

இன்றைய தினமானது மிகவும் புனிதமான வருடத்தின் ஆரம்ப நாளைக் குறிக்கிறது. ஆகவே நீங்கள் புனிதமான சிந்தனையை மேற்கொள்ள வேண்டும். இந்த வருடம் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கை முழுவதும் அப்படிப்பட்ட புனிதமான சிந்தனையை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். இந்த உடலானது ஐம்புலன்களால் உருவாக்கப்பட்டுள்ளது; ஆகவே இது துன்பப்பட்டே ஆக வேண்டும். அதனால் நீங்கள் பாதிப்பை அடையக் கூடாது. இதுவே உங்கள் உண்மையான ‘சாதனா’ (ஆன்மீகப் பயிற்சி) ஆகும். உடல் மீதுள்ள பற்றை நீங்கள் விடவில்லை என்றால் மற்ற எல்லா சாதனாவும் வீண்தான்! சிலபேர்கள் தங்கள் ஜபமாலையை ஜபத்தைச் சொல்லிக்கொண்டே இயந்திரகதியில் சுழற்றுகிறார்கள்; தாங்கள் ‘சாதனா’ செய்வதாகக் கூறுகிறார்கள். அவர்கள் கையில் ஜபமாலை சுற்றிக் கொண்டே இருக்கும், ஆனால் அவர்கள் மனதோ மார்க்கெட்டில் சுற்றிக் கொண்டிருக்கும். இதை ஜபம் என்று சொல்ல முடியுமா? தியானத்தில் இருக்கும் போது உங்கள் உடல் நேராக நிமிர்ந்திருக்கலாம். ஆனால் உங்கள் மனதோ அலைபாய்கிறது. இப்படிப்பட்ட ‘சாதனா’வால் என்ன பயன்?
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடுள்ள ஒரு உண்மையான ஆன்மீகவாதி நிலையான மனதையும் சலனமடையாத பார்வையையும் கொண்டிருப்பான். நிலையற்ற மனதானது குரங்கின் இயல்பைக் கொண்டதாகும். ஆனால் இன்று மனிதன் குரங்கு மனதைக் கொண்டிருக்கிறான். அவன் தனது மனதை அன்பால் நிரப்ப வேண்டும், ஏனெனில் அவன் மனித குலத்தைச் சேர்ந்தவனாவான்.
பிரேம ஸ்வரூபங்களே!
நீங்கள் பஜனையைச் செய்யும் போது உங்கள் கைகளைத் தட்டி (தாளம் போட்டவாறே) சரியான லயத்தைக் கடைப்பிடியுங்கள். பஜனைக்குத் தகுந்தவாறே தாளம் போடப்பட வேண்டும், பஜனை முழுமனதுடன் சரியான ராகத்துடன் இசைக்கப்பட வேண்டும்.
இன்று தியாகராஜ கிருதிகளைப் பாடும் பல பாடகர்கள் தங்கள் மடியில் தாளம் போட்டவாறே பாடுகின்றனர். அவர்கள் இருகரங்களையும் சேர்த்து தாளம் போட வேண்டும். ஒரு கரத்தில் உள்ள ஐந்து விரல்கள் கர்மேந்திரியங்களையும் இன்னொரு கையில் உள்ள விரல்கள் ஞானேந்திரியங்களையும் குறிக்கின்றன. இறைவனின் புகழைப் போற்றிப் பாடும் போது இந்த இரண்டிற்கும் ஒரு இணக்கமான நல்லுறவு இருக்க வேண்டும். அப்படி ஒரு இணக்கம் இல்லையெனில் உங்கள் உணர்ச்சியும் கூடச் சரியாக இருக்காது. அனைவரும் சேர்ந்து பாடும் பழக்கத்தை குருநானக்கே பஞ்சாபில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அனைவரும் ஒன்றாக இணைந்து இறைவனின் புகழைப் பாட வேண்டும். இந்த இலட்சியமே நமது முன்னோர்களால் பரப்பப்பட்டது. ஆனால் இன்றோ மக்கள் அந்த லட்சியத்தைப் புறம் தள்ளி விட்டு தங்களது மனம் போனபடி நடந்து கொள்கின்றனர். இறைவனை மகிழ்விக்கும் வகையில் நமது அனைத்துச் செயல்களும் அமைய வேண்டும். நீங்கள் அவரை ராமன் என்றோ கிருஷ்ணன் என்றோ, கோவிந்தன் என்றோ அழையுங்கள், இறைவன் ஒருவனே. ஒருமை உணர்வை அடையுங்கள். தெய்வீக ஆத்மாவின் தரிசனத்தை அடையுங்கள்.