சூர்யகுமார் யாதவ் கிரிக்கெட்டை விட்டுட்டு 'பேட்மிண்டன்' ஆட போனாரா? யாரும் அறியாத ரகசியம்..!!

Surya kumar Yadhav
Surya kumar Yadhav
Published on

மைதானத்தின் எந்த மூலைக்கு பந்து வீசினாலும், அதை சிக்ஸருக்கு பறக்கவிடும் வித்தை தெரிந்தவர் நம் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav). "மிஸ்டர் 360" என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், டி20 கிரிக்கெட்டின் இலக்கணத்தையே மாற்றி எழுதியவர். 

ஆனால், இவருடைய இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகளும், போராட்டங்களும் பலருக்கும் தெரிவதில்லை. வெறும் கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், ஒரு சுவாரஸ்யமான மனிதராகவும் ஸ்கை' (SKY - Suryakumar Yadav) ஜொலிக்கிறார். அவரைப் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்படாத சில ஆச்சரியமான தகவல்களை பார்ப்போம்.

கிரிக்கெட்டா? பேட்மிண்டனா?

இன்று சூர்யகுமார் கையில் கிரிக்கெட் பேட் இருப்பதைப் பார்த்து நாம் கைதட்டுகிறோம். ஆனால், சிறுவயதில் அவர் கையில் ராக்கெட் இருந்தது. ஆம், சூர்யகுமாரின் தந்தை ஒரு இன்ஜினியர். சிறுவயதில் சூர்யாவுக்கு கிரிக்கெட் மற்றும் பேட்மிண்டன் என இரண்டு விளையாட்டுகளிலுமே அலாதி பிரியம் இருந்தது. இரண்டிலுமே சிறப்பாக விளையாடினார். 

ஒரு கட்டத்தில், "ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடு" என்று அவருடைய அப்பா கண்டிப்புடன் சொல்ல, சூர்யா நீண்ட யோசனைக்குப் பிறகு கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்தார். அன்று அவர் எடுத்த அந்த ஒரு முடிவுதான், இன்று இந்திய அணிக்கு ஒரு வைரம் கிடைக்கக் காரணமாக அமைந்தது.

'SKY' பெயர் வந்த கதை!

இன்று உலகம் முழுவதும் அவரை 'ஸ்கை' (SKY) என்று தான் அழைக்கிறார்கள். ஆனால் இந்தப் பெயர் அவருக்கு எப்படி வந்தது? வானத்தில் இருந்து குதித்ததால் வந்த பெயர் அல்ல இது! 2014-ம் ஆண்டு அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இணைந்து விளையாடினார். அப்போது அணியின் கேப்டனாக இருந்தவர் கௌதம் கம்பீர். 

"சூர்யகுமார் யாதவ்" என்று ஒவ்வொரு முறையும் முழு பெயரைச் சொல்லி அழைப்பது கடினமாக இருப்பதாக உணர்ந்த கம்பீர், அவருடைய பெயரின் ஆங்கில முதல் எழுத்துக்களை (S-urya K-umar Y-adav) சுருக்கி 'SKY' என்று கூப்பிட ஆரம்பித்தார். கம்பீர் வைத்த அந்தப் செல்லப்பெயர்தான் இன்று உலக கிரிக்கெட் அரங்கில் ஒரு பிராண்டாக மாறியுள்ளது.

இதையும் படியுங்கள்:
பானிபூரி விற்ற சிறுவன் இன்று உலகமே வியக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்!
Surya kumar Yadhav

காதல் கிரிக்கெட்!

மைதானத்தில் பவுலர்களைப் பந்தாடும் சூர்யா, நிஜ வாழ்க்கையில் ஒரு ரொமான்டிக் ஹீரோ. அவருடைய மனைவி தேவிஷா ஷெட்டி ஒரு மிகச்சிறந்த நடனக் கலைஞர். இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போது சந்தித்தவர்கள். தேவிஷாவின் நடனத்தைப் பார்த்து சூர்யாவும், சூர்யாவின் பேட்டிங்கைப் பார்த்து தேவிஷாவும் பரஸ்பரம் ஈர்க்கப்பட்டனர். 2016-ல் இவர்களுக்குத் திருமணம் நடந்தது. சூர்யாவின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் அவருடைய மனைவியின் ஊக்கமும் தியாகமும் இருக்கிறது என்று அவரே பலமுறை நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

துணிச்சலான ஆரம்பம்!

பொதுவாக சர்வதேச போட்டியில் அறிமுகமாகும் எந்த ஒரு வீரருக்கும் லேசான நடுக்கம் இருக்கும். ஆனால், சூர்யகுமார் யாதவ் வேற ரகம். 30 வயதைக் கடந்த பிறகுதான் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பே கிடைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டி20 போட்டியில், ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய அதிவேகப் பந்தை எதிர்கொண்டார். 

தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து உலகையே மிரள வைத்தார். சர்வதேச டி20 போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். "நான் வருவதற்குத் தான் லேட், ஆனால் ஆட்டம் லேட்டஸ்ட்" என்று சொல்லாமல் சொல்லி அடித்த அடி அது!

இதையும் படியுங்கள்:
அடிபட்ட பின் திடீர் கணித திறமை - மூளையின் மறுமலர்ச்சி ரகசியம்!
Surya kumar Yadhav

திறமை இருந்தும் தாமதமாக வாய்ப்பு கிடைத்தாலும், கிடைத்த வாய்ப்பை எப்படி கெட்டியாகப் பிடித்துக் கொள்வது என்பதற்கு சூர்யகுமார் யாதவ் ஒரு சிறந்த உதாரணம். பொறுமை, கடின உழைப்பு, மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதை அவர் நிரூபித்துள்ளார். 

இன்று 360 டிகிரியில் அவர் சுழன்று அடிக்கும் ஒவ்வொரு ஷாட்டும், அவர் கடந்து வந்த கடினமான பாதையின் வெளிப்பாடுதான். இனி நீங்கள் சூர்யாவின் ஆட்டத்தைப் பார்க்கும்போது, இந்த சுவாரஸ்யமான கதைகளையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com