உங்க வீட்ல செம்புக் கூட்டத்தில் தண்ணீர் பிடித்துக் குடிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் என உங்களுக்குத் தெரியுமா? உண்மையிலேயே செம்புக் குடங்களில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
இந்தியாவில் செம்புக்கூடங்களில் தண்ணீரை சேமித்துக் குடிக்கும் பழக்கம் பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இது பழங்கால பாரம்பரிய ஆயுர்வேதத்தில் வேரூன்றி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் பண்டைய இந்திய மருத்துவ முறையிலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விஷயம், தாமிரத்துடன் தொடர்புடைய பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கான உண்மையான காரணம் பலருக்கு தெரியவில்லை என்றாலும், அதில் மறைந்துள்ள ரகசியங்களை நாம் கொஞ்சம் ஆராய்வோம்.
தாமிரத்தில் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இவை தண்ணீரை சுத்திகரிக்க உதவும். செப்பு அயனிகள், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ் மற்றும் புஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் நீர் மூலம் பரவும் நோய்களின் அபாயம் குறைகிறது.
செப்புப் பாத்திரங்களில் சேமிக்கப்படும் தண்ணீரைக் குடிப்பது செரிமானத்திற்கு உதவும். இயற்கையாகவே செம்பு செரிமான நொதிகளின் சிறப்பை தூண்டி, உணவு எளிதாக உடைய அனுமதிக்கிறது. இதனால் நமது உடல் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்ச வழி வகுக்கும். மேலும் இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு தாமிரம் முக்கியமானது. ஒரு விஷயத்தை வேகமாகக் கற்பது, அறிவாற்றல் போன்ற மூளை செயல்முறைக்கு இது மிகவும் பயனளிக்கிறது. செப்புப் பாத்திரங்களில் சேமிக்கப்படும் தண்ணீரைக் குடிப்பது மூலமாக மூளையின் செயல்பாட்டை சிறப்பாக பராமரிக்க முடியும்.
தாமிர்தத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூட்டு வலி மற்றும் கீழ்வாதம் போன்றவற்றைப் போக்க உதவும். செப்பு பாத்திரங்களில் இருக்கும் தண்ணீரை தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடல் உபாதைகளில் இருந்து நிவாரணம் அடைய உதவும்.
ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்கத் தேவையான மெலனின், கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியில் தாமிரம் ஒரு முக்கிய அங்கமாகும். தாமிரம் கலந்த நீரைக் குடிப்பதால், முகம் பொலிவுற்று சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை குறையும் எனச் சொல்லப்படுகிறது.
தாமிரம், தைராய்டு ஹார்மோனின் உற்பத்தி மற்றும் உறிஞ்சுதலில் முக்கிய பங்கு வகிப்பதால், ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றத்தைப் பராமரித்து, உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
இப்படி, செப்புப் பாத்திரத்தில் தண்ணீரை சேமித்துக் குடிப்பதால் கிடைக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இருப்பினும் செப்புப் பாத்திரங்களில் தண்ணீரை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கக்கூடாது. தினசரி பிடித்து பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல, உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்தர உணவுத்தர செப்புப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது பாத்திரத்தை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.
தண்ணீரைத் தவிர வேறு எந்த உணவையும் தாமிர பாத்திரங்களில் சேமித்து வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை உலோகத்துடன் வினைபுரிந்து உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒன்றாக மாறிவிடலாம். எனவே தாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.