
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாளன்று, ‘மனித உரிமைகள் நாள்’ (Human Rights Day) கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாளில், உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளைப் பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில், 1950 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 10 ஆம் நாளன்று, ‘மனித உரிமை நாள்’ கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையைப் பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதும் ஐக்கிய நாடுகள் அவைப் பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும். அனைத்து மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதையும் இப்பிரகடனம் வலியுறுத்துகிறது. இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாயத் தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளுமின்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.
மனித உரிமைகள் எனும் போது, நாம் ‘உலக மனித உரிமைகள் சாற்றுரை’ (Universal Declaration of Human Rights) என்னவென்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் 1948 ஆம் ஆண்டில் பாரிசில் உள்ள சைலட் மாளிகையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாற்றுரை ஆகும். கின்னஸ் பதிவுகள் நூல் இதனை மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் எனக் குறிப்பிடுகிறது. இச்சாற்றுரை இரண்டாம் உலகப் போரில் இருந்து பெற்ற பட்டறிவுகளிலிருந்து உருவானது. அத்துடன், ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே, உரித்தாக உள்ள உரிமைகள் பற்றிய உலகளாவிய வெளிப்பாடும் இதுவே. இச்சாற்றுரையில்:
நாம் அனைவரும் சுதந்திரமாகவும் உரிமைகளில் சமமாகவும் பிறக்கிறோம்
இன, நிற, பால், மொழி, சமய, அரசியல் கருத்து, தேசியம், சொத்து, பிறப்பு பாகுபாடு காட்டாதே
வாழ்வு உரிமை
யாரும் அடிமை இல்லை
யாரும் சித்தரவதைக்கு உட்படலாகது
எவ்விடத்திலும் ஒருவருக்கு உரிமைகள் உண்டு
சட்டத்தின் முன் சமவுரிமை
நியாயமற்று தடுத்து வைக்கமுடியாது
நீதியான வழக்குக்கான உரிமை
குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி
அந்தரங்க உரிமை
நகர்வுச் சுதந்திரம்
துன்புறுத்தலிலிருந்து புகலிட உரிமை
தேசியத்துக்கான உரிமை
திருமணம் செய்ய, குடும்பம் நடத்த சுதந்திரம்
ஆதன உரிமை
சிந்தனை சுதந்திரம், உள்ளுணர்வு சுதந்திரம், சமயச் சுதந்திரம்
கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம்
கூடல் சுதந்திரம்
மக்களாட்சி உரிமை
சமூக பாதுகாப்பு உரிமை
தொழிலாளர் உரிமைகள்
விளையாட, ஓய்வெடுக்க உரிமை
உணவுக்கும் உறையுளுக்குமான உரிமை
கல்விக்கான உரிமை
பண்பாட்டு பங்களிப்பு உரிமை, ஆக்கவுரிமை
நியாமான விடுதலை பெற்ற உலகு
பொறுப்புகள்
மனித உரிமைகளை யாரும் பறிக்க முடியாது
இந்த உறுப்புரைகளை மீற எந்த நாட்டுக்கோ அல்லது நபருக்கோ உரிமை கிடையாது.
எனும் 30 பிரிவுகள் உள்ளன. இவையனைத்தும் பின்னர் உருவாக்கப்பட்ட அனைத்துலக ஒப்பந்தங்கள், பிரதேச மனித உரிமைகள் ஆவணங்கள், தேசிய அரசியலமைப்புச் சட்டங்கள், பிற சட்டங்கள் என்பவை மூலம் விரிவாக்கப்பட்டன.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் (United Nations Human Rights Council) ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. இது மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டது. 47 இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் அமைப்பானது முன்னைய 53 இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் ஆணையத்தை மாற்றீடு செய்துள்ளது. இந்த 47 இருக்கைகளும் பிரதேச ரீதியாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. ஆப்பிரிக்காவிற்கு 13, ஆசியாவிற்கு 13, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 6, இலத்தீன் அமெரிக்காவிற்கு 8, மேற்கு ஐரோப்பாவிற்கு 7 ஏனைய நாடுகளிற்கும் பகிர்ந்தளிக்கபடுகின்றது. இந்த அமைப்பானது 2006 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் நாளிலிருந்து தனது பணிகளைச் செய்து வருகிறது.
இதே போன்று, 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் (Office of the United Nations High Commissioner for Human Rights, OHCHR) எனும் நிறுவனத்தை, பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆஸ்திரியாவின் வியென்னா நகரில், 1993 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 25 ஆம் நாளில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் இவ்வாணையம் அமைய ஒப்புதலளிக்கப்பட்டது என்பதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.