இண்ட்ரோவர்ட்டுகள் எனப்படுபவர்கள் உள்முகத்தன்மை கொண்டவர்கள். இது ஒரு சிக்கலான ஆளுமைப் பண்பாகும். இது தனி நபர்கள் தங்களை சுற்றியுள்ள உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கிறது. இவர்களுக்கென்று சில தனிப்பட்ட குணாதிசயங்கள் உள்ளன. அவை என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
உள்முக சிந்தனையாளரின் குணாதிசயங்கள்:
தனிமையில் இருப்பதில் மனநிறைவு: உள்முக சிந்தனையாளர்கள் பெரும்பாலும் தனிமை விரும்பிகள். வாசிப்பு, எழுதுதல் அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடுவது போன்ற தனிமையான செயல்களில் ஆறுதலையும் புத்துணர்ச்சியையும் பெறுகிறார்கள். சமூகத் தொடர்புகளுக்குப் பிறகு ரீசார்ஜ் செய்ய அவர்களுக்குத் தனியாக நேரம் தேவைப்படுகிறது. தனிமையில் நிம்மதியையும், சௌகர்யத்தையும் உணர்கிறார்கள்.
கூட்டத்தைத் தவிர்த்தல்: இவர்கள் பெரும்பாலும் பெரிய கூட்டங்களை விட சிறிய கூட்டங்களை விரும்புகிறார்கள். இவர்கள் அர்த்தமுள்ள இணைப்புகள் மற்றும் உறவுகளை விரும்பினாலும் சமூக சூழ்நிலைகளில் கவலை அல்லது பயத்தை கொண்டிருப்பார்கள். அதனால் பெரிய குழுக்கள் அல்லது மக்கள் அதிகமாக இருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தயங்குவார்கள்.
ஆழ்ந்த சிந்தனை: உள்முக சிந்தனையாளர்கள் பேசுவதற்கு முன்பும், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு சிந்திக்கிறார்கள். அதனால் சிந்தனைமிக்க உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள். அடிக்கடி சுய பிரதிபலிப்பில் ஈடுபடுவதால், உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் அனுபவங்களை பகுப்பாய்வு செய்வதில் நேரத்தை செலவிடுகிறார்கள். இவர்கள் வீண் பேச்சை விட ஆழமான, அதிக அர்த்தமுள்ள உரையாடல்களை விரும்புகிறார்கள்.
கேட்கும் திறன்: இவர்கள் பேசுவதை விட, அதிகமாகக் கேட்பதை விரும்புவார்கள். அபாரமான கேட்கும் திறன் மிக்கவர்கள். பிறர் பேசுவதை ஆழ்ந்து அமைதியாக கவனிப்பார்கள். மிக நுட்பமான விவரங்களைக் கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொள்வார்கள். அதனால் இவர்களை நம்பி மனதில் உள்ள பாரங்களை இறக்கி வைக்கலாம். அன்பான நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் இருப்பார்கள். இவர்களை நண்பர்களாக அடைந்தவர்கள் பாக்கியசாலிகள் என்று சொல்லும் அளவிற்கு மிகவும் உண்மைத்தன்மையுடன் விளங்குவார்கள்.
படைப்பாற்றல்: பல உள்முக சிந்தனையாளர்கள் சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள். ஓவியம், எழுத்து, இசை போன்ற துறைகளில் தங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்கள். எழுத்துக்கு முன்னுரிமை தருவார்கள். பல உள்முக சிந்தனையாளர்கள் தங்கள் பேசுவதைக் காட்டிலும் எழுதுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களுடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் எழுத்து வடிவத்தில் மிக அழகாக வடிப்பதில் வல்லவர்கள். அருமையான கடிதங்கள் மற்றும் கதைகளை எழுதுவார்கள்.
சிந்தித்து முடிவெடுத்தல்: இவர்கள் எடுக்கும் முடிவுகள் அவசரகதியில் இருக்காது. எப்போதும் அதிக நேரம் எடுத்து நன்றாக சிந்தித்தே முடிவுகளை எடுப்பார்கள். கவனமாக எடை போட்டு செயல்படுவார்கள். முடிவு எடுக்கும் முன்பு எல்லாக் கோணங்களில் இருந்தும் சிந்திப்பார்கள்.
பயணங்களில் நாட்டமின்மை: வெளியில் சுற்றித் திரிவது, அடிக்கடி பயணம் செய்வது போன்றவற்றில் இவர்களுக்கு விருப்பம் இருக்காது. வெளியில் நேரம் செலவழிப்பதை விட, வீட்டில் அமைதியாக நேரத்தை செலவழிக்க விரும்புவார்கள்.
எளிமை: இவர்கள் பெரும்பாலும் எளிமையான மனிதர்களாக இருப்பார்கள். இவர்கள் அணியும் உடை ஆடம்பரமாக இருக்காது. பிறரைக் கவர வேண்டும் என்று பகட்டாக உடை அணிய மாட்டார்கள். அதேபோல, இவர்களின் பேச்சும் அலங்காரமாக இருக்காது. எளிமையான உடைகளைப் போலவே பேச்சும் மிகவும் அமைதியாக, எளிமையாக இருக்கும்.
உள்முக சிந்தனை தினம்: இத்தகைய சிறப்புகள் பெற்ற உள்முக சிந்தனையாளர்களைக் கொண்டாடும் விதமாகவே ஜனவரி இரண்டாம் தேதியன்று உலக உள்முக சிந்தனை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளாக உள்முக சிந்தனை என்பது பலவீனம் அல்ல; அது ஒரு பலம் என்று அமைந்திருப்பது சிறப்பு.