பெரும்பாலான மக்கள் நவீன மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும் என்று நம்புகிறார்கள். இதில் எந்த அளவிற்கு உண்மையுள்ளது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஒருசில குறிப்பிட்ட மருந்துகளை சரியான மருத்துவரின் பரிந்துரையில்லாமல் அதிக அளவில் பயன்படுத்தும்போது சிறுநீரகம் செயலிழக்கும் வாய்ப்புகள் உள்ளன. எல்லா மருந்துகளுக்கும் இது பொருந்தாது. Non steroid anti inflammatory drugs என்று சொல்லப்படும் வலி நிவாரணிகளை குறைந்த காலம் பயன்படுத்தலாம். நம் உடலில் அடிப்பட்டு விட்டாலோ அல்லது வலி ஏற்பட்டாலோ இதை குறைந்த காலம் பயன்படுத்துவதில் தவறில்லை.
ஆனால், சிலர் இதை மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்னைகளுக்கு அதிகப்படியாக மாதக்கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு கட்டாயம் சிறுநீரக பாதிப்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. Antibiotics மருந்துகள் எடுத்துக்கொள்ளும் அனைவருக்கும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்றில்லை. ஒருசில மருந்துகள் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். Vancomycin, Amikacin, Amino glycoside பேன்ற ஆன்டி பயாடிக்ஸ் மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
வயிற்றெரிச்சல் என்று சொல்லப்படும் Acidityக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் இரண்டு வகையுள்ளது. H2 blocker, Ranitidine ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதால் பிரச்னையில்லை. இதுவே, Proton pump inhibitors என்று சொல்லப்படும் Pantoprazole, Omeprazole, Esomeprazole போன்ற மாத்திரைகளை கணக்கில்லாமல் அதிக காலம் எடுத்துக் கொண்டால் அதற்கு சிறுநீரகத்தை பாதிக்கும் தன்மை உண்டு என்று சொல்லப்படுகிறது. கட்டாயம் இந்த மருந்துகள் எடுத்துக்கொள்ள மருத்துவரின் ஆலோசனை பெற்றிருப்பது நல்லது.
கேன்சர் சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்து இயற்கையாகவே பவர் சற்று அதிகமாகவே இருக்கும். Antimetabolites மருந்துகள் சிலசமயம் கிட்னியை செயலிழக்க வைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும், மருத்துவர்கள் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு கணித்து இந்த மருந்துகளை சிகிச்சைக்காக நோயாளிகளுக்குக் கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சில வகையான BP மருந்துகள் Diuretic medicines, ACE Inhibitors இவை எல்லோருக்கும் சிறுநீர் பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும், BP மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரையில்லாமல் எடுக்கக் கூடாது. அதுமட்டுமில்லாமல் மனநலப் பிரச்னை, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளுக்கு Rhabdomyolysis என்னும் தசைப்பிரச்னையை ஏற்படுத்தி அதனால் கிட்னி செயலிழக்க வாய்ப்பு உள்ளதால், இதுபோன்ற மருந்துகளை சுயமாக வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.
சிலர் சுயமாக கடைகளில் மருந்துகளை வாங்கி மாதக்கணக்கில் பயன்படுத்துவார்கள். அவர்களெல்லாம் இதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். நாம் பயன்படுத்தும் எல்லா மருந்துகளுமே கிட்னியை பாதிப்பதில்லை. இதையும் நினைவில் வைத்துக்கொண்டு மருந்துகளை அளவாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.