International Women's Day
International Women's DayAI Image

சர்வதேச மகளிர் தினம்: வரலாறும் வாழ்வியலும்!

Published on

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர்  தினமாகக் கொண்டாடப் படுவதற்குக் பின்னால் ஒரு நீண்ட போராட்ட வரலாறு இருக்கிறது. இது வெறும் கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்ல, பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்களின் நினைவாக உருவான நாள்.

இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் இதோ:

1. தொழிலாளர் போராட்டங்கள் (1908): நியூயார்க் நகரில் 15,000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேலை நேரத்தைக் குறைக்கவும், சிறந்த ஊதியம் பெறவும், வாக்குரிமை கோரியும் மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்தினார்கள். இதுவே இந்த தினத்திற்கான விதையாக அமைந்தது.

2. முதல் தேசிய பெண்கள் தினம் (1909): அமெரிக்காவின் சோசலிசக் கட்சி, மேற்கண்ட போராட்டத்தை நினைவு கூரும் வகையில் பிப்ரவரி 28, 1909 அன்று முதல் தேசிய பெண்கள் தினத்தை அறிவித்தது.

3. சர்வதேச அங்கீகாரம் (1910): டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில், கிளாரா ஜெட்கின் (Clara Zetkin) என்ற பெண்மணி, பெண்கள் தினத்தை சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். அங்கு வந்திருந்த 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் இதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.

4. மார்ச் 8 உருவான விதம் (1917): முதலாம் உலகப் போரின்போது, ரஷ்ய நாட்டுப் பெண்கள் “உணவு மற்றும் அமைதி” (Bread and Peace) வேண்டி ஒரு மிகப்பெரிய வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டம் தொடங்கிய நாள் (ஜூலியன் காலண்டர் படி பிப்ரவரி 23), தற்போதைய கிரிகோரியன் காலண்டர் படி மார்ச் 8 ஆகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம்:

பெண்களின் இந்தத் தொடர் போராட்டங்களை கௌரவிக்கும் வகையில், 1975-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை (UN) மார்ச் 8-ஆம் தேதியை அதிகாரப்பூர்வமாக “சர்வதேச பெண்கள் தினமாக” அறிவித்தது. சம உரிமை, அரசியல் விடுதலை மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்காகப் போராடிய பெண்களின் தியாகத்தைப் போற்றும் தினமே மார்ச் 8.

இதையும் படியுங்கள்:
மன்னர்கள் மட்டும்தானா? உலகை மிரட்டிய 5 பேரரசிகள்!
International Women's Day

2026-ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்திற்காக இரண்டு முக்கியக் கருப்பொருள்கள் (Themes) முன்னிலைப் படுத்தப்படுகின்றன. அவை:

1. ஐக்கிய நாடுகள் சபையின் (UN) கருப்பொருள்: “உரிமைகள். நீதி. செயல்பாடு. அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக” (Rights. Justice. Action. For ALL Women and Girls) ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டு சட்ட ரீதியான சமத்துவத்திற்கும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான விரைவான நீதிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. உலகில் இன்னும் பல நாடுகளில் ஆண்களுக்கு நிகரான சட்டப்பூர்வ உரிமைகள் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அதைச் சரிசெய்ய “செயல்பாடு” (Action) அவசியம் என்பதை இது வலியுறுத்துகிறது.

2. சர்வதேச பெண்கள் தின (IWD) பிரச்சாரக் கருப்பொருள்: “கொடுத்துப் பெறுவோம்” (Give To Gain). இது பரஸ்பர உதவி மற்றும் ஆதரவை வலியுறுத்துகிறது. பெண்களுக்குத் தேவையான கல்வி, வழிகாட்டுதல் (Mentorship) மற்றும் வாய்ப்புகளை நாம் மற்றவர்களுக்குப் பகிரும்போது, அது ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கும் உதவும் என்ற நோக்கில் இந்த “Give To Gain” பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் முக்கிய நோக்கங்கள்: பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைக்க சட்டங்களை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தில் உள்ள இடைவெளியைக் குறைத்தல், பெண் குழந்தைகளுக்கு சமமான கல்வி மற்றும் சுகாதார உரிமைகளை உறுதி செய்தல்.

logo
Kalki Online
kalkionline.com