

தரிகொண்ட வேங்கமாம்பா (Tarikonda Venkamamba) கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் எண்ணற்ற தெலுங்கு இலக்கியங்கள் படைத்து திருமலை வேங்கடவன் மீது பக்தி செலுத்திய வைணவப் பெண் அடியார்களுள் ஒருவர்.
வெங்கமாம்பா 1730-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் தரிகொண்டா எனும் கிராமத்தில் கிருஷ்ணய்யா மாத்யா மங்கமாம்பா தம்பதிக்கு மகளாக பிறந்தார். மிக இளவயதிலிருந்தே அவர் இறைவனிடம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். திருமலை வேங்கடவனையே தன்னுடைய கணவராக வரித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். உலகப் பற்றுகளிலிருந்து அவர் விலகியிருந்தது அவரது குடும்பத்தினரைக் கவலையடையச் செய்தது. அதனால், அவருக்குத் திருமணம் செய்து வைப்பதன் மூலம் 'மீட்க' அவர்கள் முடிவு செய்தனர். ஆனால், அவரது கணவர் இளம் வயதிலேயே இறந்துவிட்டதால், அவர் திருமலையில் தன் வாழ்நாளை இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டார்.
இளம்பிராயத்திலேயே கணவர் இறந்தபோது கூட சுமங்கலி பெண்களுக்குண்டான மங்கலச் சின்னங்களை நீக்காது வாழ்ந்தது அக்காலத்திலேயே மிகப்பெரிய புரட்சியாகும். திருமலை வேங்கடவனே தன்னுடைய கணவனாகக் கொண்டதால் இவர் இறுதிவரை மங்கள சின்னங்களோடே வாழ்ந்தார்.
சுப்பிரமணியுடு என்ற ஆசானிடம் யோகக்கலை பயின்று திருமலையிலேயே வாழ ஆரம்பித்த அவர் 'தரிகொண்ட நரசிம்ம சதகம்', விஷ்ணு பாரிஜாதம் 'உள்பட பல தெலுங்கு நூல்களை இயற்றினார்.
கடவுள் பக்தியில் மூழ்கி, தனது இருபதாவது வயதிற்குள், அவரைப் போற்றி 100க்கும் மேற்பட்ட கவிதைகளைத் தொகுத்திருந்தார். அவரது ஆழ்ந்த பக்தியின் வடிவம் அக்காலத்திய பல முக்கியப் பிரமுகர்களுக்கு உத்வேகம் அளித்ததுடன், அந்த நற்காரியத்திற்கு கணிசமான நன்கொடைகளை வழங்கவும் அவர்களைத் தூண்டியது. ஏழைகளுக்குச் சேவை செய்வதைக் கடவுள் சேவைக்குச் சமமாகக் கருதிய வெங்கமாம்பா, கோயிலுக்கு வந்த ஏழை பக்தர்களுக்கு இலவச உணவும் தண்ணீரும் வழங்குவதற்காக அந்த நன்கொடைகள் அனைத்தையும் பயன்படுத்தினார்.
ஒரு முறை திருவேங்கடவன் நகைகள் காணாமல் போக, அந்த பழி தினமும் கோயில் நடை சாற்றியவுடன் வேங்கடவன் முன் பாடும் வழக்கத்தைக் கொண்டிருந்த வேங்கமாம்பாவின் மீது சுமத்தப்பட்டது. கோயிலிலிருந்து விரட்டப்பட்டார். இதனால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட இவர் தும்புறு குகையிலிருந்து திருமலை கருவறைக்கு ரகசிய பாதை அமைத்து தன்னுடைய பாமாலை பணியை யாருமறியவண்ணம் ஆறு வருடங்கள் தொடர்ந்து வந்தார். பின்னாளில் திருவேங்கடவன் மூலம் இவரின் பக்தி எல்லோராலும் அறியப்பட்டு மீண்டும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதோடு இவரின் பாடலோடும் கற்பூர ஆர்த்தியோடும் நடை சாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இன்றும் தொடர்கிறது.
அவர் 1817-ஆம் ஆண்டில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மற்றும் ஸ்ரீ வீரபிரம்மந்திர சுவாமியைப் போல தன்னுடைய 87 ம் வயதில் உயிருடன் சமாதி அடைந்தார். மேலும், திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கும் முறையை அவர் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.
இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது. கோயில் நடை சாற்றப்படும் முன்பு செய்யும் உபசாரங்களில் இறுதியாக எடுக்கப்படும் கற்பூர ஆர்த்திக்கு 'வேங்கமாம்பா ஆர்த்தி' என்றே பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறது. இன்றும் திருமலையில், அவரது பெயர் பக்தி, ஈகை மற்றும் மனிதநேயத்தின் மறுபெயராகத் திகழ்கிறது.
திருமலை மாடவீதிக்கு அருகிலுள்ள இவரின் பிருந்தாவன (உடல் புதைக்கப்பட்ட இடம்) வளாகத்தை உள்ளடக்கி SVBNR உயர்நிலைப் பள்ளியாக திருமலை கோயில் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. ஆயினும் வேங்கமாம்பாளின் சமாதியை யாவரும் வணங்கும் வண்ணம் அடியார்கள் எப்போதும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் திருமலையை வணங்க வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் இடும் மூன்று பெரிய வளாகங்களுக்கு "மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா" என்று இவரின் பெயரை இட்டு திருமலை கோயில் நிர்வாகம் பெருமைச் சேர்த்துள்ளது.