உண்ணும் உணவே நாம் எவ்வாறு செயல்படுகிறோம், எவ்வாறு உணர்கிறோம் என்பதைத் தீர்மானிக்க வல்லவை. வேலை பளுவுக்கிடையில் அல்லது விருப்பத்தின் நிமித்தம் முறையான உணவைத் தவிர்த்து, கிடைத்ததை அல்லது விரும்பியதை உண்பதென்பது பலருக்கும் சகஜம். சரிவிகித உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வதே உடலை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்ள உதவும். அதைத் தவறவிடும்போது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதை வெளிப்படுத்தக்கூடிய 10 அறிகுறிகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. உடல் எடை குறைதல்: ஊட்டச்சத்து குறையும்போது உடல் எடை குறைய வாய்ப்புண்டாகும். சராசரியாக 19லிருந்து 39 வயதிற்குள் இருக்கும் ஆணின் உயரம் 177 cm, எடை 65 கிலோவும், பெண்ணின் உயரம் 162 cm, எடை 55 கிலோவும் இருப்பது அவசியம். இதில் குறைவு ஏற்பட்டால் ஊட்டச்சத்தில் குறைபாடு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
2. எப்பொழுதும் சக்தியின்றி சோர்வாகவே இருத்தல்: பெண்ணாகப் பிறந்த (assigned female at birth) ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 2000 கலோரி தரக்கூடிய உணவு தேவை. எடைக் குறைப்பில் உள்ளோர்க்கு சுமார் 1500 கலோரி போதுமானது. இதுவே ஆண்களுக்கு (assigned male at birth) 2500 மற்றும் 2000 கலோரியாக உள்ளது. தொடர்ந்து இதற்கும் குறைவான கலோரியுள்ள உணவுகளை உண்ணும்போது அவர்கள் சக்தியின்றி எப்பொழுதும் சோர்வாகவே காணப்படுவர்.
3. அதிகளவு முடி உதிர்தல்: உடலில் ஊட்டச்சத்து குறைவானால், தலை வாரும்போது கொத்துக் கொத்தாக முடி உதிர்வதைக் காணலாம். இரும்புச் சத்து, சிங்க், வைட்டமின் D மற்றும் ஒமேகா 3 போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் சரிவர கிடைக்காமல் போவதே இதற்குக் காரணமாகும். எனவே, தினசரி உட்கொள்ளும் உணவு சரிவிகித அளவில் கலோரி அளவு குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம்.
4. சோர்வு மற்றும் பலவீனமாக உணர்தல்: உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து, வைட்டமின் D மற்றும் வைட்டமின் B12 ஆகியவை குறைவின்றி கிடைக்காவிடில், போதுமான தூக்கம் மற்றும் ஓய்வு எடுத்துக்கொண்ட பின்னும் உடல் சக்தியின்றி சோர்வாகவே இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் உட்கொள்ள வேண்டிய உணவுகளின் விவரத்தை பெற மருத்துவரை அணுகுவது நன்மை தரும்.
5. பசி உண்டாகும் நேரம் மற்றும் உணவின் சுவையில் மாற்றத்தை உணர்தல்: வழக்கமாக உணவு உட்கொள்ளும் நேரம் மற்றும் உண்ணும் உணவின் சுவைகளில் நீங்கள் மாற்றத்தை உணர்வீர்களானல், ஊட்டச் சத்து குறைபாடு இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். மேலும் பிகா (Pica) எனப்படும் ஆரோக்கியமற்ற உணவுகளின் மீது ஆர்வம் உண்டாவதும் இதற்கான மற்றொரு அறிகுறி எனலாம். உண்ணும் உணவில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு பிரச்னையை சீராக்க மருத்துவரை கலந்தாலோசிப்பது நலம் தரும்.
6. மன நிலையில் மாற்றம் காணுதல்: உடலில் ஊட்டச்சத்துக்களின் அளவு குறையும்போது நம் மனநிலையில் ஏற்றத் தாழ்வு உண்டாகி மூளையின் ஆரோக்கியதில் கோளாறுகளை உண்டுபண்ணவும் அதன் செயல்பாடுகளை எதிர் திசையில் திருப்பி விடவும் வாய்ப்புகளை உண்டுபண்ணும். நாம் உண்ணும் உணவிற்கும் நம் உணர்ச்சிகளுக்கும் இடையிலான தொடர்பு இங்கு குறிப்பிடத் தக்கது. எனவே ஆரோக்கியமான மனநிலை மற்றும் நிலையான மூட் ஆகியவற்றை தொடர்ந்து பராமரிக்க, அனைத்து வகையான சத்துக்களையும் அளிக்கக்கூடிய சரிவிகித உணவு மிக மிக அவசியம்.
7. காயங்கள் ஆறுவதில் தாமதம்: காயங்கள் ஆறுவதில் வழக்கத்திற்கு மாறாக தாமதம் ஏற்படுவதும், தொற்று நோய்க் கிருமிகள் சுலபமாக உடலுக்குள் புகுந்து நோய் உண்டாகச் செய்வதும் கூட ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டை சுட்டிக்காட்டும் அறிகுறி என எடுத்துக் கொள்ளலாம். கனிமச் சத்தான சிங்க் மற்றும் வைட்டமின்கள் A, C, D ஆகியவை குறையும்போது காயங்கள் ஆறுவதிலும் நோய் குணமாவதிலும் தாமதம் ஏற்படும்.
8. மலச்சிக்கல்: போதுமான அளவு குடல் இயக்கங்கள் நடைபெற்று செரிமானம் சீராகாமல் போவதற்கும் மலச்சிக்கல் உண்டாவதற்கும் தேவையான கலோரிகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளத் தவறுவதே காரணம். ஊட்டச்சத்து இல்லாத குறைந்த அளவு கலோரிகள் கொண்ட உணவை உட்கொண்டு மலச்சிக்கலால் அதிகம் அவதியுறுவது பெண்களே என ஆராய்ச்சி கூறுகிறது. பெண்களே உணவில் அதிக கவனம் செலுத்துங்கள்.
9. அடிக்கடி சுகவீனமடைதல்: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஊட்டச் சத்துக்களான வைட்டமின்கள் A, C, சிங்க், செலீனியம் ஆகியவற்றில் குறைவேற்படும்போது தொற்று நோய் கிருமிகளால் தாக்கப்பட்டு சுகவீனமடைதல் அடிக்கடி நடக்கக் கூடியதொன்றாகிவிடும்.
10. சருமத்தில் கோளாறு உண்டாதல்: ஊட்டச்சத்து குறைபாடு சருமம் உலர்தல் மற்றும் உரிதலுக்குக் காரணியாகும். கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் குறையும்போது சருமம் மெலிதாகவும், விரைவில் காயமடையவும் வாய்ப்புண்டாகும்.
ஆரோக்கியமான உடலே நீண்ட ஆயுளுக்கு அஸ்திவாரம் என்பதை உணர்ந்து சரிவிகித உணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்!