

குழந்தையின் லேசான உபாதைகளுக்கும் ஆபத்தான அறிகுறிகளுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு, சரியான நேரத்தில் மருத்துவ உதவி அழிப்பது எப்படி என்பதை விளக்குகிறார் குழந்தை நல மருத்துவர் க. இராவணன் M.D
ஒரு காலத்தில் குழந்தை நோயுற்றால், நோயைக் கண்டறிந்து மருந்து கொடுத்து குணப்படுத்துவது மட்டுமே மருத்துவத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. இன்று குழந்தை மருத்துவம் அதைவிட பரந்த பார்வையையும் விரிவான நோக்கங்களும் கொண்டுள்ளது. நோய் மீண்டும் வராமல் தடுப்பது, ஆரோக்கியமாக வளரச்செய்வது, நோய் வந்தால் விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, குழந்தையின் மனநலம் மற்றும் குடும்பச் சூழலையும் கவனிப்பது, சமூக விழிப்புணர்வு உண்டாக்குவது என முழுமையான அணுகுமுறைக்கு மருத்துவம் முன்னேறியுள்ளது.
மருத்துவமனை என்றால் நோயாளியை மட்டும் கவனிக்கும் இடமா?
இன்றைய குழந்தைகள் நல மருத்துவமனை, குழந்தைக்கு மருந்து கொடுக்கும் இடமாக மட்டும் இருக்கக் கூடாது. குழந்தைக்கு அச்சம் தராத வண்ணமயமான சூழல், பெற்றோருக்கு தெளிவான விளக்கம், பாதுகாப்பான சிகிச்சை மற்றும் குடும்பத்தின் பங்கேற்பு ஆகியவை சிகிச்சையின் தரத்தை உயர்த்துகின்றன. குழந்தையின் தேவைகளை மையமாகக் கொண்ட மருத்துவப் பராமரிப்பே நவீன அணுகுமுறை.
நோய் வந்த பிறகுதான் மருத்துவரை அணுக வேண்டுமா?
இல்லை. தடுப்பு மருத்துவமே சிறந்த மருத்துவம். தடுப்பூசிகளைத் தவறாமல் போடுதல், சத்தான உணவு, தாய்ப்பால், தூய்மையான குடிநீர், சுகாதாரம், முறையான வளர்ச்சி கண்காணிப்பு ஆகியவை பல நோய்களைத் தடுக்க உதவுகின்றன. குழந்தை நன்றாக இருக்கும்போதே மருத்துவ ஆலோசனை பெறுவது, பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும்.
உடல் நலம் மட்டும் பார்த்தால் குழந்தை முழுமையாக ஆரோக்கியமாகிவிடுமா?
இல்லை. வளர்ச்சி என்பது உயரமும் எடையும் அதிகரிப்பது மட்டுமல்ல. மொழி, அறிவாற்றல், உணர்ச்சி, சமூகத் தொடர்பு, நன்நடத்தை ஆகியவையும் குழந்தையின் ஆரோக்கியத்தின் பகுதிகளே. பாதுகாப்பான குடும்பச் சூழல், விளையாட்டு, உரையாடல், அன்பான உறவுகள் ஆகியவை மூளை வளர்ச்சிக்கும் மனநலத்திற்கும் முக்கியமானவை.
நோய் வந்தால் வீட்டிலேயே பார்த்துக் கொண்டிருக்கலாமா?
சாதாரண சளி, லேசான காய்ச்சல் போன்றவற்றில் சரியான வீட்டு பராமரிப்பு மட்டுமே போதுமானதாக இருக்கலாம். ஆனால் மூச்சுத்திணறல், நீரிழப்பு, தொடர்ந்து வாந்தி, வலிப்பு, மயக்கம், அதிக சோர்வு, குழந்தையின் இயல்பான நடத்தையில் திடீர் மாற்றம் போன்ற ஆபத்து அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ உதவி பெற வேண்டும். நோயின் தீவிரத்தை பெற்றோர் ஊகிப்பதைவிட, தேவையான நேரத்தில் மருத்துவரை அணுகுவதே பாதுகாப்பானது.
நவீன பரிசோதனைகள் எல்லா குழந்தைகளுக்கும் தேவையா?
கண்டிப்பாக இல்லை. காந்த அதிர்வு படப்பரிசோதனை, கணினி வழி படப்பரிசோதனை, இரத்தப் பரிசோதனைகள் போன்றவை மருத்துவத் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட வேண்டும். சரியான நோயறிதலுக்கு தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது; ஆனால் பரிசோதனை முடிவுகளை மட்டும் பார்த்து குழந்தையை மதிப்பிடாமல், மருத்துவ அறிகுறிகள் மற்றும் உடல் பரிசோதனையுடன் இணைத்தே முடிவு எடுக்க வேண்டும்.
குழந்தையின் மனநலத்தையும் மருத்துவர் கவனிக்க வேண்டுமா?
நிச்சயமாக. பயம், பதற்றம், தூக்கக் குறைவு, பள்ளிச் சிரமம், சமூகத் தனிமை, தொடர்ந்து ஏற்படும் நடத்தை மாற்றங்கள் போன்றவை குழந்தையின் ஒட்டுமொத்த நலனில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 'குழந்தைதானே… மறந்துவிடும்' என்று அலட்சியப்படுத்தாமல், மாற்றம் தொடர்ந்து இருந்தால் ஆலோசனை பெறுவது நல்லது. குழந்தையின் உடலும் மனமும் தனித்தனியானவை அல்ல.
மருத்துவ சிகிச்சையில் பெற்றோருக்கும் பங்கு இருக்கிறதா?
மிக முக்கியமான பங்கு உள்ளது. குழந்தையின் நோய் வரலாறு, முன்பு பயன்படுத்திய மருந்துகள், ஒவ்வாமைகள், தடுப்பூசி விவரங்கள் ஆகியவற்றை மருத்துவரிடம் தெளிவாகச் சொல்ல வேண்டும். மருத்துவர் கூறிய மருந்துகளை சரியான அளவு மற்றும் சரியான நேரத்தில் தர வேண்டும். சந்தேகம் இருந்தால் கேட்க வேண்டும். இணையத்தில் கிடைக்கும் தகவலை வைத்து சிகிச்சையை மாற்றக் கூடாது. குடும்பத்தின் பங்கேற்பு குழந்தை பராமரிப்பின் முக்கிய அங்கமாகும்.
முடிவுரை
நேற்றைய மருத்துவம் – நோயை எதிர்த்தது.
இன்றைய குழந்தை மருத்துவம் – நோயைத் தடுப்பதோடு, குழந்தையின் முழுமையான வளர்ச்சியையும் பாதுகாக்கிறது.
மருத்துவமனைக்குச் செல்வது நோய் வந்தபிறகு மட்டும் அல்ல… குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கான பயணத்திலும் பெற்றோரின் துணையாக மருத்துவர்கள் திகழ வேண்டும்.
'குழந்தையை நோயிலிருந்து காப்பது சிகிச்சை, குழந்தையை ஆரோக்யமான மனிதராக வளரச் செய்வது முழுமையான குழந்தை நல மருத்துவம்!'