

என்னது AI கழிபறையா? AI நுழையாத இடமே இல்லையா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. ஆனால், இந்த AI பயன்பாடு மிக முக்கியம். நம் எல்லோருக்கும் தெரியும் நம் உடல் நலத்தின் அடிப்படை குடல் நலம் என்பதே. இன்று மருத்துவ உலகின் எல்லோருடைய ஒருமித்த கருத்தும் அதுவே.
உணவுப் பழக்கம், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை அனைத்திலும் குடல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குடலின் நலனை தினமும் கண்காணிக்க முடியுமா?
முடியும் அதற்கான பதிலாக உருவாகியிருக்கிறது – AI Toilet அல்லது Smart Toilet.
இது சாதாரண கழிப்பறை அல்ல. சிறப்பு சென்சார், கேமரா, வாயு பகுப்பாய்வு ஆகியவை பொருத்தப்பட்ட நவீன மாடல். பயனாளியின் மலம் மற்றும் சிறுநீரை துல்லியமாக ஆய்வு செய்து, அவற்றின் நிறம், வடிவம், அடர்த்தி, வாயுக்கள், தாதுக்கள் போன்ற விவரங்களை பதிவு செய்கிறது. அந்த தரவுகளை கணினி நுண்ணறிவு (AI) செயலி ஆய்வு செய்து, உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களையே முன்கூட்டியே கண்டறிகிறது.
உதாரணமாக, மலத்தில் ரத்தம் காணப்பட்டால் அல்லது சிறுநீரில் சர்க்கரை அளவு அதிகமானால், மொபைல் ஆப்பில் உடனடி எச்சரிக்கை வருகிறது. இதனால் குடல் அழற்சி, நீரகக் கோளாறு, சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்படுகின்றன.
இது எப்படி நிறுவப்படும்?
AI கழிப்பறைகள் இரண்டு வகையில் கிடைக்கின்றன.
முதல் வகை:
முழுமையாக ஒருங்கிணைந்த மாடல் (Integrated Model): இதில் கழிப்பறையின் உட்புறமே சென்சார், கேமரா, Wi-Fi வசதிகளுடன் தயாராக வரும். ஒரு பயிற்சியாளர் நிறுவி, மொபைல் ஆப்புடன் இணைப்பார். பயனாளர் 'profile' உருவாக்கியவுடன், தினசரி தரவுகள் தானாகப் பதிவாகும்.
இரண்டாம் வகை:
Attachable Sensor Kit: இது பழைய கழிப்பறையில் பொருத்தக்கூடிய சிறிய சாதனம். ஒளிச்சார்ந்த சென்சார் மற்றும் வாயு அளவீட்டு கருவிகள் மூலம் தகவல் சேகரிக்கிறது. Wi-Fi அல்லது Bluetooth மூலம் App-க்கு அனுப்பி, அங்கே AI பகுப்பாய்வு செய்கிறது. இந்தியாவில் இத்தகைய மாடல்கள் தற்போது சோதனை நிலையில் உள்ளன.
ஹைதராபாத்தில் உள்ள AIG Hospitals இதை மருத்துவ ஆய்வுக்காக பயன்படுத்தி வருகிறது. வணிகப் பயன்பாட்டுக்கான மாடல்கள் ₹40,000 முதல் ₹1.5 லட்சம் வரையிலான விலையில் 2026-இல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதில் சவால்கள் உள்ளன. இந்த சாதனங்கள் மிக நுண்ணிய மருத்துவத் தரவுகளைப் பதிவு செய்வதால் தனியுரிமை (Privacy) பாதுகாப்பு மிக அவசியம். யார் அந்த தரவுகளை சேமிக்கிறார்கள், எங்கு பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்விகளுக்கு சட்டப்பூர்வ ஒழுங்குகள் தேவை. அதிக செலவு தொழில்நுட்பமாக இருந்தாலும், நீண்ட கால ஆரோக்கியத்தின் கண்ணோட்டத்தில் இது ஒரு நுண்ணறிவு முதலீடு.
நாளை வீட்டுக் கழிப்பறைதான் நம் உடல் நலத்தை தினசரி கண்காணிக்கும் மின்மருத்துவர் ஆக மாறபோகிறது. உடல் நலம், குடல் நலம், மனநலம் மூன்றையும் இணைக்கும் புதிய தொழில்நுட்பப் பாலம் இதுவே.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)