சூரத்தாவரை இலை + கடுக்காய் + விளக்கெண்ணெய்!
நம் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் குடல் ஆரோக்கியம் மிக மிக அவசியம். ஏனெனில் குடல் தான் எல்லா உறுப்புகளுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி கொடுக்கிறது. குடலில் உள்ள நச்சுக்களை எப்படி இயற்கையான முறையில் வெளியேற்றலாம் என்பதை பார்க்கலாம்....
இன்றைய கால கட்டத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பது இல்லாமலே போய் விட்டது. பீட்சா, பர்கர், சிக்கன் என்று எதையாவது சாப்பிடுகிறோம். இப்படியே கொழுப்பை சேர்த்து சேர்த்து உடல் பருமன் ஏற்பட்டு, குடல் ஆரோக்கியம் எல்லாம் கெட்டு போய் விடுகிறது. குடலில் தங்கும் உணவு நச்சுக்களால் சிலருக்கு சீக்கிரமே குடல் புற்று நோய், மலம் கழிக்கும் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன.
நம் குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம் உணவு நன்றாக செரிக்கப்படும். ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உறிஞ்சப்படும். மற்ற உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க வழி வகுக்கும்.
இயற்கை முறையில் பாட்டி வைத்தியத்தின் மூலமாக பேதிக்கு மாத்திரை போடாமலே மிக எளிதாக அதே சமயம் பக்க விளைவு எதுவும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் வயிற்றை சுத்தம் செய்யலாம்.
வாங்க பார்க்கலாம்... பாட்டியின் சூரத்தாவரை இலை கசாயம்..
இந்த கசாயத்திற்கு ஒரு கைப்பிடி அளவு சூரத்தாவரை இலை, மூன்று கடுக்காய் மற்றும் சிறிதளவு விளக்கெண்ணெய் தேவைப்படும். இவை மூன்றும் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
முதல் நாள் இரவே ஒரு பாத்திரத்தில் 1 ½ glass தண்ணீர் ஊற்றி அதில் சூரத்தாவரை இலையையும், கடுக்காயை நன்றாக உடைத்தும் போடவும். பிறகு அதை நன்றாக கொதிக்க வைத்து மூடி வைக்கவும். இது ஒருவருக்கான அளவு.
மறுநாள் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிய பிறகு வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடிக்கும் பதத்திற்கு மறுபடியும் சூடு செய்து வடிகட்டி, பிறகு இரண்டு துளி சுத்தமான விளக்கெண்ணையை ஊற்றி குடிக்க வேண்டும். பக்கத்தில் சிறிதளவு உலர்ந்த நார்த்தங்காயை வைத்துக் கொள்ளுங்கள், அவ்வப்போது அதை நாக்கில் தடவிக் கொண்டு குடிக்கவும்.
குடித்த பிறகு நன்றாக குதிக்கவோ அல்லது நடக்கவோ செய்யவேண்டும். இல்லை என்றால் கசாயம் கீழே இறங்காமல் மேலே வந்து விடும்.
கசாயம் குடித்த பிறகு அன்று உடனடியாக குளிக்க கூடாது.
குடித்த சில மணி நேரங்களிலேயே கசாயம் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.
நான்கைந்து முறை motion போனவுடன் கொஞ்சம் tea குடிக்க வேண்டும்.
பிறகு நன்றாக குளித்து விட்டு அன்று மிளகு சீரக ரசம் வைத்து சாதத்தோடு சாப்பிட வேண்டும்.
எதாவது ஒரு காயை அதிகம் எண்ணெய் ஊற்றாமல் செய்து அத்துடன் சாப்பிடலாம்.
அன்று மதியம் மோர் சாப்பிடக் கூடாது.
கசாயத்தை குடித்து விட்டு முழு வயிறும் சுத்தமாகி இருப்பதால் சாப்பிட்ட பிறகு நன்றாக உறக்கம் வரும்.
அன்று இரவு லைட்டாக இட்லியோ தோசையோ எதாவது சாப்பிடுங்கள்.
குறிப்பு: இந்த கசாயத்தை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குடித்தால் போதுமானது. மேலும் மழை காலத்தில் இதை கண்டிப்பாக குடிக்க கூடாது. மழை பெய்யும் தினத்தில் குடித்தால் கசாயம் சரியாக வேலை செய்யாது. அதன் காரணமாக வயிற்று வலி வரும். கசாயம் குடிக்கும் தினத்தில் வெளியே எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருப்பது நல்லது.