உலகில் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஒருவர் காசநோயால் பாதிக்கப்படுகிறார்!

மார்ச் 24: உலக காச நோய் நாள்
March 24 - World Tuberculosis Day
World Tuberculosis Day
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று, ‘உலகக் காசநோய் நாள்’ (World Tuberculosis Day) கடைப்பிடிக்கப்படுகிறது.

1882 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் நாளில் டாக்டர் ராபர்ட் கொக் (Robert Koch) என்பவர் காசநோய்க்கான காரணியை (TB Bacillus) பெர்லினில் அறிவித்து, அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவர் எனும் விகிதத்தில் இறப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ராபர்ட் கொக்கின் இக்கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக அறிய வழி வகுத்தது. 1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில், காச நோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. அதனைத் தொடர்ந்து, 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.

என்புருக்கி நோய் அல்லது காச நோய் (Tuberculosis) என்பது மைக்கோபாக்டீரியா (Mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும். இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு (Mycobacterium Tuberculosis) என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது.

  • மைக்கோபாக்டீரியம் போவிசு (Mycobacterium Bovis)

  • மைக்கோபாக்டீரியம் ஆப்பிரிக்கானம் (Mycobacterium Africanum)

  • மைக்கோபாக்டீரியம் கனெட்டி (Mycobacterium Canetti)

  • மைக்கோபாக்டீரியம் மைக்குரோட்டி (Mycobacterium Microti)

முதலான நுண்ணுயிரிகளாலும் தூண்டப்படலாம்.

காச நோயானது பொதுவாக, மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோயுண்டாக்கினாலும், இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி (Lymphatic System), இரைப்பை - குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க வல்லவை.

இந்நோய் பொதுவாக டி.பி (TB) எனக் குறிப்பிடப்படுகிறது. TB என்பது Tubercle Bacillus அல்லது Tuberculosis என்பதன் சுருக்கமாகும். சில மருந்துகள் உதவியால் நோய்த்தொற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு நோய் தொற்றி வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தவருக்கு சிகிச்சையளிக்கவும், நோயிலிருந்து மீளவும் வாய்ப்புக்கள் இருப்பினும், இந்நோயை முற்றாக வர இயலாமற் செய்வதற்கான வழிமுறைகளை இன்னமும் அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கவில்லை.

இதையும் படியுங்கள்:
ஒருவருக்கு நோய்... ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் பாதிப்பு... காரணம் என்ன?
March 24 - World Tuberculosis Day

இந்த நோயானது இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை கொண்டது. ஏராளமான மனிதர்களில் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அது ஒரு ‘மறைநிலையில்' அல்லது துஞ்சுநிலையில் (Latent TB) காணப்படும். அப்படி உள்ளவர்களில் பத்தில் ஒரு பங்கினர் பிந்திய நிலையில் நோய் அறிகுறிகளை வெளிக்காட்டி நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிடில் அதில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாவர்கள் இறக்கின்றனர்.

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 இலட்சம் மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஒருவர் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாவதாக அறியப்படுகிறது. நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகும் மனிதர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இந்நோய் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். காசநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்பதை இந்நாளில் நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நுரையீரலில் வரும் இந்தப் பிரச்சனை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! 
March 24 - World Tuberculosis Day
logo
Kalki Online
kalkionline.com