உலகளாவிய அளவில் விளையாட்டு வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உற்ற துணையாக, உந்து சக்தியாக இருப்பது ஐ.ஓ.சி. IOC என்று அழைக்கப்படும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிதான். இதற்கு கீழ்தான் அனைத்து நாடுகளிலும் உள்ள ஒலிம்பிக் சங்கங்கள் செயல்படுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 1894-ம் ஆண்டு ஜூன் 23-ந்தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் தொடங்கப்பட்டது. இதை தொடங்க மூல காரணமாக இருந்தவர் பிரான்ஸ் நாட்டின் பியர் டி கூபெர்டின் மற்றும் டெமெட்ரியோஸ் விகேலாஸ் ஆகியோர்தான்.
இதன் தலைமையகம், சுவிட்சர்லாந்தின் லொசானில் அமைந்துள்ளது. கோடை, குளிர்காலம் மற்றும் இளைஞர் ஒலிம்பிக்கை ஏற்பாடு செய்வதற்கு பொறுப்பான அதிகாரம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு மட்டுமே உண்டு.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தேர்வை பொறுத்தமட்டில் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரே ஒருமுறை மட்டும் அவருக்கு 4 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்படும்.
அந்த வகையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) தலைவராக 12 ஆண்டுகள் இருந்த தாமஸ் பாச் பதவி விலகுவதையடுத்து சர்வதேச விளையாட்டு அமைப்பில் மிகவும் அதிகாரமிக்க அந்த அரியணையில் அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
இதனையடுத்து இந்த தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டியிட்டனர். அவற்றில் முன்னாள் நீச்சல் வீராங்கனையும், ஜிம்பாப்வே விளையாட்டுத்துறை மந்திரியுமான கிறிஸ்டி கவன்ட்ரி, உலக தடகள சம்மேளன தலைவர் செபாஸ்டியன் கோ, ஐ.ஓ.சி. நிர்வாக குழுவின் துணைத்தலைவர் ஜூவான் ஆன்டோனியா சமராஞ்ச் (ஸ்பெயின்) சர்வதேச சைக்கிளிங் சங்க தலைவர் டேவிட் லாப்பரடின்ட், ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க தலைவர் மோரினாரி வதானாப், சர்வதேச ஸ்கை மற்றும் ஸ்னோபோர்டு தலைவர் ஜோஹன் எலியாஸ், ஜோர்டான் நாட்டு இளவரசர் பைசல் பின் ஹூசைன் ஆகிய 7 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஒட்டெடுப்பு நடைபெற்றது. இதில் ஐ.ஓ.சி.யின் 97 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் 49 வாக்குகள் பெற்ற கிறிஸ்டி கவன்ட்ரி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
41 வயதான கிறிஸ்டி கவன்ட்ரி முன்னாள் நீச்சல் வீராங்கனை ஆவார். 2004, 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று இருக்கிறார். உலக நீச்சல் சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டியிலும் நிறைய பதக்கங்களை குவித்து இருக்கிறார்.
ஒலிம்பிக் தினமான 2025 ஜூன் 23-ந் தேதி அன்று ஐ.ஓ.சி.யின் 10-வது தலைவராக அவர் முறைப்படி பொறுப்பேற்றார். இந்த பதவியில் அவர் 8 ஆண்டுகள் நீடிப்பார்.
இந்த காலக்கட்டத்தில் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக், 2032-ம் ஆண்டு பிரிஸ்பேன் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு காத்திருக்கிறது.
2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்துவதற்கான உரிமத்தை பெற இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்த ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்பதை இவரது தலைமையிலான கமிட்டியே முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 9 ஆண்கள் மட்டுமே தலைவராக இருந்த வரிசையில் முதல் முறையாக ஒரு பெண் தலைவர் என்ற முத்திரையை பதித்துள்ளார். 131 ஆண்டு கால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில் இந்த பதவியை பெறும் முதல் பெண் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார். அத்துடன் ஆப்பிரிக்காவில் இருந்து இந்த பதவியை பெறும் முதல் நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இது குறித்து கிறிஸ்டி கவன்ட்ரிகூறியதாவது:-
"ஒரு இளம் வீராங்கனையாக நீச்சல் பயணத்தை தொடங்கிய போது இது போன்ற ஒரு தருணத்தை அடைவேன், இப்படியொரு இடத்தில் நிற்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஐ.ஓ.சி.யின் முதல் பெண் தலைவராக இருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. நான் பெற்ற ஓட்டுகள் நிறைய பேருக்கு உத்வேகம் அளிக்கும்..." என கூறினர்.