
- காதல் புனிதமானது!
- காதல்தான் உலகை வாழ்விப்பது!
- காதலே சாதி, மத பேதங்களைக் கடந்தது!
-காதலொன்றே எல்லோரையும் சமமாக்குவது!
என்றெல்லாம் பேசப்பட்டாலும், நமது தமிழ் சினிமாக்கள் காதலின் வெற்றியைக்காட்டிலும், தோல்வியைக் கொண்டாடியே திரைப்படங்களை எடுத்தன. அவ்வாறு எடுக்கப்பட்டவை நன்றாக ஓடவும் செய்தன! கதை, நடிப்பு, வசனம் ஆகியவற்றைக் காட்டிலும் படத்தில் வரும் பாடல்களே முக்கியம் பெற்றதோடு அல்லாமல், காலங்களைக் கடந்தும் மனித மனங்களில் பசுமையான இடத்தைப் பெற்றன! எழுபதைத் தாண்டியவர்களையும் இருபதுக்கு அழைத்துச் செல்லும் ஏக,போக உரிமையைப் பெற்றன அப்பாடல்களே!
காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்
கடந்தபின்னே அமைதி எங்கு பெறுவான்!-காலங்
கடந்தபின்னே அமைதி எங்கு பெறுவான்!
அன்புமயில் ஆடலுக்கு மேடை அமைத்தான்
துன்பமெனும் நாடகத்தைக் கண்டு ரசித்தான்!
இன்பச் சிறை விதித்து இரை கொடுத்தான்
இருந்தும் இல்லாத உருவெடுத்தான்!
என்றே அவன் தடுமாற, அவளோ,
ஆசையிலே பாத்தி கட்டி அன்பை விதைத்தாள்
அல்லும்பகல் காத்திருந்து பயிர் வளர்த்தாள்!
பாசத்திலே பலனைப் பறிகொடுத்தாள்
கனிந்தும் கனியாத உருவெடுத்தாள்! (கல்யாணப் பரிசு-1959)
எவ்வளவு அற்புதமான வரிகள்! எத்தனை ஆழமான கருத்துக்கள்!
மயங்க வைத்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை!
நினைக்க வைத்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை!
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை!
என்னைச் சொல்லிக் குற்றமில்லை!
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி! (குலமகள் ராதை-1963)
இந்த எண்ணம் தோன்றி விட்டால், பழி வாங்கும் எண்ணங்கள் யாருக்கும் வராதல்லவா?
நின்ற இடம் யாவும்
நிழல்போலத் தோணுதே!
அன்று சொன்ன வார்த்தை
அலை போல மோதுதே!
உண்மைதானே! காதற் களத்திலிருந்து பிரிந்து அப்பாற் சென்றவரைக் காட்டிலும், அங்கேயே வாழ்பவர்களுக்கு அந்த எண்ணம் எளிதில் மறக்காதல்லவா?
கணையாழி இங்கே
மணவாளன் அங்கே
காணாமல் நானும்
உயிர் வாழ்வதெங்கே?
மோதிரம் (கணையாழி) போட்டுக் கொள்வதெல்லாம் துன்பத்தை இரட்டிப்பாக்கத்தானோ!
கண்கள் இரண்டும் என்று
உம்மைக் கண்டு பேசுமோ?
காலம் இனிமேல் நம்மை
ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ? (மன்னாதி மன்னன்-1960)
உண்மைக் காதல் உடல் தழுவுவதல்ல! தூரத்திலிருந்து கண்களால் பேசிக் கொண்டால் போதுமே! எவ்வளவு கண்ணியம் காதலில்!மறக்கக் கூடிய வரிகளா இவையெல்லாம்!
வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க!
காத்திருந்த காதலனைத் தேடி நோயாளிக் கணவனுடன் வருகிறாள் காதலி! அவள் கணவனைக் காப்பாற்றும் பொறுப்பும் காதலனுக்கே. அதற்காக அவன் கோபப் படவில்லை! எரிச்சலோ, வெறுப்போ அடையவில்லை! மாறாகப் பெரும் பொறுப்பு வந்ததற்காக மகிழ்கிறான்! தன் இன்னுயிரையே கொடுத்து அவள் மஞ்சள் குங்குமத்தை நிலைக்கச் செய்கிறான். என்னே காதலின் பண்பு!
எங்கிருந்தாலும் வாழ்க!
உன் இதயம் அமைதியில் வாழ்க!
மஞ்சள் வளத்துடன் வாழ்க!
உன் மங்கலக் குங்குமம் வாழ்க!
அவள் வாழ வேண்டும்! கைப் பிடித்த கணவனுடன் கனிவோடு வாழ வேண்டும்!
உண்மைக் காதல் இதுதான்!
ஏற்றிய தீபம் நிலைபெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளிதர வேண்டும்
போற்றும் கணவன் உயிர்பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க! (நெஞ்சில் ஓர் ஆலயம்- 1962)
காதலி இன்னொருவனின் மனைவி என்று தெரிந்த பிறகும், திருமகள், தூயவள், பொன்மகள் என்று போற்றும் மாண்பை என்னென்பது?
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா?
மறக்கவும் விலகவும் தெரிந்தால் துன்பத்திலிருந்து விடுபட்டு விடலாமோ என்பது காதலியின் ஏக்கம்!
பிரிக்கத் தெரிந்த இறைவா
உனக்கு இணைக்கத் தெரியாதா?
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப் புரியாதா? (ஆனந்த ஜோதி-1963)
காதலின் ஏக்கத்தைப் பாடல் வரிகளல்லவோ பசுமரத்து ஆணி போல, உள்ளமென்ற மரத்தில் உறுதியாய்ப் பதிய வைத்து விடுகின்றன!
அறுபது ஆண்டுகளைத் தாண்டிய சில படங்களை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளோம்! அதற்கு ஒரு காரணமும் உண்டு!தமிழாண்டுகள் அறுபதல்லவா?
ஒரு சைக்கிளைத் தாண்டி அடுத்த சைக்கிளிலும் அப்பாடல்களின் மவுசு குறையவில்லை என்பதை நிரூபிக்கவே இவற்றை உதாரணங்களாகக் காட்டியுள்ளோம்!
இந்தப் பாடல்களுக்கும், இவற்றை
ஆம்! காதல் அழிவில்லாததுதானே!