உலகின் அனைத்து நாடுகளின் பொதுவான பிரச்னை ஊழல்தான். சமூகம், அரசியல், பொருளாதார தளங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் காரணமும் சந்தேகமில்லாமல் லஞ்சம் எனும் ஊழல்தான். ‘ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தும் மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தாமதப்படுத்தி ஆளும் அரசையே செயலிழக்கச் செய்வதும் ஊழல்தான்’ என்று ஐ.நா குறிப்பிடுகிறது.
2003ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான ஒப்பந்தம் ஒன்றை தனது உறுப்பு நாடுகளுக்கு சமர்ப்பித்தது. லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலான இந்த ஒப்பந்தத்தில் 100 நாடுகள் கையெழுத்திட்டன. லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் ஒரு நாளை ஏற்படுத்த விரும்பிய ஐ.நா. சபை, ஊழலுக்கு எதிரான ஒப்பந்தம் உருவான டிசம்பர் 9ம் தேதியை சர்வதேச ஊழல் தடுப்பு தினமாக அறிவித்தது. 2005ம் ஆண்டு முதல் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான விவாதங்கள், ஊழலின் பாதிப்பை விளக்கும் வீதி நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் என்று பல்வேறு வகையான ஊழலுக்கு எதிரான போராட்டத்தை உலக நாடுகள் இந்நாளில் மேற்கொள்கின்றன. ஊழலுக்கு எதிரான வாசகங்கள், கையேடுகள் உள்ளிட்டவை பொது இடங்களில் வைக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் பெரும் ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முக்கியமானது ஊழல். இது ஆளும் அரசுகளை மட்டும் பாதிப்பதில்லை. தனியார் தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தொற்று நோய் போன்று பாதிக்கக்கூடியது. உலகளவில் ஐந்தில் ஒருவர் பொது சேவையை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 124 நாடுகளில் ஊழல் அதிக அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இது கவலையளிக்கும் விஷயம் ஆகும்.
உரிய ஆவணங்கள் இருந்தும் தங்களது கடமையை செய்ய லஞ்சம் கேட்கும் நபர்கள் பெருகி விட்டனர். எந்தவிதமான உரிய ஆவணங்கள் இல்லாமல் கூட எதையும் சாதிக்கும் ஆற்றலை லஞ்சம் வளர்த்து வருகிறது. இதனால் தனிநபர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், அரசுக்குதான் அனைத்து பாதிப்புகளும்.
உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வருடந்தோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலை நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது.
இந்தப் பட்டியலில் டென்மார்க் குறைந்த அளவு ஊழல் கொண்ட நாடாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா 39 புள்ளிகள் பெற்று 93வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 29 புள்ளிகள் பெற்று 133வது இடத்தைப் பிடித்துள்ளது. சீனா 76வது இடத்தையும், இலங்கை 34 புள்ளிகள் பெற்று 115வது இடத்தையும் பிடித்துள்ளன. 11 புள்ளிகள் பெற்று அதிக அளவில் ஊழல் மிகுந்த நாடாக சோமாலியா கடைசி இடத்தில் (180வது) உள்ளது.
லஞ்சம் பெறுவதையும், வழங்குவதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனப்போக்கை மாற்றி, நீதி மற்றும் சட்ட நடவடிக்கைகளில் உள்ள காலதாமதத்தை நீக்கி நம்பிக்கை ஊட்டினால் நம் நாடும் ஒரு லஞ்சமற்ற நாடக மாறும். அதற்கு லஞ்சத்தை தவிர்த்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல இந்நாளில் உறுதி எடுப்போம்.