![virat with Nuan](http://media.assettype.com/kalkionline%2F2024-07%2F08cbdcd6-0648-4367-b622-cfa8fda4b160%2FUntitled_design___2024_07_01T124726_799.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
இலங்கையில் பஸ் டிரைவராக இருந்தவர் இன்று இந்திய கிரிக்கெட் அணிக்கு முக்கியமான நபராக திகழ்கிறார். வாருங்கள், அவரை பற்றி பார்ப்போம்.
இலங்கையில் இரண்டு முதல்தர போட்டிகளை மட்டும் விளையாடிய ஒரு வேகப்பந்து வீச்சாளர். அதற்குமேல் கிரிக்கெட்டில் வாய்ப்பு இல்லாத நிலையில் வாழ்க்கையை நடத்த கூட பணம் இல்லாததால், பாடசாலை சேவை பஸ் ஓட்டுனராக மாறினார். அப்போது அவருக்கு துடுப்பாட்ட வீரர்களுக்கு பந்து வீச்சு பயிற்சியின் போது side arm மூலமாக பந்து வீச்சு பயிற்சி வழங்கும் வாய்ப்புக் கிடைத்தது. சைட் ஆர்ம் என்பது கரண்டி போல இருக்கும் உபகரணம். அதில் பந்தை வைத்து வேகமாக வீசுவார்கள்.
நுவான் செனவிரத்ன என்பவர்தான் அந்த வேகப்பந்து வீச்சாளர்; பயிற்சியாளர். முதன் முதலில் இலங்கை ஏ அணிக்கு அந்த பயிற்சியை வழங்கினார். அதன் பின் அவர் உலகிலேயே மிக வேகமாக வீசக்கூடிய வீரர் என்பதை அறிந்த இலங்கை தேசிய அணியின் பயிற்சியாளர் அவரை தேசிய அணி வீரர்களுக்கு பந்து வீச சில வாய்பபுக்களைக் கொடுத்தார். ஆனால் இலங்கை தேசிய அணி வீரர்கள் அவர் மிக வேகமாக பந்தை சைட் ஆர்ம் மூலம் வீசுவது தங்களுக்கு காயத்தை ஏற்படுத்தலாம் என்று முறையிட்டதால் அவருக்கு தேசிய அணிக்கு பந்து வீசி பயிற்சி வழங்க நிரந்தர வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அப்போதுதான் இவரைப் பற்றி விராட் கோலி கேள்விப்பட்டு, விராட் கோலியின் விசேஷ கோரிக்கையின் அடிப்படையில் இந்திய அணிக்கு பயிற்சி வழங்கும் அணியில் நிரந்தர இடம் கிடைக்கிறது. இந்தியா வந்தவர், விராட் கோலிக்கு மிக வேகமாக பந்து வீசலாமா? அதனால் தனது வேலைக்கு பாதிப்பு வரலாமோ? என்று யோசிக்கிறார். அப்போது கோலி, "உன்னை நாங்கள் எடுத்தது அந்த வேகமான பந்துகளை வீச வேண்டும் என்பதற்காகவே, யோசிக்காமல் வீசு" என்கிறார்.
அதன்பின் விராட் கோலியின் வலை பயிற்சியின் போது ஆஸ்தான சைட் ஆர்ம் பந்து வீச்சாளர்களில் ஒருவராக மாறிப்போகிறார் நுவான். நுவான் உள்ளிட்ட அணியினர் தனது துடுப்பாட்டம் மேம்பட எந்தளவு முக்கியமானவர்கள் என விராட் கோலி பேசும் வீடியோ யூ டியூப்பில் உள்ளது.
விராட், நுவான் பற்றி சொல்லும் போது "நுவான் இலங்கையர் என்றாலும் , இப்போது இந்தியர் போல் ஆகிவிட்டார்" என்கிறார். இலங்கை அணியால் புறக்கணிக்கப்பட்டவரை இந்திய அணி, குறிப்பாக கோலி, உள்வாங்கி இன்று உலகத்தில் உள்ள சிறந்த ஒரு throwdown specialist ஆக அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் அவரைப் பயன்படுத்தி தங்கள் துடுப்பாட்ட திறனையும் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.
இந்தியா திறமைக்கு மட்டுமே மதிப்பு கொடுக்கும் நாடு.