

அவுட்... இல்லை லைனுக்குள் என்று நண்பர்களுக்குள் எழும் சிறிய விவாதம்… அடுத்த நொடியே அனைவரும் சிரித்துக்கொண்டே மீண்டும் விளையாட்டைத் தொடர்வோம்.. பள்ளி கல்லூரி அல்லது மாலை நேரங்களில் வீட்டருகே பலரும் பேட்மிண்டனை முதன் முதலில் இப்படித்தான் அறிந்திருப்போம். அந்த சிறிய ராக்கெட்டும் வேகமாய் பறக்கும் ஷட்டிலும் ஒரு நாள் இந்தியாவை உலக அரங்கில் பெருமையுடன் உயர்த்தும் என்று அப்போது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கல்லூரியில் படிக்கும் நாட்களில் எங்கள் காலனியில் இருந்த ஷட்டில் கோர்ட்டே எங்கள் மாலை நேர சந்தோஷம். யார் அதிக நேரம் ஷட்டிலை கீழே விழாமல் தொடர்ந்து ஆடுகிறோம் யார் வேகமாகவும் துல்லியமாகவும் ஷட்டிலை அடிக்கிறோம் என்று நண்பர்களுடன் போட்டி போடுவோம்.
சில நாட்களில் இரவு நேரம் ஆனால் கூட எங்கள் உற்சாகம் குறையாது. இன்று நினைத்தால் அது எவ்வளவு சிறந்த பயிற்சியாக இருந்திருக்கிறது என்று புரிகிறது. அப்போது எல்லாம் இது ஒரு சிறிய விளையாட்டு.
இந்தியாவை உலக அரங்கில் உயர்த்தும் அளவிற்கு வளரும் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் அந்த அனுபவமே விளையாட்டின் மீது மரியாதையையும் விடா முயற்சியையும் கற்றுத்தந்தது.
ஒரு காலத்தில் கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக மட்டுமே பேசப்பட்ட பேட்மிண்டன் இன்று இந்தியாவின் முக்கிய சர்வதேச விளையாட்டுகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது. ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பி.டபிள்யூ. எப் உலக சுற்றுப் போட்டிகள் என எந்த மேடையிலும் இந்திய வீரர்கள் தன்னம்பிக்கையுடன் களம் காண்கிறார்கள்.
இந்த முன்னேற்றத்தின் பின்னணியில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட உழைப்பு உள்ளது. நவீன பயிற்சி மையங்கள், உடற்தகுதி, மற்றும் விளையாட்டு அறிவியலுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், சர்வதேச தரத்தில் பயிற்சி பெறும் வாய்ப்புகள் ஆகியவை இந்திய பேட்மிண்டனின் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளமாக அமைந்துள்ளன.
சாய்னா நேவால் இந்திய பெண்கள் பேட்மிண்டனுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதை மேலும் உயர்த்தியவர் இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ். பிரணாய், லஷ்யா சென் ஆகியோர் ஆவர். ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்திய பெருமை இவர்களைச் சேரும்.
2026 ஆம் ஆண்டிலும் இந்திய பாட்மிண்டனின் பயணம் உற்சாகமாக தொடர்கிறது. சத்விக் சாய்ராஜ், ரங்கிரெட்டி சிராக்க்ஷெட்டி இணை சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்று இந்திய ஆடவர் இரட்டையர் பிரிவுக்கு வரலாற்று சாதனையைப் பெற்றுத்தந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த இந்த வெற்றி இந்தியாவின் மீளெழுச்சியை உலகம் கவனிக்க செய்தது.
அதோடு ஆயுஷ் ஷெட்டி, உன்னதி ஹூடா உள்ளிட்ட இளம் வீரர்கள் உலக சாம்பியன்ஷிப் போன்ற உயரிய போட்டிகளில் அறிமுகமாகி இந்த பேட்மிண்டனின் அடுத்த தலைமுறை ஏற்கனவே தயாராகி இருப்பதை நீரூபித்துள்ளனர். இது இந்தியாவின் எதிர்காலம் மேலும் வலிமையானதாக இருக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
ஒரு காலத்தில் தனிப்பட்ட வீரர்களின் வெற்றியை மட்டுமே கொண்டாடிய இந்தியா இன்று ஒற்றையர் இரட்டையர் ஆடவர் மகளிர் என அனைத்து பிரிவுகளிலும் உலக நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சாய்னா நேவால் தொடங்கிய வெற்றிப் பயணத்தை கிடாம்பி ஸ்ரீகாந்த், லஷ்யா சென், எச் எஸ்.பிரணாய் ஆகியோர் அந்த பயணத்தை தொடர்ந்தனர்.
இன்று இந்தியாவின் ஒவ்வொரு வெற்றியும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சிறுமிகளின் கைகளில் புதிய ராக்கெட் ஐ எந்த வைக்கிறது. அந்த கனவுகளே நாளைய உலக சாம்பியன்களை உருவாக்கும். இந்தியாவின் ஷட்டில் இன்னும் உயரமாக பறக்கட்டும். உலக அரங்கில் நம் தேசியக்கொடி தொடர்ந்து பெருமையுடன் பறக்கட்டும்.
இந்தத் தொகுப்பின் மூலம், வெறும் பொழுதுபோக்காக இருந்த ஒரு விளையாட்டு இன்று இந்தியாவின் சர்வதேச அடையாளமாக மாறிய வரலாற்றையும், அடுத்த தலைமுறை உலக சாம்பியன்களை உருவாக்குவதில் உள்ள உத்திகளையும் நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.