

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருப்பவர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர். இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. இதன் முதலாவது போட்டி கொழும்பில் உள்ள காலே மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் அஜித் அகர்கரும் தற்போது இணைந்துள்ளார். சமீப காலத்தில் அகர்கரின் தேர்வின் மீது மிக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற அயர்லாந்து தொடர் மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களை, இந்திய அணி இழந்தது, மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. வழக்கமாக விமர்சனங்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தான் வைக்கப்படும். ஆனால், இந்த முறை விமர்சனங்கள் நேரடியாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழு மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது வைக்கப்பட்டது.
அணியின் தேர்வு குறித்து கம்பீரின் பொது தளங்களிலும் இந்திய ஊடகங்களிலும் நேரடியாகவே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் , மற்றும் கிரிக்கெட் விமர்சர்களால் விமர்சிக்கப்பட்டார். அயர்லாந்து தொடரின் போது வைபவ் சூர்யவன்ஷியை அறிமுகம் செய்யாமல் காக்க வைத்தது , மற்றும் இங்கிலாந்து தொடரில் போதிய வாய்ப்புகள் கொடுக்காமல் அமர வைத்தது. வைபவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை மாற்றி மாற்றி அவர்களுக்குள் மன உளைச்சலை ஏற்படுத்தியது .
இதற்கெல்லாம் உச்சம் வைத்தது போல் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் ஷர்மா ஓய்வை அறிவிக்கப் போவதாக செய்திகள் பரவியதில் , அகர்கரின் பெயர் கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்கிலாந்து தொடரில் ரோஹித் சர்மாவின் ஆட்டம் அவர் அணியில் நிலைத்து இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும் அணி முழுக்க உள்ள அனுபவமற்ற வீரர்கள் தடுமாறுவதால், தொடர்ச்சியான தோல்விகளை இந்திய அணி சந்தித்து வருகிறது.
அஜீத் அகர்கர் 2023 ஆம் ஆண்டில் இந்த கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவரது பதவி காலம் ஏப்ரல் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரை இவரது பதவி நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர் அணியில் தற்போது கொண்டு வந்த மாற்றங்கள் அனைத்தும் அணியின் வெற்றிக்கு சிறிதும் உதவவில்லை.
மேலும் தேசிய அளவில் கிளம்பிய பல்வேறு விமர்சனங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதன் காரணமாக அகர்கரின் எதிர்காலம் நீட்டிக்கப்படுமா? என்று தெரியவில்லை. அவருக்கு பதில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லட்சுமணன், புதிய தேர்வுக்குழுத் தலைவராக பிசிசிஐ தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக பல முன்னணி வீரர்கள் விலகி உள்ளதை அடுத்து, சிறந்த வீரர்களை தேர்வு செய்வது தேர்வு குழுவிற்கு பெரிய தலைவலியாக இருக்கும். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் காயங்கள் அகர்கருக்கு பெரிய சோதனையாக இருக்கும்.
இந்த தொடரில் இந்திய அணி சரியாக விளையாட விட்டால் , அகர்கரின் பதவிக்கும் ஆபத்து வரும். இந்திய கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலத்தை தேர்வு செய்த அகர்கரின் நிலமை, தற்போது அவரது எதிர்காலம் என்னவென்று தெரியாமல் உள்ளது.