
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு, வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக வலி அதிகமானதால் ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. இதில் முழங்கையில் மயிரிழை அளவுக்கு எலும்புமுறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பதாக சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.
43 வயதான தோனியின் தலைமையில் சென்னை அணி 5 முறை கோப்பையை உச்சிமுகர்ந்து சாதனை படைத்திருக்கிறது. அணிக்கு அடுத்த தலைமையை உருவாக்கும் நோக்குடன் 2022-ம் ஆண்டு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். தோனி ஒரு வீரராக அணியில் நீடித்தார். ஆனால் ஜடேஜாவால் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்க முடியாததால் பாதியிலேயே பின்வாங்கினார்.
இதனால் எஞ்சிய சீசனில் தோனியே மறுபடியும் அணியை வழிநடத்த வேண்டியதானது. தொடர்ந்து 2023-ல் கோப்பையையும் வென்றுத் தந்தார்.
இதன் பின்னர் 2024-ம் ஆண்டில் ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி 7 வெற்றிகளுடன் ரன்ரேட்டில் சற்று பின்தங்கியதால் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை தவற விட்டது.
இப்போது அவரும் காயத்தில் சிக்கி இருப்பதால் மீண்டும் தோனியை கேப்டன் பதவி தேடி வந்துள்ளது. ஆனால் இந்த முறை தோனிக்கு உண்மையிலேயே கடும் சவால் காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 4-ல் தோற்றுள்ள சென்னை அணி எஞ்சிய 9 ஆட்டங்களில் குறைந்தது 7-ல் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவது குறித்து நினைத்து பார்க்க முடியும். அதனால் இனி ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா-சாவா ஆட்டம் போன்றே இருக்கும். சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் சாதுர்யமான கேப்டன்ஷிப்பை பார்க்க ரசிகர்களும் ஆவல் கொண்டுள்ளனர். நடப்பு தொடரில் தோனி 5 ஆட்டங்களில் ஆடி 7 சிக்சர் உள்பட 103 ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 5 பேரை ஆட்டமிழக்க செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ஐ.பி.எல்.-ல் தோனி தலைமையில் சென்னை அணி இதுவரை 212 ஆட்டங்களில் ஆடி 128-ல் வெற்றியும், 82-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. 2 ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.