

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
போட்டி நடைபெறும் கவுகாத்தி மைதானத்தில் இதுவரை 4 இருபது ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டங்களில் தோல்வி கண்டது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.
தொடரை கைப்பற்றும் முயற்சியில் இந்திய அணியும், தொடரை இழக்காமல் இருக்க நியூசிலாந்து அணியும் கடுமையாக போராடியதால் தொடக்கம் முதலே ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். டெவான் கான்வே 1 ரன்களுக்கும் , டிம் சீபராட் 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தது.
நிலைமையை உணர்ந்த கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன் மட்டும் பொறுப்புடன் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இருவரும் பொறுமையாக விளையாடி பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய நிலையில், கிளென் பிலிப்ஸ் 48 ரன்னிலும், மார்க் சாப்மேன் 32 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து 153 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்திய அணியில் பும்ரா 3 விக்கெட்டுகள், ஹர்திக் பாண்டியா, ரவி பிஷ்ணோய் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அதனை தொடர்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து அணியை மீட்டெடுத்ததுடன் அதிரடியில் வெளுத்து வாங்கிய நிலையில் இஷான் கிஷன் 13 பந்துகளில் 28 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினார்.
தொடர்ந்து களத்தில் இருந்த அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி நியூசிலாந்து அணியின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். நியூசிலாந்து அணியின் எல்லா பந்தையும் துவம்சம் செய்த அபிஷேக் சர்மா 14 பந்தில் அரைசதமும், 20 பந்துகளில் 68 ரன்களும் அடித்து அசத்தினார்.
மறுபுறம் சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களின் எல்லா பந்துகளையும் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்க விட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியதுடன் 57 ரன்களை குவித்தார்.
இறுதியில் இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-0 என கணக்கில் தொடரை கைப்பற்றியது.