிக விழிப்புணர்வுடன் இருப்பதால், மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட சக்திகளுக்கு அவை எதிர்வினையாற்றுவதாக மக்கள் தவறாகக் கருதினர். இந்த நம்பிக்கைகள் மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றியிருந்தன. அதே சமயம், இவற்றுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பதே உண்மை.
நள்ளிரவில் நாய் குறைப்பதன் அறிவியல் காரணங்கள்:
அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், இரவில் பகலை விட அமைதி சற்று அதிகமாகவே இருக்கும். இந்த சமயத்தில் நாய்களின் புலன்கள் அதிக கூர்மையுடன் செயல் படுகின்றன. எனவே, அவை இரவில் குரைக்கின்றன. மேலும், இரவு நேரத்தில் மனிதர்களால் முற்றிலும் கேட்க முடியாத தொலைதூரக் காலடிச் சத்தங்கள், வாகனங்களின் அதிர்வுகள் அல்லது சிறிய விலங்குகளின் அசைவுகளை நாய்களின் கேட்கும் திறன் எளிதில் கண்டறிந்துவிடும்.
நமக்கு ஒன்றும் இல்லை என்று தோன்றும் ஒரு விஷயம், நாய்க்கு மிக முக்கியமான தூண்டுதலாக இருக்கலாம். இருட்டு, நாய்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதில்லை; மாறாக, அது அவற்றிற்கு சுற்றியுள்ள ஒலிகளையும் அசைவுகளையும் இன்னும் தெளிவாகக் காட்டுகிறது.
அதோடு, நாய்கள் இயற்கையிலேயே தற்காப்பு மற்றும் காவல் காக்கும் குணம் கொண்டவை. இரவில் அவை குரைக்கும் போது, வீட்டின் அருகே வரும் அந்நியர்கள், தெருநாய்கள் அல்லது அறிமுகமில்லாத சத்தங்கள் போன்ற அச்சுறுத்தல்களுக்கு அவை எதிர்வினையாற்றுகின்றன.
இரவு நேரத்தில் மனிதர்கள் தூங்கச் செல்லும்போது, வீட்டின் பாதுகாப்பு பலவீனமடைவதாக நாய்கள் உணர்கின்றன. எனவே, அந்த அமைதியான நேரத்தில் அவை அதிக விழிப்புடன் செயல்படுகின்றன. இந்த நேரத்தில் நாய் குரைப்பதை, அது தன் எல்லையையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் கடமையைச் செய்கிறது எனப் புரிந்துகொள்ள வேண்டும்.
இரவு நேரத்தில் நாய்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் குறைகின்றன. உரிமையாளரை விட்டுப் பிரிந்திருக்கும் பயம், பகலில் போதிய ஓட்டப்பயிற்சி அல்லது விளையாட்டுகள் இல்லாதது, தனிமை அல்லது சலிப்பு காரணமாக நள்ளிரவில் அவை குறைக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பகலில் இருக்கும் கவனச்சிதறல்கள் இரவில் இல்லாததால், அவை தங்கள் ஏமாற்றம், தனிமை அல்லது தேங்கிப் போன ஆற்றலை வெளிப்படுத்த குரைக்கின்றன.
திடீரென நள்ளிரவில் நாய் குரைப்பது சில நேரங்களில் ஆரோக்கியக் குறைபாடுகளையும் குறிக்கலாம். மனிதர்களுக்கு ஏற்படும் 'டிமென்ஷியா' போன்ற 'அறிவாற்றல் குறைபாடு' வயது முதிர்ந்த நாய்களுக்கும் ஏற்படலாம். இது அவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி, தேவையற்ற நேரங்களில் சத்தம் போட வைக்கும்.
மேலும், உடலில் ஏற்படும் வலி, பார்வைக் குறைபாடு அல்லது கேட்கும் திறன் மாறுபடுவது போன்ற காரணங்களாலும் நாய்கள் சிறிய தொந்தரவுகளுக்குக் கூட ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றலாம். உங்கள் வீட்டு நாய் அடிக்கடி அல்லது வழக்கத்திற்கு மாறாக இரவில் குரைத்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகிப் பரிசோதிப்பது நல்லது.
நள்ளிரவுக்குப் பிறகு நாய் குரைப்பது என்பது எந்தவொரு கெட்ட சகுனமும் அல்ல. அது முழுக்க முழுக்க ஒரு இயல்பான விலங்கு நடத்தை. எனவே, இரவில் நாய் குரைப்பதைக் கேட்டு பயப்படாமல், அதன் பின்னணியில் உள்ள காரணத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவதே புத்திசாலித்தனம்.