
ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்குச் சமம், அதே போல் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்துக்கு சமம், என்று புத்தகங்களின் மதிப்பை நண்பனோடு ஒப்பிட்டு சொன்னவர் தான், விண்வெளி நாயகன் என்று அழைக்கப்படும், பாரத ரத்னா டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயா அவர்கள்.
அவரின் வாழ்வில் பல சுவை மிகுந்த வலி நிறைந்த அனுபவங்களும், உணர்வுகளும் ஏற்பட்டிருக்கும். அந்த அனுபவங்களில் அப்துல் கலாம் அவர்களே ஒரு மேடையில், நான் ரசித்த, விரும்பிய எனக்கு பிடித்த ஒரு புத்தகம் நான் வறுமையில் கஷ்டப்பட்டபோது எனக்கு ஒரு நண்பன் போல் உதவியது..! என்று கூறினார்.
அப்துல் கலாமும், The Theory of Velocity புத்தகமும்..!
1955 ஆம் ஆண்டு காலகட்டம், சென்னையில் உள்ள (Madras Institute of Technology) எம்.ஐ.டி யில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார் அப்துல் கலாம் ஐயா அவர்கள். அப்போது, ஒரு நாள் விடுதியில் தங்கி இருக்கும் சக நண்பர்களுக்கு விடுமுறை என்பதால் அனைவரும் சொந்த ஊருக்கு கிளம்பி விட்டார்கள். ஆனால், அப்துல் கலாம் அவர்களுக்கு ஒரு தேர்வு இருப்பதால் அதற்கு முழு வீச்சாக படித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் அப்போது அவருக்கு தொலைபேசியில் ஒரு ட்ரிங்கால் வருகிறது. அந்தக் காலத்தில் தான் ஸ்மார்ட்போன் இல்லையே. அழைப்பை ஏற்று பேசிய போது அப்துல்கலாமுக்கு ஒரு பேரதிர்ச்சி செய்தியானது வந்தது. என்னவென்றால், ராமேஸ்வரம் கடுமையான புயலால் பாதிக்கப்பட்டிருப்பது. அதுமட்டுமில்லாமல் அவரின் குடும்பமும் கஷ்டத்தில் இருப்பது தெரிய வருகிறது. இதைப் புரிந்து கொண்ட அப்துல் கலாமிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தனது பையை பார்க்கிறார் அதில் பணம் இல்லை. பணம் இருந்தால் மட்டுமே ஊருக்குச் சென்று தனது குடும்பத்தையும், உறவினர்களையும் சந்திக்க முடியும் என்ற சூழல் நிலவியது.
அப்போது தனது பக்கத்தில் இருந்த, The Theory of Velocity புத்தகத்தை பார்க்கிறார். ஏரோ டைனமிக் பாடத்தில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்ணை பெற்றதால், அந்தக் கல்லூரியிலுள்ள ப்ரொபசர் திரு. லட்சுமண சாமி முதலியார் அவர்களால், அப்துல் கலாமிற்கு அந்த புத்தகம் பரிசாக கிடைக்கப்பெற்றது. அந்தப் புத்தகத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 400 ரூபாய் இருக்கும். அப்துல் கலாமிற்கு மிகவும் பிடித்த புத்தகம்.
இப்போது அந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு கவலையோடு மூர் மார்க்கெட் செல்கிறார். ஒரு பழைய புத்தக விற்பனை நிலையத்திற்கு சென்று, இந்த புத்தகத்தை கடைக்காரரிடம் கொடுத்து தனது கஷ்டத்தை கூறி, ஊருக்கு செல்வதற்காக அறுபது ரூபாய் பணத்தை கேட்கிறார். கடைக்காரர் புத்தகத்தை திருப்பி பார்த்துவிட்டு, “இந்த புத்தகம் ரொம்பவும் விலை அதிகமா இருக்கே... சரி நீ இப்போ கஷ்டத்துல இருக்கன்னு தெரியுது... உனக்கு நான் ஊருக்கு போறதுக்கான பணத்தை கொடுக்கிறேன்... ஊருக்கு போய்ட்டு வந்து பணத்தை கொடுத்துட்டு, திருப்பி இந்த புத்தகத்தை வாங்கிக்கோ... இந்த புத்தகத்தை நான் யாருக்கும் விற்க மாட்டேன் பயப்படாம போயிட்டு வா...” என்று கூறுகிறார்.
பிறகு கையில் பணத்தை வாங்கிக் கொண்டு ஊருக்கு கிளம்புகிறார். ஊரில் கஷ்டப்படும் தனது குடும்பத்தை சந்திக்கிறார். இருந்தாலும், அவரின் மனம் அந்த புத்தகத்தின் மேலேயே அலைபாய்ந்து கொண்டிருந்தது. தேவைப்படும் உதவிகளை செய்து விட்டு, அம்மாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, மறுபடியும் இராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு வருகிறார். நேராக அந்த கடைக்குச் சென்று, 60 ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு, அந்த புத்தகத்தை கையில் வாங்கிக் கொள்கிறார். புத்தகத்தை கையில் வாங்கியதும் ஓர் இனம் புரியாத சந்தோஷத்தில் திகைத்து நிற்கிறார். இப்போது அந்த கடைக்காரர், “உன்னைய பார்க்கும் போது இந்த புத்தகத்து மேல உனக்கு மிகப்பெரிய பற்று இருக்கு. நீ நல்லா படிச்சு நல்லா வரணும்..!” என்று வாழ்த்தினார். அந்தப் பெரியவரின் வாழ்த்துகள்படியே, இன்று உலகத்தின் ஆகச் சிறந்த விண்வெளி நாயகன் என்று போற்றக்கூடிய அளவிற்கு உயர்ந்துள்ளார் நம் மண்ணின் மைந்தர் அப்துல் கலாம் ஐயா அவர்கள்..!
இப்படிப் பல கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் தாண்டி இதையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல் தன்னம்பிக்கையோடும், முழு முயற்சியோடும் செயல்பட்டதால் மட்டுமே இன்று வரை உலகம் போற்றும் மாமனிதராக அப்துல் கலாம் ஐயா அவர்கள் திகழ்கிறார்..!