

இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மாவின் ஃபார்ம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ரன் குவிப்பதில் தடுமாறி வரும் ரோஹித், 2027 உலகக்கோப்பையில் விளையாட திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் ஒய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளிவருவது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நடந்து கொண்டிருக்கும் இங்கிலாந்து எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் 11 ரன்களுக்கும், இரண்டாவது போட்டியில் 26 ரன்களுக்கும் அவுட் ஆனார். ரன் குவிக்கத் தடுமாறி வரும் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலை அணியில் கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக வருகின்ற ஜூலை 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் ரோஹித் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதனை உறுதி செய்யும் விதமாக ரோஹித் சர்மாவின் பெற்றோர்கள் இன்று லண்டனுக்கு வந்துள்ளனர். இதுவரை 287 ஒரு நாள் போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா, 11757 ரன்களைக் குவித்துள்ளார்.
159 டி20 போட்டிகளில் விளையாடி 4231 ரன்களையும், 67 டெஸ்ட் போட்டிகளின் விளையாடி 4301 ரன்களைக் குவித்துள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளை காட்டிலும் ஒரு நாள் போட்டிகளிலேயே அதிக ரன்களை குவித்துள்ளார் ரோஹித் சர்மா.
தொடக்கத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் ஸ்பின்னராக அறிமுகமான இவர், தோனி கேப்டன்சியின் போது தான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.
2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி பெற்ற பிறகு, அதிலிருந்து மீண்டு 2024 டி20 உலக கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுத்தார். அதற்கு பிறகு 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி ரோஹித் தலைமையின் கீழ் வென்றது.
தோனிக்குப் பிறகு அதிக ஐசிசி கோப்பைகளை வென்றெடுத்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தான். 2027 ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல ஒரு துணையாக இருக்க வேண்டும் என்பது ரோஹித் சர்மாவின் இலக்காக இருந்தது.
இந்நிலையில் திடீரென அவர் ஓய்வு பெற போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பது வருகின்ற ஜூலை 19ஆம் தேதியே தெரியவரும்.
ஒரு நாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை படைத்த ரோஹித் சர்மா, அதிக சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். பல்வேறு சாதனைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ரோஹித் ஓய்வு பெற்றால், அது இந்திய அணிக்கு பலவுனமாகவே கருதப்படும்.
இருப்பினும் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு, ஜெயிஸ்வாலை அணிக்குள் கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன