
உலகில் முதல் முறையாக இன்சூரன்ஸ் கம்பெனி 1818ம் ஆண்டு ஐரோப்பியர்களுக்காக மட்டும் தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் இன்சூரன்ஸ் கம்பெனி 1870ம் ஆண்டு ‘பம்பாய் மியூச்சுவல் கம்பெனி’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பல தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வந்தன. நாட்டில் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு அனைத்தும் 245க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வசமே இருந்தன. இவை உரிய இழப்பீடு வழங்காமல் இருந்தது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டன. இதையடுத்து பல ஆயுள் காப்பீட்டுக் கழகங்களை மத்திய அரசு 1956ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
அதே ஆண்டு 1956ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி எல்.ஐ.சி. தொடங்கப்பட்டது. எல்.ஐ.சி. (LIC) என்பது லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்பதன் சுருக்கமாகும். இது ஒரு இந்திய அரசுக்கு சொந்தமான காப்பீடு மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகும். இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது.
அதற்கு முன்பு, இந்திய தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி சங்கங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, எல்.ஐ.சி. உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம், ஆயுள் காப்பீட்டை நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் கொண்டு செல்வதும், மக்களின் சேமிப்புகளை நாட்டு நலப் பணிகளில் முதலீடு செய்வதும் ஆகும். மத்திய அரசின் எல்.ஐ.சி. (ஆயுள் காப்பீட்டு நிறுவனம்) நிறுவனத்தின் நேர்மையான செயல்பாடு கிராமங்கள் வரை மக்களை ஈர்த்தது. இதன் தலைமையகம் மும்பையில் செயல்படுகிறது.
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் 1972ம் ஆண்டு நவம்பரில் அமைக்கப்பட்டது. 1973 ஜனவரி முதல் தேதியிலிருந்து எல்லா பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளும் இதன் துணை அமைப்புகளாயின. அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு நிறுவனம், 24 மணி நேரத்தில் அதிக ஆயுள் காப்பீட்டு பாலிசி (கொள்கைகளை) விற்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. நிறுவனத்தின் பெயர் இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC). 2025 மே 23ம் தேதி நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 5.44 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. குறிப்பாக, ஆயுள் காப்பீட்டுத் துறையில் இது ஒரு ஆதிக்கம் செலுத்தும் சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.
2025 ஜனவரி 20 அன்று, எல்.ஐ.சி.யின் மொத்தம் 4,52,839 முகவர்கள் இந்தியா முழுவதும் வியக்கத்தக்க வகையில் 5,88,107 ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வெற்றிகரமாக விற்று வழங்கினர். ஒரே நாளில் இந்த சாதனையை நிகழ்த்தினர். இது ஒரு கின்னஸ் சாதனை.
இந்தியாவின் டாப் கம்பெனி என்றால் அது எல்.ஐ.சி.தான். எல்.ஐ.சி. நிறுவனத்திடம் இருக்கும் மொத்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் எண்ணிக்கை 29 கோடி. இது சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம். 2001ம் ஆண்டு தனது ஏஜென்டுகளுக்கு இந்த நிறுவனம் 4500 கோடிகளை கமிஷனராக வழங்கி சாதனை புரிந்தது.
இன்ஷூரன்ஸ் துறையைப் பொறுத்தவரை, நம் நாடு உலக அளவில் 10வது மிகப் பெரிய சந்தையாகவும், பிரிமீயத்தைப் பொறுத்தவரை ஆசிய அளவில் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது. நிகர பிரீமியம் வருமானத்தில் (Gross Written Premiem) எல்.ஐ.சி. நிறுவனம் உலக அளவில் ஐந்தாவது இடத்திலும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த சொத்து அடிப்படையில் உலக அளவில் 10வது இடத்திலும் உள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனத்தில் இந்தியா முழுக்க 13.5 லட்சம் ஏஜென்டுகள் உள்ளனர். இவர்களுடன் 1 லட்சம் நேரடி ஊழியர்கள் எல்.ஐ.சி.யில் பணி புரிகின்றனர். எல்.ஐ.சி.க்கு இந்தியா முழுக்க 2,048 கிளை அலுவலகங்களும் 1,554 சாட்டிலைட் அலுவலகங்களும் உள்ளன. மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் மிகப் பெரியது எல்.ஐ.சி. நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 39 லட்சம் கோடி ரூபாய். இது 150 நாடுகளின் ஜி.டி.பி. மதிப்பை விட அதிகம்.
எல்.ஐ.சி. நிறுவனத்திற்கு, பிரிட்டிஷ் தரநிலை நிறுவனம் ஐ.எஸ்.ஓ. வணிக தொடர்ச்சி மேலாண்மை அமைப்பு சான்றிதழை வழங்கி கௌரவித்துள்ளது. இது, LICயின் செயல்பாட்டு மீள்தன்மை, வணிகத் தொடர்ச்சி திட்டமிடல் மற்றும் இடர் மேலாண்மை திறன்கள் ஆகியவை உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் ஒத்துப்போகின்றன என்பதை அங்கீகரித்து, பிரிட்டிஷ் தரநிலை நிறுவனத்தால் வழங்கப்பட்டு உள்ளது.