
தேரவாதம் எனும் பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள் டிசம்பர் 21 ஆம் நாளை ‘சங்கமித்தை நாள்’ என்று கொண்டாடுகின்றனர்.
புத்தரின் போதனைகள் அடிப்படையிலான தத்துவங்களைக் கொண்ட சமயமாக, பௌத்தம் அல்லது பௌத்த சமயம் இருக்கிறது. பௌத்த சமயத்தில், தேரவாத பௌத்தம் மற்றும் மகாயான பௌத்தம் என்று இரு முக்கியப் பிரிவுகளும், வஜ்ரயான பௌத்தம், சர்வாஸ்திவாத பௌத்தம், சுகவதி பௌத்தம் என்று வேறு சில பிரிவுகளும் இருக்கின்றன. பௌத்த சமயத்தில், இலங்கை, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் தேரவாதம் எனும் பிரிவும், சீனா, கொரியா, சப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற நாடுகளில் மகாயானம் எனும் பிரிவும் பின்பற்றப்படுகிறது. திபெத் மற்றும் மங்கோலியாவில் வச்சிரயான பௌத்தம் எனும் பிரிவு பின்பற்றப்படுகிறது.
தேரவாதம் என்பது பௌத்தத்தில் மிக பழமையான பிரிவாகும். இலங்கை மக்களின் 70 சதவீதம் பேர் இச்சமயத்தைச் சேர்ந்தவராவர். கம்போடியா, தாய்லாந்து. லாவோஸ், மியான்மார் ஆகிய நாடுகளின் மக்களும் பெரும்பான்மையாகத் தேரவாதத்தைப் பின்பற்றுகின்றனர். தென்மேற்கு சீனா, வியட்நாம், வங்காளதேசம், மலேசியா, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தேரவாதத்தைப் பின்பற்றுபவர்கள் இருக்கின்றனர். உலகில் 100 மில்லியன் மக்கள் தேரவாதம் பிரிவிலான பௌத்த சமயத்தைப் பின்பற்றி வருகின்றனர்.
சங்கமித்தை (சங்கமித்ரா) என்பவர் பேரரசன் அசோகனின் மகளாவார். இவளும், இவளுடன் இரட்டைப் பிள்ளைகளுள் ஒன்றாகப் பிறந்த உடன் பிறந்தவருமான மகிந்தனும் புத்த சமயத் துறவிகள் ஆயினர். சில மூலங்களின் படி சங்கமித்தை அசோகனின் இளைய மகளும் மகிந்தனின் தங்கையும் ஆவாள். இவர்கள் இருவரும் புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்காக இலங்கை சென்றனர். முதலில் மகிந்தனே இலங்கைக்குச் சென்றான். அங்கே அவன் இலங்கை மன்னனுக்கு, புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்றைத் தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தான். அதனை நிறைவேற்றுவதற்காக, பேரரசர் அசோகர் அவ்வெள்ளரசு மரத்தின் கிளையொன்றை வெட்டி எடுத்தார்.
அந்த வெள்ளரசு மரக்கிளையை இலங்கைக்கு எடுத்துச் செல்வதுடன், இலங்கையில் ஒரு பெண் துறவிகளின் மரபு வழி ஒன்றை உருவாக்குவதையும், அங்குள்ள அரச குடும்பப் பெண்கள் சிலரை பிக்குணிகளாக நிலைப்படுத்தவும், பேரரசர் அசோகர், சங்கமித்தையை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். சங்கமித்தையுடன் அரச மரபைச் சேர்ந்த பதினெண்மரும், பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த பதினெண்மரும், பிராமணர், வணிகர் ஆகிய ஒவ்வொரு குலத்திலிருந்து எட்டுக் குடும்பங்களும், அவர்களுடன் இடையர், உழவர், நெசவாளர், குயவர், இயக்கர், நாகர் ஆகியோரும் இலங்கைக்கு வந்ததாக மகாவம்சம் எனும் நூல் குறிப்பிடுகிறது.
அதனைத் தொடர்ந்து, அப்போதைய இலங்கையின் அரசியாகிய அனுலாவும், ஐநூறு வரையான பணிப்பெண்களும் சங்கமித்தை மூலம் பிக்குணிகள் ஆகினர் என்பது மகாவம்சத்தின் மூலம் தெரிய வருகிறது. மகிந்தனையும், சங்கமித்தையையும் அழைத்த இலங்கை அரசன் தேவநம்பிய தீசனின் மறைவுக்குப் பின்னரும் இருவரும் இலங்கையில் இருந்தனர். தேவநாம்பியதீசனைத் தொடர்ந்து அரசனான அவனது தம்பியின் ஆட்சிக்காலத்தில் தனது 59 ஆவது வயதில் சங்கமித்தை பரிநிர்வாணநிலை அடைந்ததாகத் தெரிகிறது. அவர் பரிநிர்வாணநிலை அடைந்ததாகக் கணக்கிடப்படும் டிசம்பர் 21 ஆம் நாளை, தேரவாதம் பிரிவிலான பௌத்த சமயத்தினர் ‘சங்கமித்தை நாள்’ என்று கொண்டாடி வருகின்றனர்.