நம்மில் பலருக்கும் பொதுவான பிரச்னையாக இருப்பது வாய்வு தொல்லைதான். இதற்கு முக்கியக் காரணம் நாம் சாப்பிடும் உணவு முறை மற்றும் உணவுகள்தான். வாய்வு தொல்லை பல பிரச்னைகளை ஏற்படுத்தும். சரி, வாய்வு பிரச்னை ஏற்படாமல் இருக்க என்னதான் செய்வது? கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை படியுங்கள். அதன்படி உங்கள் லைஃப் ஸ்டைலை மாற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக வாய்வு பிரச்னைகளில் இருந்து எளிதாகத் தப்பித்து விடலாம்.
1. பால் பொருட்களில் கவனம் தேவை: பால் பொருட்களை எப்போதும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமானால், அதுவே வாய்வுத் தொல்லையை உண்டாக்கும். அதிலும் தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் அதிக அளவு வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.
2. மூலிகை தேநீர்: வாய்வுத் தொல்லை அதிகம் இருந்தால், மூலிகைத் தேநீரை குடியுங்கள். இது வாய்வுத் தொல்லையில் இருந்து நிவாரணம் தரும். அதிலும் இஞ்சி, பட்டை போன்றவை சேர்க்கப்பட்ட தேநீரைப் பருகினால், செரிமான பாதையில் உள்ள பிரச்னைகள் நீங்கி, செரிமானம் சீராக நடைபெற்று, வாய்வுத் தொல்லை ஏற்படாமல் தடுக்கும்.
3. வேகமாக சாப்பிடாதீர்கள்: சிலர் உணவை தட்டில் வைத்த 2 நிமிடத்தில் தட்டை காலி செய்துவிடுவார்கள். இப்படி வேகமாக சாப்பிட்டால், உணவை வேகமாக விழுங்கும்போது காற்றையும் அதிக அளவில் உள்ளிழுக்க நேரிட்டு, வாய்வுத் தொல்லை ஏற்படும். ஆகவே, உணவை உட்கொள்ளும்போது, உண்ணும் உணவை ரசித்து மெதுவாக உட்கொள்ள வேண்டும்.
4. கொழுப்புள்ள உணவுகள்: கொழுப்புகள் நிறைந்த உணவை உட்கொண்டால், செரிமானம் மெதுவாக நடைபெற்று, உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகும். இப்படி நீண்ட நேரம் ஆவதால், வயிற்றில் வாய்வுத் தொல்லையும் அதிகரிக்கும். ஆகவே, வாய்வு தொல்லையைத் தடுக்க, கொழுப்புக்கள் நிறைந்த உணவை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
5. வாய்வுத் தொல்லையை உண்டாக்கும் உணவுகள்: உருளைக்கிழங்கு, பீன்ஸ், பருப்புகள், முள்ளங்கி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும். ஆகவே, இந்தக் காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்தால், வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
6. மென்பானங்கள்: மென்பானங்களை குடிக்கும்போது, அவை கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றி, அது வயிற்றில் செல்லும்போது வாயுவாக மாறும். அதிலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால், வாய்வுத் தொல்லை ஏற்படுவதோடு, இன்னும் தீவிரமான சில பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்.
7. புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்: புகைப்பிடிக்கும்போது, புகையை உள்ளிழுப்பதால், புகைப்பிடிப்போருக்கு வாய்வுத் தொல்லை அதிக அளவில் இருக்கும். மேலும், இத்தகையவர்களுக்கு வயிறு உப்புசமாக இருக்கும். ஆகவே புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
8. உணவுக்கு முன் நீர்: ஒவ்வொரு முறை உணவு உண்ணும் முன்பும், குறைந்தது 1 கப் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால், செரிமான பாதையில் எவ்வித இடையூறும் இல்லாமல் உணவு சென்று செரிமானமடையும். இதனால் வாய்வுத் தொல்லை ஏற்படுவது குறையும்.
9. பேசிக்கொண்டே சாப்பிட வேண்டாம்: நம் முன்னோர்கள் சாப்பிடும்போது பேசக் கூடாது என்று சொல்வார்கள். காரணமின்றி அவர்கள் எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் சாப்பிடும்போது பேசுவதால், உணவுடன் சேர்ந்து காற்றும் வயிற்றினுள் செல்கிறது. இதனால் வாய்வுத் தொல்லை ஏற்படுகிறது. ஆகவே, பேசிக்கொண்டே சாப்பிடும் பழக்கத்தை கைவிட்டால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
10. சாப்பிட்டவுடன் படுப்பது: உணவு சாப்பிட்டவுடன் உறங்கச் செல்வது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதில் ஒன்று வாய்வு பிரச்னை. சிறிது நேரம் நடக்க வேண்டும். அப்படிச் செய்தால் வாய்வு பிரச்னைகளில் இருந்து முழுமையாக விடுபடலாம்.
மருந்து குணமாக்குவதை விட, மனம் வைத்து நாம் செய்யும் கட்டுப்பாடான சில விஷயங்கள் உடல் நலனைக் காக்கும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.