

இந்திய பேட்மிண்டன் ரசிகர்களுக்கு பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சாதனையை ட்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் ஜோடி நிகழ்த்தியுள்ளது. புது டெல்லியில் நடைபெற்று வரும் 2026 BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், வலுவான சீன ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ள இந்த இளம் இந்திய ஜோடி, நாட்டிற்கு குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப்பின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா மீண்டும் பதக்கம் வெல்லும் பெருமையைப் பெற்றுள்ளது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் என்பது ஒலிம்பிக்கிற்கு அடுத்தபடியாக மிக உயர்ந்த மதிப்பைக் கொண்ட போட்டியாகக் கருதப்படுகிறது. உலகின் சிறந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த தொடரில் பதக்கம் வெல்வது எந்த நாட்டிற்கும் பெருமைக்குரிய விஷயமாகும். இந்த நிலையில், காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் ஜோடி, உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் சீனாவின் ஜியா யி ஃபேன் – ஜாங் ஷு சியான் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் ஆட்டத்தை 16-21 என்ற கணக்கில் இழந்த இந்திய ஜோடி, அதன்பின் அபாரமான மனஉறுதியையும் தாக்குதல் ஆட்டத்தையும் வெளிப்படுத்தியது. தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆட்டங்களை 21-15, 21-13 என்ற கணக்கில் கைப்பற்றி, போட்டியை வெற்றிகரமாக முடித்தது. இந்த வெற்றி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சாதனை வெறும் அரையிறுதி தகுதி மட்டுமல்ல. 2011 ஆம் ஆண்டில் ஜுவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா ஜோடி உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றதற்குப் பிறகு, இந்திய மகளிர் இரட்டையர் பிரிவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
15 ஆண்டுகளாக காத்திருந்த சாதனையை இந்த இளம் ஜோடி முறியடித்துள்ளது.
ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் கடந்த சில ஆண்டுகளாக இந்திய பேட்மிண்டனில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்தவர்கள். காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வென்றதுடன், சர்வதேச அரங்கிலும் தங்களுக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளனர்.
பல்வேறு காயங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி மீண்டும் உச்ச நிலைக்கு வந்திருப்பது அவர்களின் விடாமுயற்சியை வெளிப்படுத்துகிறது.
இந்த தொடரில் இந்தியாவின் மற்றொரு பதக்க நம்பிக்கையாக கருதப்பட்ட சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. இதனால் தற்போது இந்தியாவின் கவனம் முழுவதும் ட்ரீசா – காயத்ரி ஜோடியின் மீது திரும்பியுள்ளது.
வெற்றியின் பின்னணி!
இந்த வெற்றியின் சிறப்பு, ஒரு வலுவான ஜோடியை வீழ்த்தியது மட்டும் அல்ல... முதல் ஆட்டத்தில் பின்னடைவைச் சந்தித்த பிறகும் மனம் தளராமல் மீண்டு வந்ததில் தான் இருக்கிறது.. முதல் கேமை 16_21 என்ற கணக்கில் இழந்த ட்ரீசா _ காயத்ரி, அடுத்த இரண்டு கேம்களிலும் தங்களது ஆட்டத்தை முற்றிலும் மாற்றினர்.
துல்லியமான ஷாட்கள், வேகமான நெட் பிளே மற்றும் சரியான நேரத்தில் மேற்கொண்ட தாக்குதல்கள் மூலம் சீன வீராங்கனைகளுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தினர். இறுதியில் 21_15, 21_13 என்ற கணக்கில் அடுத்தடுத்த கேம்களைக் கைப்பற்றி வெற்றியை வசப்படுத்தினர்.
சுமார் 70 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி ரசிகர்களின் உற்சாகமான ஆதரவும் இந்திய வீராங்கனைகளுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்தது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிஇருக்கும் ட்ரீசா_ காயத்ரி, பதக்கம் உறுதி செய்யப்பட்ட பின்னரும் தங்களது பயணம் இத்துடன் முடிந்து விடக்கூடாது என்ற எண்ணத்துடன் உள்ளனர்.
அடுத்ததாக உலகின் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சீனாவின் லியூ ஷெங் ஷு_ டான் நிங் ஜோடியை எதிர்கொள்கிறார்கள். இதனால் அரையிறுதி ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றி இந்திய மகளிர் பேட்மிண்டனுக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
ஜுவாலா கட்டா _ அஸ்வினி பொன்னப்பா ஜோடி 2011 ல் வெண்கலம் வென்ற பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் கிடைக்காமல் இருந்த நிலையில் அந்த நீண்ட காத்திருப்புக்கு ட்ரீசா _ காயத்ரி முற்றுப் புள்ளி வைத்துள்ளனர்.
ட்ரீசாவின் பயணம் இன்று பல இளம் பெண்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அழகும் திறமையும் மட்டும் அல்லாமல் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக் கையுடன் செயல்பட்டால் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை அவரது வாழ்க்கைப்பாதை உணர்த்துகிறது. தடைகள் வந்தாலும் அவற்றைத்தாண்டி தொடர்ந்து முன்னேறவேண்டும் என்பதே அவரது பயணம் சொல்லும் முக்கியமான செய்தியாகும்.
விளையாட்டில் திறமை மட்டுமல்ல, பொறுமை, மனஉறுதி மற்றும் தொடர்ச்சியான உழைப்பும் வெற்றியை தீர்மானிக்கின்றன என்பதை ட்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் ஜோடி மீண்டும் நிரூபித்துள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் இரட்டையர் பிரிவுக்கு உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை உறுதி செய்துள்ள இந்த சாதனை, இந்திய பேட்மிண்டனின் புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது. அரையிறுதியிலும் வெற்றி பெற்று தங்கப்பதக்க கனவை நனவாக்குவார்களா என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.