

10வது உலக கோப்பை டி20 தொடரின் முதல் ஆட்டம் பிப்ரவரி 7 அன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறினாலும் கேப்டன் சூரியகுமார் யாதவின் அதிரடி பேட்டிங்கால் 161 என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது.
இந்தியா வெற்றி பெற சிறந்த பௌலிங் தேவை என்ற நிலையில் 557 நாளுக்கு பின் சர்வதேச டி 20 போட்டியில் பங்கேற்று டி20 அணியில் வாய்ப்பு பெறாத முகமது சிராஜ் அற்புதமாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்குக் கை கொடுத்தார்.
இது பற்றி முகமது சிராஜ் கூறும்போது"ரியல் மேட்ரிட் - ரியல் சோசியடாட் அணிகள் மோதும் கால்பந்து போட்டியை காண ஸ்பெயின் செல்ல தயாராகிக் கொண்டிருந்த நிலையில் கேப்டன் சூரியகுமார் பிப்ரவரி 6ஆம் தேதி அழைத்து உங்கள் லக்கேஜை எல்லாம் பேக் செய்து உலகக் கோப்பை போட்டியில் விளையாட மும்பை வாருங்கள் என்றார்.
அதற்கு நான்,"சும்மா ஜோக் அடிக்காதீங்க!எனக் கூற அவரோ உண்மையாகத்தான் சொல்றேன். ப்ளீஸ் ரெடியாகுங்கள்! என்று கூறிய சிறிது நேரத்தில் இந்திய தேர்வு குழு உறுப்பினர் பிரக்யான் ஓஜா அழைத்து வாய்ப்பை உறுதி செய்தார்.
"நமக்கு என்று ஆண்டவன் எழுதி இருப்பதை யாராலும் மாற்ற முடியாது". என்பதை உணர்ந்து ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு பறந்த போது திடீர் மாற்றத்தை எண்ணி வியப்படைந்தேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
டி20 உலக கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் உலககோப்பை தொடரில் இடம் பெற மாட்டேன் என்பதை அறிந்திருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக கிடைத்த இந்த வாய்ப்பில் அமெரிக்காவுக்கு எதிராக விக்கெட்- டு- விக்கெட் அளவில் துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினேன் என்றார்.
டி20 உலக கோப்பை தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா முழங்கால் காயம் காரணமாக விலகியதால் அந்த வாய்ப்பு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜூக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.