

இலைகளின்றி மரம் வளராது, அதுபோன்றே குழந்தைகளின்றி மனிதன் வளர முடியாது. குழந்தைகளிடம் அன்பு காட்டாத மனிதன், மனிதன் அல்ல. குழந்தைகள் தங்களுக்குள் போடும் சண்டை, சண்டையல்ல, தேகப்பயிற்சிக்காக. இலைகளைப் போல் அவர்கள் உராய்ந்து கொள்கிறார்கள். குரலுக்குப் பயிற்சி அளிப்பதற்காக குழந்தைகள் அழுகின்றன, கத்துகின்றன. ஒரு மரத்தின் இலைகளைப் போன்றே குழந்தைகளும் ஜாதி, மத பேதமின்றி ஒரே மாதிரியாக உள்ளன. குழந்தைகள் இல்லாவிட்டால் அன்பின் ஊற்று வற்றி விடும். மரத்தின் இலைகளைப் பிய்த்து விட்டால் அதன் வேரும் காய்ந்து போகும்.
மாணவர்களாகிய நீங்கள் விதை நெல்லுக்குச் சமானம். சாதாரண நெல்லைக் குத்தி அரிசியாக்கிச் சாப்பிடலாம். ஆனால் விதை நெல்லை அப்படிச் செய்யக் கூடாது. கொடிய பஞ்சமேற்பட்டு, வேறு உண்பதற்கு ஒன்றுமில்லாவிட்டால், அந்த நெல்லையும் அவித்து உண்ண வேண்டியதுதான். ஆதலால், இளைஞர்களாகிய நீங்கள் தினமும் ராஜீய விவகாரங்களில் மாட்டிக்கொள்ளக் கூடாது. அசாதாரண சமயங்களில், விதை நெல்லையும் அவித்து உண்ண நேர்ந்து விடுவது போல், உங்களையும் தேச சமுதாயத்தின் நலனுக்காக உபயோகித்துக்கொள்ள நேரும். இடைக்காலத்தில் நீங்கள் கண்ணும் கருத்துமாக கல்வி பயின்று வர வேண்டும்.
மனிதருக்குரிய அடிப்படையான குணம் அன்பு. அன்பில்லாதவன் வாழ்வதில் அர்த்தமில்லை. நீதியுணர்வே வாழ்வின் ஜீவநாடியாக இருக்கிறது. அதனால் நீதியை நிலைநாட்ட நம்மால் இயன்றதைச் செய்ய முற்பட வேண்டும்.
துன்பத்தை இயல்பாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே சுகத்தின் அருமையை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். துக்கப்படுவதால் வாழ்வின் எந்தப் பிரச்னையும் தீர்ந்து விடப்போவதில்லை. மாறாக, பிரச்னையின் தாக்கம்தான் அதிகமாகும். பிழையை சரிபடுத்திக்கொள்ள முயலுங்கள். இதனால் யாருக்கும் அவமானம் இல்லை.
அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதீர்கள். உயிர் உள்ள வரை அறிவுக் கதவு திறந்தே இருக்கட்டும். நாம் வளர்வதோடு, அறிவையும் வளர்த்துக் கொள்வதே உண்மையான வளர்ச்சி.
கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும் கொண்டவன் எச்செயலிலும் சாதனை புரிய முடியும். ஏற்றுக்கொண்ட கொள்கையில் துன்பம் நேரிட்டாலும், உயிர் போக நேர்ந்தாலும் குறிக்கோளில் இருந்து பின்வாங்காமல், அதை நிறைவேற்றியே தீர வேண்டும்.
தளராத மன உறுதி, நன்னடத்தை, தூய்மை, நம்பிக்கை இவையே ஆன்மிகத்தில் உயர்வு பெறுவதற்கான வழிமுறைகள்.
தர்மத்திற்கு முரண்படாத நல்ல விருப்பங்கள் அனைத்தும் கடவுளுக்கு உகந்தவையே. அதை அடைய முயல்வதில் தவறொன்றும் இல்லை.
நியாயமற்ற ஆசை மனதில் எழும்போது அதை வளர விடாமல் கிள்ளி எறிந்து விட வேண்டும். இதில் தாமதிப்பது ஆபத்தில் முடிந்து விடும். ஒரு தீய எண்ணம் பல தீய எண்ணங்களுக்கு வழிவகுத்து விடும். அதனால், மனம் என்னும் கோட்டையில் பகைவரின் படைகள் நுழைய அனுமதிக்காதீர்கள்.
சுதந்திரம் இல்லாத மனிதன் உயிர் இல்லாத உடலைப் போன்றவன். உயிர் வாழ உணவு அவசியம் போல, சுதந்திரமாக வாழ்வதற்கு தியாக உணர்வு அவசியம்.
பிறருக்கு உபகாரம் செய்வது நமக்கு நாமே செய்துகொள்ளும் உதவி. பரோபகாரம் செய்வதில் யாரும் அலுத்துக் கொள்ளக் கூடாது. சிறிய செயல் செய்பவனைப் பார்த்து நீ சிரித்தால், நம்மைப் பார்த்து இறைவன் சிரிப்பான். உயர்வு தாழ்வு கருதி யாரையும் இழிவாக நினைக்கக் கூடாது.
மற்றவர்களின் நன்மைக்காக தன்னையே தியாகம் செய்பவன் மனதில் எப்போதும் அமைதி குடிகொண்டிருக்கும். அரசியல் தந்தை போன்றது, தர்மம் தாய் போன்றது. இரண்டும் இணைந்திருப்பதே நல்லறம்.