

"ஒலிகளை கேட்பதற்காக மட்டுமே நம் காதுகள் உள்ளன என்று பலர் நினைக்கிறோம். ஆனால் நாம் சமநிலையாக நிற்பதற்கும் காது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காது வழியாக ஒலிகளை கேட்பதால்தான் நமக்கு சரியாக பேசவும் முடிகிறது. இவ்வளவு முக்கியமான உறுப்பான காதில் ஏற்படும் சிறிய பிரச்னைகளையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விடுகிறோம். வலி அல்லது வீக்கம் அதிகமான பிறகே மருத்துவரை அணுகுகிறோம்," என்கிறார் மருத்துவர் டாக்டர் பிரகதீஷ்.
இந்த நிலையில், காதுகளில் ஏற்படும் சில அடிப்படை பிரச்னைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் (Common Ear Problems) குறித்து டாக்டர் பிரகதீஷ் சொல்வதை இந்த பதிவில் பார்க்கலாம்.
காது இரைச்சல்
சாதாரண பேச்சின் ஒலி 30 முதல் 35 டெசிபல் இருக்கும். இந்த அளவு 85 டெசிபலுக்கு மேல் போகும் போதுதான் காது கேளாமை, இரைச்சல் ஏற்படுகிறது. காதில் ஏற்படும் இரைச்சலை டினிடஸ் பிரச்னை என்பர். வெளிக்காது, உட்காது, நடுக் காதில் வரலாம். ஒரு சிலருக்கு அடைப்பினாலும் இரைச்சல் கேட்கும். காதில் தண்ணீர் புகுந்தாலும் இரைச்சல் இருக்கும். உள்காதில் நிணநீர் அதிகமாக இருந்தாலும் இந்தப் பிரச்னை இருக்கும்.
தீர்வாக காது இரைச்சலை சவுண்ட் தெரபி மூலம் குறைக்க முடியும். இதில் காதில் ஹெட்போன் போன்ற கருவி பொருத்தப்படும். அதில் முன்பே பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கும். இரண்டு விதமான குரல்கள் கலந்து, ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டிருந்த காதில் இருந்த இரைச்சல் ஒலி குறைய ஆரம்பிக்கும். தொடர்ந்து பத்து நாட்களுக்கு இந்த தெரப்பியை மேற்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
காதில் சீழ் வடிதல்
காது தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் ஒரு அவயவம். காது மெழுகு போன்ற பொருளை உருவாக்கி தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும். இந்த மெழுகை நாமே அகற்றுவதாகக் நினைத்து காதில் ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றை விட்டு சுத்தம் செய்வோம். கூரான பொருட்கள் காதை உரசி புண்ணை ஏற்படுத்தலாம். இதனால் புண் சீழ் பிடித்து விடும். இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும். மேலும், காதில் அடிபடுதல், சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் காதில் சீழ் வடிதல் பிரச்சனைகள் வரலாம். சளி,பாக்டீரியா தொற்று, சுகாதாரமற்ற சூழ்நிலைகள் கூட காதில் சீழ் வடிதல் பிரச்னைகளை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், சீழ் வடிவதால் நாற்றம், காதுகளில் வலி போன்றவை ஏற்படலாம். இதற்கு வீட்டு வைத்தியம் பார்க்காமல் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
இது போன்றே தலைசுற்றல், மயக்கம் சிலருக்கு இருக்கும். இதற்கும் பல காரணங்கள் உள்ளன. மருந்து மாத்திரைகள் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும்.
சிலருக்கு திரும்பும்போதும், எழுந்திருக்கும் போதும் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதை பொஷிஷனல் வெர்டிகோ என்று சொல்வோம். இதற்கு உட்கார்ந்து ஓய்வு எடுத்தாலே சரியாகி விடும். ஓய்வெடுக்க நல்லகுணம் கிடைக்கும். நிணநீர் அளவை பரிசோதிக்க ஸ்கேன் செய்து அதற்கு தகுந்தவாறு சிகிச்சை அளிக்கலாம்.
காதுகளை பாதுகாக்க சில குறிப்புகள்
காதுக்குள் குச்சி, பட்ஸ் போட்டு சுத்தம் செய்யக் கூடாது.
80 முதல் 85 டெசிபல் வரை தான் நம் காதுக்கு சப்தத்தை தாங்கும் சக்தி உண்டு. அதற்கு அதிகமான சப்தத்தை தவிர்ப்பது நல்லது.
சைனஸ், டான்சில், தாடை எலும்பில் பிரச்னை ஏற்பட்டாலும் காது பாதிக்கும். அதை பெரிதாக விடாமல் வைத்தியம் மூலம் சரிசெய்வது அவசியம்.
அதிக ஒலி இல்லாமல் மெல்லிய இசையை கேட்டு பழக வேண்டும். இரு காதுகளிலும் மாற்றி செல்போனில் பேச பழக வேண்டும். காதில் அடிக்கடி டிராப்ஸ் போடக் கூடாது. இதனால் நோய் தொற்று, அரிப்பு ஏற்படலாம்.
இதுபோல் காது தொடர்பான பல பிரச்சனைகளுக்கு ஆரம்ப நிலையிலேயேகாது மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.