வாழ்க்கையில் கடைத்தேற குருநானக் காட்டும் எளிய வழிகள்!

நவம்பர் 5, குருநானக் ஜயந்தி
Guru Nanak Jayanti
Sikh guru Guru Nanak
Published on

சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக். இவர் பத்து சீக்கிய மத குருக்களுள் முதன்மையானவர் ஆவார். இவர் கபீரின் உற்ற சீடராகவும் கருதப்படுகிறார். குருநானக் ஜயந்தி திருநாளான இன்று அவர் அருளிய சில அருளுரைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

* நல்லோரது நட்பு, இனிய சொற்களைப் பேசுதல், அகத்தூய்மை, எளியோருக்கு உதவுதல் ஆகிய அனைத்தும் கொண்டவர்களே மேன்மக்கள்.

* ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் கடவுளின் ஒளி இருக்கிறது. எல்லோரையும் சமமாக நடத்துவதும் சமமாக பாராட்டுவதும் மனிதப் பண்பாகும்.

* சத்தியமும் அன்பும் அருளும் வாழ்வில் மலர்ந்து விட்டால் நாம் கடைத்தேறி விட்டோம் என்று அர்த்தமாகும். இல்லையேல், நம் வாழ்க்கையே பாழாகிவிட்டது என்று கொள்ள வேண்டியதுதான்.

* வேதங்களை தினமும் பாராயணம் செய்து வருவதால் உங்கள் உள்ளத்தில் இருக்கும் அழுக்குகள் கழுவப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
உலகுக்கே படியளக்கும் அம்மையப்பனுக்கு அன்னம் படைக்கும் நன்றிக்கடன் திருநாள்!
Guru Nanak Jayanti

* இறைவனின் சங்கல்பத்தினால்தான் இந்த உலகம் இயங்குகிறது. இருந்தாலும், யாருடைய கவனிப்பும் தயவும் தேவைப்படாதவர் அவர். எல்லாமே அவருடையதாக இருக்கும்போது அவரது பாதக் கமலங்களில் நாம் என்ன காணிக்கை செலுத்த முடியும்? என்ன சொல்லி அவருடைய அன்பைப் பெற முடியும்.

* குழந்தை பருவத்திலேயே இறைவனின் அருள் வடிவத்தைப் பற்றி பெற்றோர்கள் அவர்களிடம் சொல்லி விட வேண்டும். அப்போதுதான் அவர்கள் வளரும் பருவத்தில் தெய்வ நம்பிக்கையுடன் வளருவார்கள்.

* சாம்ராஜ்யம், செல்வம், அழகு, பெருமை, இளமை இவை ஐந்தும் ஆத்ம ஞானத்தை அபகரிக்கும் திருடர்கள். இறைவனுடைய சங்கல்பத்தினால்தான் சிலர் உயர்ந்தவர்களாகவும், சிலர் தாழ்ந்தவர்களாகவும் பிறக்கிறார்கள்.

* ஏக்கம் நிறைந்த வாழ்வில் இறைவனைப் பற்றிய குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். அந்தக் குழப்பத்தை நீக்க இறைவனின் பிரகாசமான ஒளி வேண்டும். அதனால் இறைவனை முழு மனதுடன் வணங்குங்கள். குழப்பம் நீங்கி விடும்.

* யுகம் யுகமாக ஆராய்ந்து பார்த்தாலும் சரி, ஆராய்ச்சியின் மூலம் இறைவனை புரிந்துகொள்ள முடியாது.

* இறைவனை அடைவதற்கு செல்வம் வேண்டியதில்லை. ஆடம்பர உடை வேண்டியதில்லை. அந்தஸ்தான பதவி வேண்டியது இல்லை. வேண்டியது எல்லாம் தூய்மையான மனமே.

* விடியற்காலை நேரங்களில் ஜபம், தியானம் ஆகியவற்றின் மூலம் இறைவனிடம் ஒன்றுபடு. மனம் இறைவனுடன் ஒன்றுபடாத நிலையில் உங்களது அலங்காரம் அழியாது.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ கிருஷ்ணர் - ராதை ஊஞ்சல் உத்ஸவ மகோத்ஸவத்தில் நாரதர் செய்த கலகம்!
Guru Nanak Jayanti

* தெய்வ சங்கல்பம் எல்லோருக்கும் கிடைக்காது. அது கிடைக்க வேண்டுமானால் தெய்வ சேவையுடன் சக மனிதர்களுக்கும் சேவை செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களை தெய்வ ஒளி வந்தடையும்.

* இறைவனின் சங்கல்பப்படியே மக்கள் சுகங்களையும் துக்கங்களையும் அடைகிறார்கள்.

* இறைவன் நாமமே அகல் விளக்கு. துயரமே அதை எரியத் தூண்டும் நெய் விளக்கு. பிரகாசமாக எரியும்போது துயரம் என்ற நெய் குறைந்து கொண்டு வரும்.

* இறைவனுடைய அருளை அடக்கம், அன்பு, ஆத்மீக சரணாகதி, தெய்வ சங்கல்பம் போன்ற வழிகளில்தான் பெற முடியும்.

* இறைவன் ஒவ்வொரு ஆத்மாவிலும் உள்ளான். ஆத்மா இறைவனிடத்தில் உள்ளது. குருவின் உபதேச ஞானத்தால் ஒருவர் இதை உணரலாம்.

* இறைவனுடைய திருநாமத்தை உள்ளம் தியானிக்கத் தொடங்கினால் வேறு எந்தவிதமான சிந்தனையும் ஏற்படுவதில்லை.

* இறைவனுக்கு தாய், தந்தை இல்லை, மனைவியில்லை, மகனில்லை, உறவினர் இல்லை, ஆசை இல்லை. மூலமறியப்பட்ட முடியாத தூய்மையான வடிவான இறைவன் எங்கும் நிறைந்த ஒளிமயமானவன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com