
ஒவ்வொரு ஆண்டும் மே 12ம் தேதி செவிலியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏன் மே மாதம் 12ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது?
அது தான் செவிலியர்களின் முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாள்.
1820ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதியன்று இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் நகரில் நைட்டிங்கேல் பிறந்தார். ஆனால் இங்கிலாந்தின் மத்திய பகுதியில் உள்ள டெர்பிஷைரில் வளர்ந்தார்.
தனது பெற்றோர்களுடன் 1937-1939ல் ஐரோப்பாவைச் சுற்றிப் பார்த்த போது அவர் வியாதியால் நலிந்தோர் படும் பாட்டைக் கண்டு வருந்தினார்.
அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்யவேண்டும் என்ற உள்ளார்ந்த ஆர்வம் அவரை உந்தியது. வாழ்நாளை அவர்களுக்காக அர்ப்பணிப்பது என்ற முடிவுக்கு வந்தார்.
1849ல் இத்தாலி சென்ற அவர் கிரீஸ், எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று 1850ல் ஜெர்மனிக்கு வந்தார்.
நர்ஸிங் துறையில் நல்ல பயிற்சி வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். ஆனால் அவரது பெற்றோரோ இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்புக்கு இடையே மேற்கு ஜெர்மனியில் உள்ள கைஸர்வொர்த்தில் தனது செவிலியர் பயிற்சிப் படிப்பை அவர் முடித்தார்.
அப்போது 1854ம் ஆண்டு கிரீமியப் போர் ஆரம்பித்தது. காயம் பட்ட போர்வீரர்கள் அவரது உதவியை நாடி அவரிடம் வர ஆரம்பித்தனர்.
காயம் பட்டோருக்கு தனது உதவி செய்யும் எண்ணம் குறித்து பிரிட்டிஷ் அமைச்சருக்கு அவர் ஒரு கடிதத்தையும் அனுப்பினார். உடனே அனுமதி கிடைத்தது.
கிரீமியாவில் உஸ்குடர் என்ற இடத்திற்கு தனக்கு உதவியாக இருக்கும் 38 பெண்மணிகளுடன் அவர் சென்றார்.
காயம்பட்ட அனைத்து வீரர்களுக்கும் ஆறுதல் கூறியதோடு, அவர்கள் காயங்களுக்கு மருந்திட்டு கட்டுப் போட்டார். இவருடைய உதவியால் வீரர்களின் இறப்பு எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
1856ல் போர் முடியும் வரை அவரது சேவை தொடர்ந்தது.
காயம் பட்ட வீரர்கள் இருக்கும் கூடாரங்களுக்கு கையில் விளக்கேந்தியவாறே சென்று அவர் சேவை செய்வது வழக்கம்.
ஆகவே அனைவரும் அவரை அன்புடன் - விளக்கேந்திய பெண்மணி - ‘தி லேடி வித் தி லேம்ப்’ (THE LADY WITH THE LAMP) என்று அழைக்க ஆரம்பித்தனர்.
ஒரு போர்வீரர் மனமுருகிக் கூறினார் இப்படி: “ஆஹா! அவர் அருகில் சென்றாலேயே எப்படி ஒரு ஆறுதலை அவர் எங்களுக்கு அளிக்கிறார்! ஒருவரிடம் அன்புடன் பேசுவார்; இன்னொருவரைப் பார்த்து தலையை அசைப்பார், எல்லோரையும் பார்த்து புன்சிரிப்பை நழுவ விடுவார். எல்லோரிடமும் அவர் பேச முடியாது; ஏனெனில் நாங்கள் நூற்றுக் கணக்கில் இருக்கிறோம். ஆகவே அவர் நிழலைப் பார்த்து முத்தமிடுவோம்; எங்கள் தலையணையில் திருப்தியுடன் படுத்துக் கொள்வோம்.’
தி ஏஞ்சல் ஆஃப் கிரீமியா என்ற பெயரையும் அவர் பெற்றார்.
நைட்டிங்கேல் ஸ்கூல் என்ற ஒரு பள்ளியை அவர் நிறுவினார். இதுவே செவிலியர் துறையில் ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி நல்ல பயிற்சியையும் தந்தது.
லண்டனில் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி அவர் மறைந்தார்.
1974ல் மே மாதம் 12ம் தேதி உலக செவிலியர் தினக் கொண்டாட்டம் அவர் நினைவாக ஆரம்பிக்கப்பட்டது.
அவருக்கு ஏராளமான விருதுகள் தரப்பட்டன. 1907ல் பிரிட்டிஷ் ஆர்டர் ஆஃப் மெரிட் அவருக்கு வழங்கப்பட்டது.
ஆங்கிலக் கவிஞரான ஹெச். டபிள்யூ. லாங்பெல்லோ அவரைப் புகழ்ந்து இப்படி ஒரு கவிதையை எழுதினார்:
“A Lady with a Lamp shall stand
In the great history of the land.
A noble type of good
Heroic Womanhood”
2025ல் செவிலியர் தினக் குறிக்கோள்: நமது செவிலியர்! நமது எதிர்காலம்! செவிலியரை அக்கறையுடன் பாதுகாத்தால் பொருளாதாரம் வலுப்படும்!” ("Our Nurses. Our Future. Caring for nurses strengthens economies.")