இஞ்சி பல நூற்றாண்டுகளாக பல்வேறு சமையல் மற்றும் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருளாகும். இது உணவுகளுக்கு ஒரு தனித்துவமான சுவையை சேர்க்கிறது. மேலும் இதன் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. சிலர் இஞ்சியை ஜூஸ் போல குடிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பல நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் பதிவில் அதுசார்ந்த தகவல்களை முழுமையாகத் தெரிந்து கொள்வோம்.
தினசரி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இஞ்சி சாறு குடித்து உங்களது நாளை தொடங்குவது செரிமானத்தை சிறப்பாக மாற்ற உதவும். இஞ்சியில் Gingerols மற்றும் Shogaols எனப்படும் சேர்மங்கள் உள்ளன. இவை செரிமான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவித்து அஜீரணம் மற்றும் குமட்டல் போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகளை சரி செய்யும்.
இஞ்சியில் சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இஞ்சி சாற்றை தவறாமல் உட்கொண்டு வந்தால் தொற்று, ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படாது. மேலும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளின் அறிகுறிகளை போக்கக்கூடிய பண்புகளும் இதில் உள்ளன.
ரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் இஞ்சி சாறை தினசரி காலையில் குடிப்பது நல்லது. இது அவர்களின் இன்சுலின் அளவை சீராக்கி குளுக்கோஸ் ரத்தத்தில் அதிகம் கலக்காமல் பார்த்துக் கொள்ளும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அல்லது நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தில் இருப்பவர்களுக்கும் இஞ்சி சாறு பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் உங்களது உடல் எடையைக் குறைக்க விரும்பினால் காலையில் இஞ்சி சாறு தவறாமல் குடித்து வரவும். இஞ்சியில் தெர்மோஜெனிக் பண்புகள் உள்ளன. அதாவது இது உங்கள் உடல் வெப்பநிலையை உயர்த்தி, வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான கலோரி எரிக்கப்பட்டு உடல் எடையை குறைக்க உதவும்.
இஞ்சி சாற்றில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நரம்பியல் பண்புகளைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை மூளையில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராட உதவும். இதனால் வயதாகும்போது ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் வராது. இஞ்சி சாறு குடிப்பது நினைவாற்றல், கவனம் மற்றும் ஒட்டுமொத்த மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
இருதய ஆரோக்கியத்தில் இஞ்சி நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் குறைவதால், வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பது ஆரோக்கியமான இருதய அமைப்பைப் பராமரிக்க உதவும்.
எனவே காலை வேளையில் தினசரி இஞ்சி சாறு குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது, நீங்கள் ஆரோக்கியத்துடன் என்றும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சிறந்த வழியாகும்.