

2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் , சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல் அணி, 16-வது சுற்றில் ஸ்பெயினிடம் 0-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் தோல்வியடைந்து வெளியேறியது. இந்த தோல்வி 41 வயது நிரம்பிய கால்பந்து உலகின் ஜாம்பவான் மற்றும் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை மிகவும் கலங்க வைத்துள்ளது.
இதுவே அவரது இறுதி உலகக்கோப்பை தொடர் என்பதால், மைதானத்தில் கண்ணீருடன் அவர் விடைபெற்ற காட்சி உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை உடைய செய்தது. போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர் " ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையை வெல்வது தான் எனது கனவாகவும் வாழ்நாள் லட்சியமாகவும் இருந்துள்ளது. நான் எனது முழுத் திறமையையும் மைதானத்தில் காட்டியிருந்தேன். இந்த தோல்வி எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தாலும் எனது மனசாட்சி உறுத்தாமல் நான் வெளியேறுகிறேன்.
இதுதான் அவரது கடைசி உலகக் கோப்பை தொடர் என்று உறுதிப்படுத்தி இருந்தாலும் , சர்வதேச போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் முடிவை அவர் எடுக்கவில்லை. இது பற்றி கூறிய ரொனால்டோ " நான் எதையும் அவசரப்பட்டு உணர்ச்சி வேகத்தில் முடிவெடுக்கும் நபர் அல்ல , எனது குடும்பத்துடன் நேரத்தை கழித்து விட்டு நிதானமாக பிறகு அதைப் பற்றி சிந்திப்பேன் " என்றும் கூறியுள்ளார்.
இந்த தோல்வி அந்த ஜாம்பவான் வீரருக்கு கடுமையான ஏமாற்றத்தையும் , கனவு கலைந்து போன வருத்தத்தையும் கொடுத்திருந்தாலும் , அவர் தனது தன்னம்பிக்கை இழக்காமல் பேசி இருந்தார். அதுபோல இத்தகைய தோல்விக்கு மத்தியிலும் தன் திறமையை எவரிடமும் விட்டுக் கொடுக்காமல் பேசியிருக்கிறார். தான் போர்ச்சுக்கல் அணிக்கு வருவதற்கு முன்பு , அந்த அணி சர்வதேச அளவில் எந்த ஒரு பெரிய கோப்பையையும் வென்றது இல்லை. ஆனால் , எனது தலைமையின் கீழ் போர்ச்சுக்கல் அணி மூன்று முக்கிய பட்டங்களை வென்று சாதனை செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக கோப்பைக்கு அடுத்ததாக அதிகம் மதிக்கப்படும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பையை 2016 ஆம் ஆண்டு வென்று காட்டியுள்ளேன். 2019, 2025-ஆம் ஆண்டுகளில் யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் பட்டங்களை வென்ற சாதனைகளையும் அவர் மற்றவர்களுக்கு நினைவுபடுத்தினார். 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டம், தனக்கு உலக கோப்பையை வென்றதற்கு இணையான மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்று பெருமையுடன் தெரிவித்தார்.
ரொனால்டோ இந்த சந்தர்ப்பத்தில், போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளரான ராபர்டோ மார்டினெஸின் பங்களிப்பையும் மறக்கவில்லை. இந்த போட்டியின் தோல்விக்கு பிறகு அவர் ராஜினாமா செய்வது பற்றி அறிவித்தது , தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக ரொனால்டோ கூறியுள்ளார். "ராபர்டோ ஒரு மிகச் சிறந்த நிர்வாகி மற்றும் நல்ல மனிதர், அவருடன் நான் பணியாற்றியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம்" என்று அவரைப் புகழ்ந்து பேசினார்.
ரெனால்டோவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்த போதிலும், கால்பந்து உலகில் அவர் செய்த சாதனைகள் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்தவர் என்ற உலக சாதனைக்கு அவர் சொந்தக்காரர். மேலும் கால்பந்து வரலாற்றில் ரொனால்டோவிற்கு என்றும் ஒரு உயரிய இடம் இருப்பதை மறுக்கவும் முடியாது.