ஆஹா... வெள்ளைப் பூண்டில் இத்தனை ஆரோக்கியமா?

Amazing medicinal properties of garlic
Amazing medicinal properties of garlichttps://tamil.oneindia.com

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து வெளி வந்தது அமிர்தம். அதை இறைவன் தேவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தபோது அசுரன் ஒருவன் தேவர்கள் போன்று தன்னை உருமாற்றிக் கொண்டு கடவுளையே ஏமாற்றி, அமிர்தத்தை வாங்கி வாய்க்குள் எடுத்துச் சென்று விட்டான். அவன் அதை விழுங்குவதற்குள் அவனது தலை சீவப்பட்டது. அசுரனின் தலை சீவப்பட்டபோது அவனது வாயிலிருந்து ஒரு துளி அமிர்தமும், எச்சிலும் பூமியில் சிந்தியதில் பல மூலிகைகள் முளைத்தனவாம் அதில் ஒன்றுதான் வெள்ளைப் பூண்டு என்று சொல்லப்படுகிறது.

பூண்டில் கார்போஹைட்ரேட், கொழுப்புகள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, பி9, வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. அதோடு மாங்கனீசு, பாஸ்பரஸ் சத்துக்களும் உள்ளன. பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவையும் இதில் உள்ளது. பூண்டில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ள நிலையில், இதன் கார தன்மைக்கும், வாசனைக்கும் இதில் இருக்கும் அலிசின் என்ற கந்தகக் கலவையே காரணம். பூண்டில் துத்தநாகம் மற்றும் இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் அவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றன. மேலும், டைப் 2 நீரிழிவு நோயைத் தடுப்பதிலும் பூண்டு பங்கு வகிக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெள்ளைப் பூண்டு தின்றவர்களின் வாயிலிருந்து வரும் நாற்றத்தை உண்டாக்குவது பூண்டு அல்ல! பூண்டு தின்பதால் உடலின் வளர்சிதை மாற்றம் காரணமாக இரத்தத்தில் சில வேதிப் பொருட்கள் சுரக்கின்றன. இதனால்தான் நாற்றம் உண்டாகிறது என்கிறது ஆஸ்திரியப் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள். சில சல்ஃபைடுகள், டைஃசல்பைடுகளால் தோன்றும் நாற்றம், பூண்டு தின்ற சில மணி நேரத்திலேயே மறைந்து விடுகிறது. ஆனால், அலைல் மெத்தில் சர்ஃபைடு, டி சல்ஃபைடு, ஆஸ்டின் ஆகிய மூன்று பொருட்களால் உருவாகும் நாற்றம் 30 மணி நேரம் வரை கூட நீடிக்கும். உடலின் உள்ளே இருக்கும் கொலஸ்ட்ராலோடு போரிட்டு அதை வெல்கிறது. இந்த செயல்முறைதான் நாற்றமாக வெளிப்படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வெள்ளை பூண்டை உரித்ததும் அதை தனியாக 15 நிமிடங்கள் வைத்து விடுங்கள். பிறகு அதை எவ்வளவு சூடுபடுத்தி சமைத்தாலும் அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி போகாது என்கிறார்கள் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள். வெள்ளைப் பூண்டில் ‘அலிஸின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது எந்தவிதமான நோய் கிருமிகளையும் உடலில் போய் சேர்ந்து விடாதபடி தடுத்து பாதுகாக்கிறது. பெனிசிலின், டெட்ராசிலிஸ்யை காட்டிலும் சக்தி வாய்ந்தது. வெள்ளைப் பூண்டின் மருத்துவ குணங்கள் உலகிற்கு தெரிய வந்தது கி.பி.1500ம் ஆண்டிலிருந்துதான். அப்போதுதான் எகிப்தியர்கள் பூண்டை வைத்து 22 வகையான நோய்களை குணப்படுத்த முடியும் என்று ஆராய்ந்து அறிவித்தனர்.

வெள்ளைப் பூண்டில் 400 விதமான இரசாயன பொருட்கள் உள்ளது. இவற்றில் பெரும்பாலானவை உடல் திசுக்களை கெட்டு போகாமல் பாதுகாப்பாக வைத்து உடலை இளமை துடிப்புடன் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் என்கிறார் டாக்டர் ஜீன் கார்பெட். வெள்ளைப் பூண்டில் புற்றுநோய் எதிர்ப்புத் தன்மையைப் பற்றி 600க்கும் மேற்பட்ட ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. பூண்டு மாரடைப்பை 40 சதவீதம் குறைக்கிறது. வயிற்றுப் புற்றுநோய் வருவதை 47 சதவீதம் குறைக்கிறது. தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வர கொலோன் புற்றுநோய் 41 சதவீதம் குறைக்கிறது. நுரையீரல் புற்றுநோய் வருவதை பூண்டு 22 சதவீதம் குறைக்கிறது. மூளையில் வரக்கூடிய புற்றுநோயை பூண்டு 34 சதவீதம் குறைக்கிறது.

