
ஐக்கிய நாடுகள் அவை 1981 ஆம் ஆண்டை உலக மாற்றுத் திறனாளிகள் ஆண்டாக அறிவித்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுகளும், சேவை வழங்கும் நிறுவனங்களும், பெற்றோரும், ஏனைய மனிதர்களும் உதவிட வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் மற்றவர்களைப் போன்றே, அனைத்து உரிமைகளையும் பெற்றிடவும், சமூகத்தில் அவர்களுக்கும் தகுந்த மதிப்பு கிடைக்கவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் அவை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் நாளை, ‘பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (United Nations' International Day of Persons with Disabilities) என்று கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவித்தது.
உலகம் முழுவதும் பிறப்பினால் மாற்றுத்திறனாளிகள் உருவாகின்றனர். இதேப் போன்று, விபத்துகளினாலும் மாற்றுத்திறனாளிகளாக மாறும் நிலையும் ஏற்படலாம்.
இந்தியாவில் பொதுவாக 1. பார்வை குறைபாடுடையோர், 2. கை,கால் குறைபாடுடையோர், 3. செவித்திறன் குறைந்தோர் மற்றும் பேச இயலாதவர், 4. மனவளர்ச்சி குன்றியவர்கள், 5. தொழுநோய் பாதித்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள் என்று மாற்றுத்திறனுடையோர் ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.
உலக மக்கள்தொகையில் சுமார் 15% பேர் ஏதேனும் ஒரு வகையில் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று உலகச் சுகாதார அமைப்பு கூறுகிறது. பிறவியிலேயே உடல் ஊனம் இருப்போர், இளம் வயதில் ஏற்பட்ட நோயால் ஊனமானோர், விபத்து, முதுமை போன்ற காரணங்களால் ஊனமுற்றோர், இவை தவிர மன நோய்க்கு ஆளாகி உள்ளவர்களையும் உலக சுகாதார அமைப்பு, சிறுபான்மையினர் என்று வகைப்படுத்துகிறது. இவ்வமைப்பு, மாற்றுத்திறனாளிகளில் பலர், குடும்பத்தினராலும் பிறராலும் ஒதுக்கப்பட்டு, வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில், குழந்தை இறப்பு விகித கணக்கெடுப்பில், உடல் ஊனத்துடன் பிறக்கின்ற குழந்தைகள் அதிக இறப்புக்கு உள்ளாகிறது. அக்குழந்தைகள் கொல்லப்படுகிறார்களோ என்று உலகச்சுகாதார நிறுவனம் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளில் உலக அளவில் கல்வி கற்பவர்கள் சுமார் 3% பேர் என்றும், பெண்களில் கல்வி பெறுபவர்கள் ஒரு சதவீதத்தினர் மட்டுமே என்றும் இருக்கிறது.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் மூன்று கோடி பேர் (2.5%) மாற்றுத்திறனாளிகள் ஆவர். இந்த எண்ணிக்கை உலகளவில் மிகப்பெரிது. மாற்றுத்திறனாளிகளில் பெரும்பான்மையாக, அதாவது 80% பேர் மிகவும் ஏழைகளாக இருக்கின்றனர். எனவே, இந்திய அரசும், மாநில அரசும், மாற்றுத்திறனாளிகளுக்கென்று இலவச பேருந்து வசதி, கட்டணச் சலுகை, மருத்துவச் சலுகை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு என்பது போன்ற பல்வேறு நிலைகளில் அவர்களது வாழ்க்கை உயர்வுக்கான திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகின்றன. இருப்பினும், அவைகளை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் சென்று வருதல், சலுகைகளைப் பெறுவதில் காலதாமம், இயலாமல் போதல் என்பது போன்ற சில குறைபாடுகளும் இருக்கின்றன. இக்குறைபாடுகளைக் களைந்து, மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவதற்கேற்ற எளிமையான வழிமுறைகளை இந்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்த முன் வர வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளை ஏற்று, அவர்களை மனச்சோர்வடைய விடாமல், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும்.