பொதுவாக, மக்கள் விருந்துக்குப் போகும்போது சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், பழங்கள், ஸ்வீட் போன்றவை சாப்பிடுவார்கள். இது செரிமானத்திற்கு உதவுவதாக சொல்லப்படுகிறது. இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று இந்தப் பதிவில் காண்போம்.
பாரம்பரியமாக நமது உணவு முறையில் சாப்பிட்டதும் இனிப்பு சாப்பிடுவது சில தோஷங்களை நீக்குவதாக சொல்லப்படுகிறது. எனவே, சாப்பிட்டதும் இனிப்போ அல்லது பாயசமோ சாப்பிடுவது நம்முடைய வழக்கம்.
நம் உடலில் செரிமானம் அதிகமாக நடைபெற வேண்டும் என்றால், Digestive enzymesஐ சற்று அதிகமாக சுரக்க வைக்க வேண்டும். Digestive enzymes நம்முடைய வாய், வயிறு, கணையம், கல்லீரல் ஆகியவற்றில் இருந்து சுரக்கிறது. இது மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்துக்களை ஜீரணமாக்க உதவுகிறது.
நாம் எடுத்துக்கொள்ளும் இனிப்பு பொருட்களுக்கு Digestive enzymesஐ துண்டக்கூடிய தன்மை கிடையாது. ரசம், இஞ்சி டீ போன்றவற்றில் இருக்கும் Spices செரிமான நொதிகளை தூண்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இனிப்பு சாப்பிடுவது ஜீரணத்திற்கு கண்டிப்பாக உதவாது.
பெரும்பாலான மக்களுக்கு உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடுவது Psychological satisfactionஐ கொடுக்கும். இனிப்பு சாப்பிடுவது என்பது நமக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும். நன்றாக சாப்பிட்டதற்கான மனநிறைவைக் கொடுக்கும்.
இதுபோல இனிப்பு எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்குமா? என்று கேட்டால், அது இனிப்பை எவ்வளவு எடுத்துக் கொள்கிறீர்கள், எத்தனை முறை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்திருக்கிறது. எப்போதாவது கல்யாண விருந்துக்கு போகும்போது சாப்பிட்டதும் இனிப்பு சாப்பிடுவது என்பது ஏற்புடையதாகும். இதுவே, தினமும் உணவுக்குப் பின்பு இனிப்பை எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தால் அது உடலுக்கு நல்லதல்ல.
இனிப்புகள் மிக வேகமாக இன்சுலின் தன்மையை அதிகரிக்கச் செய்யும். இது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை, உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்லதில்லை. மாவுச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டு அத்துடன் இனிப்புகளை எடுப்பது உடலில் கொழுப்பை அதிகரிக்கும்.
எனவே, சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை. மேலும், இது பற்களையும் பாதிக்கும். இதனால் பற்சொத்தை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, சாப்பிட்டவுடன் இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் பழங்கள் சாப்பிடுவது சிறந்ததாகும்.