

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கு பெற்ற டி 20 தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்தத் தொடரின் 3 போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்று, தற்காலிகமாக மீட்சி அடைந்து வந்துள்ளது. அயர்லாந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில், ஓரம் கட்டப்பட்டு இருந்த வைபவ் சூர்யவன்ஷி தான் யார்? என்பதை இந்த தொடரில் நிரூபித்து , சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தினை பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் 15 வயதில் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதும் , தொடர் நாயகன் விருதும் பெற்று மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார்.
நேற்று மாலை ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் 3வது டி20 போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்திய அணியின் சார்பில் முதலில் களம் இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி இம்முறை சற்று நிதானத்துடன் கூடிய அதிரடியை மேற்கொண்டார். மறுபுறம் அவருக்கு யாரும் நிலையான ஒத்துழைப்பை தரவில்லை.
ஒட்டுமொத்த பேட்டிங்கையும் தன் தலையில் சுமந்த வைபவ் அணியின் வெற்றிக்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்தார். தேவையற்ற பந்தில் ஷாட் அடிக்க ஆசைப்பட்டு அபிஷேக் ஷர்மா 2 ரன்களில் வெளியேறினார். சிறந்த தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் , வைபவுக்கு இணையாக தன்னை அதிரடி ஆட்டக்காரராக நிரூபிக்க நினைத்து, அவசரப்பட்டு அவுட் ஆகி வெளியேறுகிறார். இதன் காரணமாக சமீப காலமாக அவரது தடுமாற்றம் விளையாட்டில் காணப்படுகிறது.
அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 29 ரன்கள் வரை எடுத்து சிறிது நேரம் வைபவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அந்த இடைப்பட்ட நேரத்தில் வைபவ் அரை சதத்தை கடந்து சாதனை படைத்தார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளார். அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்கள் . மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் வைபவ் 4 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகளை பறக்க விட்டுக் கொண்டிருந்தார்.
இந்த போட்டியில் வைபவின் ஆட்டத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது , 25 ரன்களுக்கும் மேலாக அவர் ஓடி ரன்கள் சேர்த்து இருந்தார். வழக்கமாக வைபவ் ஓட்டம் அதிகம் எடுக்காமல், சிக்சர் மற்றும் பவுண்டரிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார். 81ரன்கள் குவித்த அவர் 14 வது ஓவர் இறுதியில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது.
193 என்ற ஸ்கோரை நோக்கி ஓடிய ஜிம்பாப்வே அணிக்கு, முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி பிரையன் பென்னட் அதிர்ச்சி அளித்தார். பென் குர்ரன் ,டியான் மியர்ஸ் ஆகியோர் 20 மற்றும் 19 ரன்களை மட்டுமே குவித்தனர். அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா டக் அவுட் ஆகி வெளியேறினார். ரியான் பெர்ல் அணியின் வெற்றிக்காக தனி ஒருவனாக போராடிக் கொண்டிருந்தார். 43 பந்துகளில் அவர் 54 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமழக்காமல் இருந்தார். ஆனாலும் அவருக்கு போதிய ஒத்துழைப்பு இல்லாததால் 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே குவித்து ஜிம்பாப்வே அணி தோல்வியை தழுவியது.
இரு தொடர்களில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தற்போது ஒரு தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
அதே நேரம் இந்திய வெற்றிக் கொண்ட அணியின் வலிமையை கணக்கில் கொண்டு , எதிர்காலத்தில் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.