

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர் , டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் தற்போது முதலிடம் பிடித்துள்ளார். இந்த வரலாற்று சாதனையை செய்துள்ள அவர், தனது சாதனையை முறியடிப்பவர் யார் என்பதையும் கணித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான 'தி ஹண்ட்ரட்' தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜோஸ் பட்லர் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் அவர் வெல்ஷ் ஃபயர் அணிக்கு எதிராக 20 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அதிவேக அரை சதம் அடித்தார். இந்த அரை சதத்தின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 522 போட்டிகளில் விளையாடி 14,833 ரன்களை குவித்து சாதனை செய்துள்ளார்.
மேலும் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கீரன் பொல்லார்டை (746 போட்டிகள் 14,803 ரன்கள்) முந்தி முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் இன்னொரு மிகச்சிறந்த பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்ல் (14,562 ரன்கள்) மூன்றாவது இடத்தில் உள்ளார்.
உள்ளூர் தொடரான 'தி ஹண்ட்ரட்' கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெல்ஷ் ஃபயர் அணி சற்று திணறி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த ஸ்கோரை துரத்திய மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சிறப்பாக தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்தியது. அந்த அணியின் டிம் செய்ஃபெர்ட் (62 ரன்கள்), பால் வால்டர் (37 ரன்கள்) மற்றும் ஜோஸ் பட்லர் (51 ரன்கள்) ஆகியோர் சிறப்பான முறையில் விளையாட தங்கள் அணியை வெற்றி பெறச் செய்தனர். இதனால் மான்செஸ்டர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 கிரிக்கெட்டின் மகத்தான சாதனையை செய்து முடித்தபின் பேசிய ஜோஸ் பட்லர் , தன் சாதனைகளை பெருமையுடன் நெகிழ்ச்சியாக பேசிய அவர் , அப்போதே தனது சாதனைகளை முறியடிக்க கூடிய வீரரைப் பற்றி பேசியது, அவரது பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. தான் சாதனையை நிகழ்த்திய நாளிலேயே அதை முறியடிப்பது பற்றியும் பேசி உள்ளார்.
"டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற மைல்கல் சாதனையை நிகழ்த்துவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இந்த சாதனையை எப்போதாவது ஒரு நாள் வேறு ஏதேனும் ஒரு பேட்ஸ்மேனால் முறியடிக்கப்படும். அவ்வாறு எனது சாதனையை முறியடிக்க போகும் வீரரின் பெயர் அநேகமாக வைபவ் சூர்யவன்ஷியாக இருக்கும்" என்று பெருமையுடன் அவரை ஜோஸ் பட்லர் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தனது பேட்டிங் ஃபார்ம் அவ்வப்போது மாறி வருவதாக ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். "கிரிக்கெட் உலகம் எவ்வளவு வேகமாக மாறி வருகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான் ஃபார்ம் இன்றி திணறிக் கொண்டிருந்தேன். ஆனால் விடாமுயற்சியுடன் நான் தொடர்ந்து போராடி எனது ஃபார்மை மீட்டு இந்த தொடரில் விளையாடி வருகிறேன்" என்றார். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் வைபவ் சூரியவன்ஷியை பற்றி அடிக்கடி பாராட்டி பேசி வருகின்றனர். இது அவருக்கு ஊக்கமாக ஒரு பக்கம் அமைந்தாலும், அதுவே அவருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் மாறிவிடும்.