

பிறவியிலேயே செவித்திறன் அற்ற குழந்தைகளுக்கு மூளைத் தண்டில் பொருத்தப்படும் ஆடிட்டரி பிரைன் ஸ்டெம் இம்பிளான்ட் (Auditory Brainstem Implant - ABI) எனப்படும் ஏபிஐ சிகிச்சையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த சிகிச்சை மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலன் பெற்று உள்ளனர். இது ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை என்பதால், இதற்கென்று பிரத்தியேகமாக மருத்துவ தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே இந்த சிகிச்சையை அளிக்க முடியும்.
பிறவியிலேயே உள்காது நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் காது கேளாமை இருந்தால் காக்ளியர் இம்பிளான்ட் (Cochlear Implant) எனப்படும் மின் கருவியை உள் காதில் பொருத்தலாம். இது உள் காதில் உள்ள நுண்ணிய நரம்புகளை தூண்டி சத்தத்தை உணரச் செய்யும்; இதன் மூலம் காதுகள் கேட்கும்.
ஏபிஐ சிகிச்சை முறை
சுவாசிப்பது, இதயத்துடிப்பு, உணவை விழுங்குவது, செரிமானம் போன்ற முக்கியமான செயல்பாடுகளை மூளைத் தண்டு தான் செய்கிறது. செவித்திறனையும் இப்பகுதியில் உள்ள நரம்புகள் தான் கொடுக்கின்றன. சிலருக்கு பிறவியிலேயே உள்காது நரம்புகள் வளர்ச்சி இல்லாமல் இருக்கலாம். இதனால் உள் காதுக்கும் மூளை தண்டுக்கும் தொடர்பு இருக்காது. இதனால் மூளை தண்டுக்கு ஒலி எட்டாது.
இவை தவிர உள் காதின் பின்புறத்தில் உள்ள நரம்புகள் துண்டிக்கப்படலாம். மூளை தண்டில் கட்டி அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதனால் நரம்புகள் சிதைந்து போய் இருக்கலாம்.
உள் காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பு இல்லாவிட்டால் காக்ளியர் இம்பிளான்ட் செய்து பலன் இல்லை. இப்படிப்பட்டவர்களுக்கு, நேரடியாக மூளை தண்டில் தான் கருவியை பொருத்த வேண்டும். அதுதான் ஏபிஐ சிகிச்சை.
மூளைத் தண்டில் நேரடியாக கருவியை பொருத்தினால் இப்பகுதியில் உள்ள நரம்புகளை தூண்டி ஒலிகளை உணரச் செய்யும் காதுகள் கேட்க ஆரம்பிக்கும்.
செவித்திறன் குறைபாடு உள்ளதா என்பதை குழந்தை பிறந்த அன்றே கண்டுபிடித்து விடலாம். ஒரு மாதத்திற்கு பின் ஸ்கேன் செய்து உறுதிப்படுத்தலாம். ஒன்றரை வயதான குழந்தைகளுக்கு ஏபிஐ கருவியை பொருத்தலாம். இது மிகவும் சிக்கலான, நுட்பமாக செய்ய வேண்டிய சிகிச்சை.
நரம்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் உடனிருக்க வேண்டும். மின்சாதன கருவி உதவியுடன் ஒலிகளை குழந்தை கேட்க ஆரம்பிப்பது முதல் படி. ஏபிஐ சிகிச்சை (ABI surgery for deaf children) பெற்ற குழந்தைகள், பேசுவதற்கும் கேட்பதற்கும் முறையான பயிற்சிகள் எடுக்க வேண்டும். பயிற்சிக்குப் பின் 40% குழந்தைகளுக்கு இயல்பாக பேச்சு வந்து விடும்.
20 சதவீத குழந்தைகள் பேச்சு வந்தாலும் சில சமயம் உதட்டு அசைவு செய்வார்கள். மீதி 20 சதவீத குழந்தைகளுக்கு பேச்சு சரியாக வராது. காரணம் பெற்றோர் முறையாக பயிற்சிக்கு அழைத்து செல்லாதது தான். எந்த அளவு முறையாக பயிற்சி செய்கின்றாரோ அந்த அளவு மொழியை கற்றுக் கொள்ள முடியும்.
காது கேட்காத குழந்தைகளுக்கு நவீன மருத்துவ தொழில் நுட்ப உதவியுடன் காது கேட்கும் திறனை இந்த சிகிச்சை மூலம் வழங்கலாம்.