

ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் அணியாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வலிமையான அணிகளை போட்டு புரட்டி எடுத்து ஓரமாக உக்கார வைத்த அணி அது. கிரிக்கெட் உலகின் பல லெஜன்ட்கள் விளையாடிய அணி என்றால் மிகையல்ல. ஆனால் , தற்போது அந்த அணி உலகக்கோப்பை தொடரில் பங்குபெற நேரடியாக செல்லும் தகுதியை இழந்து விட்டது. அதனால் , ஒரு தகுதிப் போட்டியில் விளையாடி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
1970 - களில் கிரிக்கெட்டில் ஒரு வல்லரசாக மேற்கிந்திய தீவுகள் அணி கோலோச்சிக் கொண்டு இருந்தது. முதன்முதலாக ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 1975 - இல் நடைபெற்ற பொழுது , அந்தத் தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தி, உலக கோப்பையை முதன் முதலாக கைப்பற்றி சாதனை படைத்தது மேற்கிந்திய தீவுகள் அணிதான். அதைத் தொடர்ந்து இரண்டாவது உலகக் கோப்பை தொடர், 1979 -ஆம் ஆண்டு நடைபெற்ற போதும் அதையும் வென்று சாதனை படைத்தது மேற்கிந்திய தீவுகள் அணி.
அது மட்டுமல்லாமல், 1983 - ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்திலும் அந்த அணி பங்கேற்றது. இந்தியா தனது விடாமுயற்சி மற்றும் போராட்டத்தின் மூலம் அந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்று, முதன்முதலாக உலக கோப்பையை கைப்பற்றியது. தொடர்ச்சியாக 3 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்ற அணி என்ற சாதனையையும் மேற்கிந்திய தீவுகள் அணி தன் வசம் வைத்துள்ளது.
டி 20 தொடர் அறிமுகமானதிலிருந்து அதிலும் மேற்கிந்திய தீவுகள், தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டது. 2012, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்களில் வெற்றி பெற்று சாம்பியன் அணியாக விளங்கியது. 1980 முதல் 1995 மார்ச் வரை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வீழ்த்த முடியாத அணியாக விளங்கியது. ஒரு தலைசிறந்த அணியாக ஏராளமான ஜாம்பவான் வீரர்களும் அந்த அணியில் பங்கு பெற்று இருந்தனர்.
விவியன் ரிச்சர்ட்ஸ் , சோபர்ஸ் , பிரையன் லாரா , அம்புரோஸ் , கோர்ட்னி வால்ஷ் , கிறிஸ் கெயில் போன்ற உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்குபெற்ற அணி, என்ற பெருமை மேற்கிந்திய தீவுகளுக்கு எப்போதும் உண்டு. எப்போதும் கிரிக்கெட் உலகின் பாரம்பரிய அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணியை மற்ற அணிகள் பார்ப்பது உண்டு. இவ்வளவு ஏராளமான சிறப்புகளை பெற்றிருந்த அந்த அணி, கடைசி 3 உலக கோப்பை தொடர்களில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தது, அந்த நாட்டு ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
ஐசிசியின் விதிமுறைப்படி உலகக் கோப்பையை நடத்தும் நாடுகள் நேரடியாகவே தகுதி பெறுகின்றன. இதனடிப்படையில் 2027- உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தகுதி பெற்று விட்டன. ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள், அனைத்தும் நேரடியாகவே உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுவிட்டன .
மேற்கிந்திய தீவுகள் அணி 10 ஆவது இடத்தில் இருப்பதால் அது நேரடியான தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது. கடந்த 2023 உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம், தோல்வி அடைந்ததால், அந்த தொடரில் பங்கேற்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி வெளியேறியது. தற்போது ஐசிசி நடத்தும் தகுதிப் போட்டியில் கலந்து கொண்டு வென்றால் தான் முன்னாள் சாம்பியன் அணி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இயலும்.