

இந்தியாவில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் மேடையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி, இந்திய அணிக்குத் தேர்வாகி சாதனை படைத்த வீரர்கள் ஏராளம் பேர் உள்ளனர். அவ்வகையில் நடப்பாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், வளர்ந்து வரும் இளம் வீரராக அறியப்பட்டவர் வைபவ் சூரியவன்ஷி.
அறிமுகத் தொடரிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார் சூரியவன்ஷி. இதற்கு முக்கிய காரணமே இவரது அதிரடியான ஆட்டம் தான். வெறும் 14 வயதான சிறுவன், மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களை பறக்க விட்டது இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இந்நிலையில் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்காக ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை டி20 தொடர் நேற்று கத்தாரில் தொடங்கியது.
இந்தத் தொடரில் மொத்தம் எட்டு அணிகள் இரு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றில் மோதுகின்றன. லீக் சுற்றுகளின் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும்.
ரைசிங் ஸ்டார் ஆசிய டி20 தொடரின் முதல் போட்டியில், பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய வைபவ் சூரியவன்ஷி எப்போதும் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்.
வெறும் 32 பந்துகளை மட்டுமே சந்தித்து சூரியவன்ஷி சதம் அடித்தார். மொத்தம் 42 பந்துகளை சந்தித்த சூரியவன்ஷி 15 சிக்ஸர்கள், 11 ஃபோர்கள் உட்பட 144 ரன்களைக் குவித்து அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 298 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நிர்ணயித்தது.
கடின இலக்கை நோக்கி விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. முடிவில் 148 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மெகா வெற்றியைப் பதிவு செய்தது.
சூரியவன்ஷி 32 பந்துகளில் சதம் விளாசியதன் மூலமாக ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில், குறைந்த பந்துகளில் சதமடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டுடன் பகிர்ந்து கொண்டார். மேலும், உலக அளவில் குறைந்த பந்துகளில் சதம் எடுத்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார் சூரியவன்ஷி.
னதொடர்ந்து தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூரியவன்ஷி, வெகுவிரைவில் இந்திய அணியிலும் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 கிரிக்கெட் போட்டிகளைப் போல் டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடி புகுந்து விட்ட இன்றைய காலகட்டத்தில், சூரியவன்ஷி போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு அவசியம் தேவை என முன்னாள் வீரர்கள் இப்போதே கருத்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.