

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் என்ற சொல்லிற்கு முதல் உதாரணமாக இருந்தவர் , மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் என்றால் மிகையல்ல. கிரிக்கெட் உலகில் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்துவீச்சாளர் , சிறந்த பீல்டர் என்ற பன்முகத்தன்மை கொண்ட மகத்தான விளையாட்டு வீரராக இருந்தவர். மேற்கிந்திய தீவுகள் அணி எழுச்சி பெற்று ஆதிக்கம் செலுத்துவதற்கு இவர் அடித்தளம் அமைத்து கொடுத்திருந்தார். கிரிக்கெட் உலகில் பல பெரிய சாதனைகளை அந்த காலத்தில் இவர் நிகழ்த்தி ஜாம்பவானாக அறியப்பட்டிருந்தார்.
சோபர்ஸ்1936-ஆம் ஆண்டு பார்படாஸில் பிறந்தார். இளம் வயதிலேயே கிரிக்கெட் மீதான ஆர்வத்தில் போட்டிகளில் கலந்து கொண்டு, தனது 16 வயதிலேயே முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். 1954 ஆம் ஆண்டில் தனது 17 வயதில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார். தொடக்க காலத்தில் இடது கை மிகவேக பந்துவீச்சாளராக செயல்பட்டவர் , அடுத்தடுத்து தனது பேட்டிங் திறனையும் வெளிப்படுத்தி புகழ் பெறத் தொடங்கினார்.
1954 முதல் 1974 வரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8032 ரன்களை குவித்திருந்தார். மேலும் அவரது பேட்டிங் சராசரி 57.78 ஆக இருந்து அன்றைய காலத்தில் மிகவும் உச்சமாக கருதப்பட்டது. 1958-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அவர் 365 ரன்கள் அடித்தது , அன்று மிகப்பெரிய இமாலய சாதனையாக இருந்தது. இந்த சாதனையை லாரா தகர்க்க 36 ஆண்டுகள் ஆனது. ஆனாலும் டெஸ்ட் போட்டியில் அடிக்கப்பட்ட முதல் முச்சதமாக இதுவே இருக்கிறது.
பாகிஸ்தான் போட்டியை தொடர்ந்து வரிசையாக 5 தொடர்களிலும் , ஒவ்வொரு தொடரிலும் 500க்கும் மேல் ரன்களை குவித்து சாதனை செய்துள்ளார்.1958-59-ல் இந்திய சுற்றுப்பயணத்தில் மட்டும் 3 சதங்களை விளாசி இருந்தார் , அடுத்து வந்த இங்கிலாந்து தொடரில் 709 ரன்களை குவித்து 101.28 என்ற சாதனை அளவு பேட்டிங் சராசரியை வைத்திருந்தார்.
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 26 சதங்கள் அடித்த சாதனைக்கு சொந்தக்காரர். அதே நேரம் சர்வதேச கிரிக்கெட்டில் இரட்டைச்சதம் மற்றும் முச்சதம் ஆகியவற்றை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை எப்போதுமே அவர் வசம் உண்டு. ஒருமுறை இங்கிலாந்தில் நடைபெற்ற தொழில் முறை கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனையை செய்திருந்தார். கிரிக்கெட்டில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரரும் சோபர்ஸ் தான்.
அவர் அந்த காலகட்டத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பவுலராகவும் இருந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 235 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனைகளுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு தகுந்தவாறு சில நேரம் சுழற் பந்து வீச்சு மற்றும் வேகப் பந்துவீச்சு ஆகியவற்றை மாறி மாறி பயன்படுத்துவார்.
சோபர்ஸ் ஒரு சிறந்த பீல்டரும் கூட , எதிரணியிடர் எப்படி அடித்தாலும் இவரது எல்லையில் வரும் பந்துகளை தவறாமல் தடுத்து, ரன்களை கட்டுப்படுத்துவதிலும் சிறந்த வீரராக இருந்துள்ளார். குறிப்பிட்ட காலம் மேற்கிந்திய அணியின் கேப்டனாகவும் அவர் வெற்றிகரமாக செயல்பட்டு வந்தார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான டான் பிராட்மேன், " சோபர்ஸ் ஐந்து பேட்ஸ்மேன்கள் மற்றும் ஐந்து பந்து வீச்சாளர்களுக்குச் இணையான ஒரே வீரர் " என்று புகழாரம் சூட்டி இருந்தார்.
இவரது கிரிக்கெட் சாதனைகளை பாராட்டி1975-ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத் 'சர்' பட்டம் வழங்கி கௌரவித்தார். ஏராளமான சாதனைகளை செய்து கிரிக்கெட் உலகில் நீங்காத இடம் பிடித்திருந்த கார்ஃபீல்ட் சோபர்ஸ் நேற்று விண்ணுலகம் புகுந்தார். அவரது மறைவிற்கு கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ,சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவும் அவரது மறைவிற்கு புகழஞ்சலி செலுத்தினார்.