கல்லீரலில் சுரக்கும் என்சைம்கள் நன்றாக சுரக்கச் செய்ய பூண்டு உதவும். காரணம் அதிலிலுள்ள அலிசின் மற்றும் செலினியம் சத்துக்கள். தினமும் அல்லது வாரத்தில் இரண்டு நாளில் காலையில் வெறும் வயிற்றில் பூண்டை நீரில் அல்லது பாலில் வேகவைத்து சாப்பிட கல்லீரல் பலப்படும். இளமையை நீடிக்க உதவும் ஒரு புரதம் கெரட்டின் இது வெள்ளைப் பூண்டில் அதிகமுள்ளது.

ஒவ்வொரு சீசன் மாறும்போதும் நகரவாசிகள், புளூ காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் என அவதிப்படுவது அதிகம். இதற்குக் காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான். இதனை தவிர்க்க எளிய வழி ஒன்று உள்ளது. தினமும் காலையில் உணவுக்கு பின் உரித்த ஒரு துண்டு வெள்ளைப் பூண்டை அப்படியே சாப்பிட வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சீசன் காலங்களில் வரும் காய்ச்சலை தவிர்க்கும்.

பச்சையாக ஒருசில வெள்ளைப் பூண்டு பற்களை அடிக்கடி சாப்பிட, வாதநோய் குணமாகும், கொலஸ்ட்ரால் குறையும். பூண்டு சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து ‘கக்குஸ் படை’ மீது பூசி வர அது மறையும். வெற்றிலையுடன் பூண்டை அரைத்து பூச தேமல் மறையும். பசுவின் பாலில் பூண்டை வேகவைத்து சாப்பிட ஈசினோபிலியா குறையும். திடீரென்று காய்ச்சல் 102 டிகிரியை எட்டினால் வெள்ளைப் பூண்டை அரைத்து அதன் சாற்றை உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் நன்றாக தேய்த்தால் ஜுரம் குறைந்து வரும்.

பல்வலி மற்றும் சொத்தை பிரச்னைகளில் இருந்து விடுபட பூண்டு உங்களுக்கு மருந்தாக செயல்படும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது பற்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். இது பற்களுக்கு வலி நிவாரணியாக செயல்படுகிறது. இது பல் வலியை குறுகிய நேரத்தில் குறைக்கும். இதற்கு பூண்டு டீயை உட்கொள்ளலாம் அல்லது பூண்டு பேஸ்ட் செய்து வலியால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். இதனால் வலியில் இருந்து பெரிய அளவில் நிவாரணம் கிடைக்கும்.

வெள்ளைப் பூண்டை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிடுவதால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். ஊளைச் சதையைக் கரைக்கும். பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க ஆண்டிபயாடிக்காக பூண்டு பயன் படுத்தப்படுகிறது. பூண்டு தண்டுவட உறையழற்சிக்கு சிறந்த மருந்தாகிறது. பூண்டு நச்சுகளை வெளியேற்றவும் உதவும். செரிமான அமைப்பை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. பூண்டு, இரத்தத்தை சுத்திகரிப்பதன் மூலம்ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
அதிகாலையில் செய்யக்கூடாத 8 விஷயங்கள் என்ன தெரியுமா?
Amazing medicinal properties of garlic

உடலின் எடையை குறைக்க விரும்பினால் தினமும் காலையில் 2 பல் பூண்டு சாப்பிடுங்கள். பிடிவாதமான சளி மற்றும் காய்ச்சலிலிருந்து வெள்ளைப்பூண்டு நிவாரணம் அளிக்கும். பூண்டை உணவில் சேர்த்து அடிக்கடி சாப்பிடுவதால் அஜீரணக் கோளாறு, தலைசுற்றல், மயக்கம் ஆகியவையும் குறைகிறது.

பூண்டை தினமும் உட்கொள்ள தேவையில்லாத கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும். மூட்டு பிரச்னைகளின் சிறந்த வலி நிவாரணியாக பூண்டு விளங்குகிறது. குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக பூண்டு உள்ளது. நீர்த்த பூண்டு சாறு நாடாப்புழு தொற்று உள்ள குழந்தைகளுக்கு உதவுகிறது. பூண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் நச்சுகள் நீங்கி, ஜீரணத் தன்மை மேம்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com