அதிமுக பொதுக்குழுக் கூட்டம்; அமளி துமளி! 

அதிமுக பொதுக்குழுக் கூட்டம்; அமளி துமளி! 
Updated on

அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக்கூட்டம் இன்று சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அமளிதுமளியுடன் நடைபெற்றது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தருகே கடும் வாகன நெரிசல் ஏறப்பட்டது. இதையடுத்து பொதுக்குழுக் கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ,எடப்பாடி பழனிசாமி கிரின்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டார்.

அவருக்கு வழிநெடுகிலும், அதிமுக தொண்டர்கள் மலர்களை தூவி, கோஷங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏறக்குறைய 3 மணி பயணத்திற்கு பின்னர், பொதுக்குழு நடக்கும் திருமண மண்டபத்தை வந்து சேர்ந்தார். அவரை கட்சியின் மூத்த நிர்வாகிகள் எழுந்து நின்று வரவேற்பளித்தனர். 

அதற்கு முன்னதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வந்து விட்டாலும், அவரது வருகையின்போது, ''எடப்பாடியார் வாழ்க, ஒற்றைத் தலைமை வேண்டும்'' என்ற கோஷங்கள் எழுந்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொதுக்குழு கூட்ட மேடையில் ஓபிஎஸ்ற்றும் இபிஎஸ்அருகருகே அமரவில்லை. அவர்கள் இருவருக்கும் நடுவில், கட்சியின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அமர்ந்திருந்தார்.

எம்ஜிஆர்,ஜெயலலிதா படங்களுக்கு மரியாதைமேடையில் வைக்கப்பட்டிருந்த கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கூட்டத்தை நடத்தி தருமாறு ஓபிஎஸ் முன்மொழிய, இபிஎஸ் வழிமொழிந்தார்.

இதையடுத்து  விழா மேடையில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது என்று பேசியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து சி.விசண்முகம் பேசியதாவது: 

அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமை அவசியம் வேண்டும். இப்படி இரட்டை தலைமை இருப்பதால், திமுகவை எதிர்த்து செயல்பட முடியவில்லை. மேலும் இரட்டை தலைமை செயல்பாட்டில் ஒருங்கிணைப்பு இல்லை.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலிலதா போன்று ஒற்றை தலைமை ஏற்பட வேண்டும். எனவே பொதுக் குழுவில் இரட்டை தலைமை ரத்து செய்து விட்டு ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க வேண்டும். அதற்கு வழிவகை செய்யும் வகையில் அடுத்த பொதுக்குழு தேதியை அறிவிக்க வேண்டும்.

-இவ்வாறு அவர் கோரினர்.  இதையடுத்து பாதியிலேயே ஓ.பி.எஸ் அரங்கை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து  மீண்டும் ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com