

சுவாசப் பாதைகளில் ஏற்படும் நாள்பட்ட பிரச்சனை அழற்சி. இதன் மூலம் வீக்கம் ஏற்பட்டு, சுவாசப் பாதை குறுகி விடுவதால் மூச்சு விடுவது சிரமமாக உள்ளது. இதுதான் ஆஸ்துமா (Asthma) இந்த பிரச்சனை எல்லா வயதினருக்கும் வரும்.
அதிகரித்து வரும் காற்று மாசு, வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக ஆஸ்துமா வரலாம். வீட்டில் உள்ள கண்ணுக்கு தெரியாத பூச்சிகள், புகை, சிகரெட் பிடிப்பது, அடர்த்தியான வாசனை திரவியங்கள், இரசாயன புகைகள், பருவநிலை மாற்றம், விலங்குகளின் முடி, குளிர்ந்த வானிலை, எதிர்பாராத தட்பவெட்பநிலைகள், வைரஸ் நோய் தொற்றுகள் இதற்கு காரணமாகும்.
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தம், பதற்றம், வேலை செய்யும் இடத்தில் தூசி, சிலருக்கு ஆஸ்பிரின், உயர் ரத்த அழுத்தம், சீரற்ற இதயத்துடிப்பு போன்ற இதயக் கோளாறுகளுக்கு பயன்படும் பீட்டா பிளாக்கர்கள் போன்ற சில மருந்துகளால் ஆஸ்துமா ஏற்படலாம்.
இதன் அறிகுறிகள் என்று எடுத்துக் கொண்டால், தொடர் இருமல், மூச்சு விடும் போது சத்தம், மூச்சு திணறல், நெஞ்சு இறுக்கம், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இருமல் போன்றவை ஆகும்.
சிலருக்கு உடற்பயிற்சி மூலம் வரலாம். சிலருக்கு தொடர் இருமல் மூலமும் வரலாம்.
ஆஸ்துமாவை உறுதி செய்யும் பரிசோதனைகளில் ஸ்பைரோ மெட்ரி மூலம் அறியலாம். இது வாய் வழியாக வேகமாக ஊத செய்யும் பரிசோதனை ஆகும். சுவாச பாதை எவ்வளவு குறுகலாக உள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம்.
மூச்சுக்குழாயை விரிவு படுத்தும் மருந்தை இன்ஹேலர் மூலம் கொடுத்து, நுரையீரல் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றத்தை உறுதி செய்யலாம்.
சுவாசப் பாதையை நிரந்தர பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் ஆஸ்துமாவை அலட்சியம் செய்யக்கூடாது.
ஆஸ்துமா சிகிச்சையில் முக்கியமானது இன்ஹேலர். மருத்துவர் பரிந்துரைத்த இன்ஹேலரை பயன்படுத்த வேண்டும்.
இன்ஹேலர் மருந்து மாத்திரைகளை விட பாதுகாப்பானது. பாதிப்பின் போது அறிகுறிகளை குறைத்து நுரையீரல் செயல்பாட்டை பாதுகாத்து வருகிறது.
ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை செய்தால் ஆஸ்துமாவை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)